தரமான படங்களை வெளியிடுவதில் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் முன்னோடியாக இருந்து வருகிறது.
இதுவரையிலும் இந்த நிறுவனம் வெளியிட்ட ‘வழக்கு எண் 18/9’, ‘கோலி சோடா’, ‘மஞ்சப்பை’, ‘சதுரங்க வேட்டை’ ஆகிய படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. அதைத் தொடர்ந்து திருப்பதி பிக்சர்ஸ் அடுத்ததாக வெளியிடும் ‘ஜிகினா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளிவர உள்ளது.
இது பற்றி பேசிய இயக்குநர் லிங்குசாமி, “எங்களது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியாகும் படங்களின் வெற்றி எதுவும் அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல. நல்ல கதைகளையும் அதை சரி வர இயக்கும் இயக்குநர்களையும் இனம் பிரித்து அறிமுகம் செய்வதில்தான் எங்களது வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.
இந்த ‘ஜிகினா’ படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் விஜய் வசந்த். அவர் இந்தப் பாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய அளவுக்கு யாரேனும் பொருந்தி இருப்பார்களா என்பது எனக்கு தெரியாது. அவருக்கு ஜோடியாக சானியா தாரா நடித்திருக்கிறார். மேலும் சிங்கம் புலி, ரவி மரியா, ‘கும்கி’ அஷ்வின், ‘டாடி’ செந்தில், சுகு வெங்கட், குட்டி ஸ்ரீதேவி மற்றும் ஆன்சன் பால் ஆகியோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
புதிய இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஷ் சிறப்பாக இசை அமைத்து உள்ளார். முன்னாள் பிரபல ஒளிப்பதிவாளர் ரங்காவின் மகனும் ஒளிப்பதிவாளருமான பாலாஜி ரங்கா இந்த படத்துக்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா பட தொகுப்பு செய்துள்ளார்.
‘ஜிகினா’ இன்றைய காலக்கட்டத்துக்கு மிகவும் முக்கியமான படமாகும். பெருகி வரும் சமூக வலைத்தள இடர்ப்பாடுகள் பற்றியும், அதன் வாயிலாக பெருகும் குற்றத்தைப் பற்றியும், அறிமுகம் இல்லாத காதல் ஏற்படுத்தும் விளைவுகளையும், மிகவும் ஜனரஞ்சகமாக இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் எனது நண்பரும், இயக்குநருமான ரவி நந்தா பெரியசாமி.
இளைய தலைமுறையினருக்கு இது படமாக மட்டும் அல்ல; பாடமாகவும் அமையும்.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி இந்த ‘ஜிகினா’ திரைப்படம் வெளிவர உள்ளது..” என்றார் இயக்குநர் லிங்குசாமி.