தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியினரின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
நீதிமன்ற வழக்காடலைக் கதைக் களமாகக் கொண்ட இந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, தலைக்கு மேல் ஒழுங்காக ஒரு கூரையில்லாத, ஆனால் எளிமையில் சந்தோஷம் காணும் ஒடுக்கப்பட்ட அப்பாவிப் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதையை இந்த ‘ஜெய் பீம்’ படம் விவரிக்கிறது.
சமூக அநீதியும், மனிதர்களின் மிருகத் தன்மையும் இந்த அப்பாவி உயிர்களை பாதிக்க, வழக்கறிஞர் சந்துரு இவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறார். விறுவிறுப்பான, மிகத் தீவிரமான ஒரு கதைக்கரு மனதைப் பிசையும், அதே சமயம் நெகிழவும் செய்யும் ஒரு களத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கான முன்னோட்டத்தை இந்த டீஸர் காட்டியுள்ளது. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பை ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கவனிக்க, ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – எஸ்.ஆர்.கதிர், படத் தொகுப்பு – ஃபிலோமின் ராஜ், கலை இயக்கம் – கதிர்.
வரும் நவம்பர் 2-ம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது..