தமிழில் முக்கியமான எழுத்தாளர்களைக் கொண்டாடும்விதத்தில் அந்த எழுத்தாளர்களின் பிறந்த நாளில் தங்களது நகைக் கடையில் செய்கூலி சேதாரம் இல்லாமல் நகைகளை விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது ஒரு நகைக்கடை.
தனது நட்சத்திர நடிகரின் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவது, தனது அபிமான நடிகரின் பட வெளியீட்டு மகிழ்ச்சியில் ஓடும் லாரியில் ஏறி நடனமாடி விழுந்து உயிர் விடுவது போன்ற சம்பவங்கள் நடக்கும் தமிழ்நாட்டில்தான் இதுவும் நடக்கிறது என்கிற போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
மக்களிடம் பிரபலமாக இருக்கும் திரை நட்சத்திரங்களைவிட தமிழ் படைப்புகளை எழுதும் படைப்பாளிகளை உயர்த்திப் பிடிக்கும்வகையில் அவர்களது பிறந்த நாளில் இந்தச் சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது நிலக்கோட்டையில் உள்ள மு.வ. மாணிக்கம் அண்ட் கோ தங்க நகை மாளிகை.
நிலக்கோட்டை என்கிற ஊர் மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ளது. திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்த நிலக்கோட்டை ஒரு பேரூராட்சியாகும்.
எப்படி இந்த யோசனை தோன்றியது என்று மு.வ.மாணிக்கம் தங்க நகை மாளிகை உரிமையாளர் ஸ்ரீதரிடம் பேசியபோது, “காலத்தைக் கடந்தும் வாழ்பவர்கள் நாட்டுக்கு உழைத்த தலைவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர்கள். அதேபோல் தங்கள் படைப்புகளின் மூலம் காலத்தை கடந்து நிற்பவர்கள் எழுத்தாளர்கள்.
அந்த வகையில் நாங்கள் அண்ணா, காமராஜர், பெரியார் போன்ற தலைவர்கள் பிறந்த நாளில் இப்படிச் செய்கூலி சேதாரம் இல்லாமல் சலுகைகள் வழங்கினோம். அதன்பிறகு அறிவியல் அறிஞர்களின் பிறந்த நாளில் இப்படி வழங்கினோம். இப்போது அந்த வரிசையில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறோம்.
இந்த ஆண்டு முழுக்க எழுத்தாளர்கள் பிறந்த நாட்களில் நாங்கள் இந்தச் சலுகையை வழங்குகிறோம். அதற்கு முதன்முதலாக இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பிறந்த நாளில் இந்த கொண்டாட்டத்தைத் தொடங்குகிறோம்..” என்றார்.
எனவே உலக எழுத்தாளராக அவர் உயர்ந்திருக்கிறார். அந்த வகையில் முதலில் ஓர் இலங்கை எழுத்தாளரைக் கொண்டு தொடங்குவது என்று முடிவு செய்து அவரது பிறந்த நாளன்று சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளோம்.
இந்த சலுகைத் திட்டத்தினால் வியாபாரம் ஆகிறதா? லாபமா நட்டமா? என்று கேட்கிறார்கள். முக்கியமாக எங்களுக்குச் சிறிது பொருளாதார இழப்பு ஏற்படும்தான். மற்ற நகைக் கடைக்காரர்கள் எல்லாம் 916 நகைகளுக்கு செய்கூலி சேதாரம் என்று 10 லிருந்து 20 சதவிகிதம்வரை வாங்கும்போது நாங்கள் மட்டும் எதுவுமே வாங்காமல் வாங்காமல் இந்த விற்பனையைச் செய்கிறோம்.
ஏனென்றால், நாட்டுக்கு உழைத்த தலைவர்களையும் இப்படிப்பட்ட எழுத்தாளர்களையும் நாங்கள் உயர்த்திப் பிடிக்கும்போது அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் அவர்களின் புகழ் பரப்பிப் பேச வைக்கிறோம்.
எழுத்தாளர்கள் பிறந்த நாளில் அவர்களின் பெருமையைக் கூறி அவர்களைப் பற்றி மக்களிடம் பேச வைக்கிறோம். வெறுமனே அவர்கள் பெயரில் இந்தச் சலுகையை மட்டும் வழங்காமல் அவர்கள் எழுதிய படைப்புகளை மக்களுக்குச் சலுகை நாளில் இலவசமாக வழங்குகிறோம்.
ஒரு சிறு நகை பில் போட்டால்கூட அவர்களுக்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் படைப்பு இலவசமாக வழங்கப்படும். இப்போது தொடங்கி இருக்கும் எழுத்தாளர்களைக் கொண்டாடும் அந்நாட்களில் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. இதை நாங்கள் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் ஒரு சமுதாயக் கடமையாகவும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்..” என்றார்.
யார் பிறந்தநாளில் அதிகமான நகை விற்பனையானது என்று கேட்டபோது, “சொன்னால் நம்ப மாட்டீர்கள். பெரியார் பிறந்த நாளில்தான் பெரிய அளவில் எங்கள் கடையில் நகைகள் விற்பனையானது. அந்த அளவிற்கு அவர் பேசப்படும் ஒரு தலைவராக இருக்கிறார் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
அ.முத்துலிங்கம் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 19-ஐ முன்னிட்டு ஜனவரி 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் வழங்கும் இந்தச் சலுகை கொண்டாட்டத்தை இந்த ஆண்டு முழுதும் பல்வேறு எழுத்தாளர்களைக் கொண்டாடும் வகையில் நாங்கள் வடிவமைத்திருக்கிறோம். அதற்குரிய ஒரு காலண்டரையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
இது பற்றி கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திடம் கேட்டபோது, “நான் பெரிய திரைப்பட நடிகர் இல்லை. அரசியல்வாதி இல்லை. பெரிய தொழிலதிபரும் இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவருமில்லை. வேறு எந்த வகையிலும் அரசியல் செல்வாக்கு கொண்டவருமில்லை.