ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக ‘நோ டைம் டூ டை’ என்னும் திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார்.
இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆண்டில் டிசம்பர் மாதம் துவங்கிய கொரோனா பரவலால் படத்தின் வெளியீடு பல முறைகள் தள்ளிப் போயின.
இந்த நிலையில் சமீபத்தில் வருகிற 2021 ஏப்ரல் மாதம் ‘நோ டைம் டூ டை’ படம் வெளியாகும் என்று அறிவித்தனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், தற்போது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவலால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளாதல், படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக வருகிற 2021, அக்டோபர் மாதம் ‘நோ டைம் டூ டை’ படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியானது. இதனையும் தயாரிப்பு தரப்பில் மறுத்தனர். உறுதியாக இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே நாளில் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.