full screen background image

‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..!

‘இருட்டு’ படத்தில் முஸ்லீம் பேயின் கதை சொல்லப்படுகிறதாம்..!

Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘இருட்டு’.

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி. முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுந்தர்.சி.க்கு ஜோடியாக சாக்சி சவுத்ரி என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். மேலும் சாய் தன்ஷிகா, விமலா ராமன், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்கம் – V.Z.துரை, வசனம் – இந்திரா சௌந்தரராஜன், இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு – R.சுதர்ஷன், கலை இயக்கம் – A.K.முத்து, பாடல்கள் – மோகன் ராஜன், சண்டை இயக்கம் – தினேஷ் காசி, ஒலியமைப்பு – விஜய் ரத்தினம், ஒலிக் கலவை – A.M.ரஹமத்துல்லா, புகைப்படங்கள் – சாரதி, ஒப்பனை – பாரி வள்ளல், விஷுவல் எஃபெக்ட்ஸ் – White Lottus, டிசைன்ஸ் –  ராஜா, விருமாண்டி, மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு மேற்பார்வை – R.S.வெங்கட், இணை தயாரிப்பு – A.P.V.மணிமாறன், தயாரிப்பு – Screen Scene Media Entertainment Pvt ltd.

வரும் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

indira soundarrajan

இந்த நிகழ்வில் படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசும்போது, “இருட்டு.’  இந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டுதான் . வெளிச்சம் வந்து விட்டுப் போகிறது அவ்வளவுதான். இந்தப் பெயரை சொல்லி நான் இப்படத்தில் பங்கு கொண்டிருக்கிறேன் எனச் சொல்லும்போது இருட்டு உங்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வரட்டும் என வாழ்த்தினார்கள்.  

எல்லோரும் தங்கள் படத்தை பொதுவாக வித்தியாசமாக இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால் நான் இப்படத்தில்  அதை உண்மையாக சொல்கிறேன்.

ஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது..? ஏன் கொலைகள் நடக்கின்றன.. என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் துப்பறியும் இன்ஸ்பெக்டராக வாழ்ந்திருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தின் இயக்குநர் துரை வெற்றி பெற வேண்டும் என்று முழு மூச்சாக உழைப்பவர். இதுவரை வந்த ஹாரர் படங்களில் உள்ள கிளிஷேக்கள் இந்தப் படத்தில் இருக்கவே கூடாது என்பதில் இயக்குநர் துரை உறுதியாக இருந்தார். ஒவ்வொன்றும் புதிதாக இருக்க வேண்டும் என  கடும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் வேலை செய்திருக்கும் ஒவ்வொருவரிடமும் முழுமையான வேலையை வாங்கியுள்ளார்.

சுந்தர் சி. எனக்கு பிடித்த நடிகர். காவல் அதிகாரி பாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தின் 120 நிமிடத்தில் 100 நிமிடங்கள் உங்களை பதைபதைப்பில் வைத்திருக்கும் திரில்லர் படமாக இது இருக்கும்.

வரும் டிசம்பர் 6-ம் தேதி இத்திரைப்படம் வெளிவருகிறது. ‘இருட்டு’ எல்லோருக்கும் வெளிச்சத்தை கொண்டு வரும். இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

IMG_0035

ஒலியமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஜய் ரத்தினம் பேசும்போது, “படத்தில்   வழக்கமான கிளிஷேக்கள் எதுவும் வரக் கூடாது என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார். எங்களுடன் இணைந்து ஒவ்வொரு சின்ன சின்ன ஒலியையும் வடிவமைப்பதில்  உதவினார். படம் புதிதாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறோம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்…” என்றார்.

இசையமைப்பாளர் கிரிஷ் பேசும்போது, “அவள்’ படத்திற்குப் பிறகு இது என்னுடைய இரண்டாவது பேய் படம். இயக்குநர் துரை சாரை என்னுடைய கல்லூரி காலத்திலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் வேலை செய்ய முடிந்ததில் மிகுந்த சந்தோஷம்.

kirish

பேய் படத்தில் என்ன புதிதாக செய்யலாம் என ஆராய்ச்சி செய்து வேலை செய்திருக்கிறோம். கிறிஸ்து, இந்து பேய்கள் பற்றி படங்கள் வந்திருக்கிறது. ஆனால் முஸ்லீம் பேய் பற்றி படம் வந்ததில்லை. இது பேய் பட ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்.

இயக்குநர் துரை சாருக்கு இசையில்  மிகப் பெரிய  அறிவு இருக்கிறது. அவர் இருந்தால் இசை இன்னும் அற்புதமாக இருக்கும். இப்போது படம் திரைக்கு வரவிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்…” என்றார்.

vimala raman

நாயகி விமலா ராமன் பேசியது பேசும்போது, “எனக்கு இந்தப் படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தைத் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. சுந்தர் சி. சார் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப் படமே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும் நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி…” என்றார்.

தயாரிப்பாளரும், நடிகருமான V.T.V.கணேஷ் பேசும்போது, “இந்த ‘இருட்டு’ படத்தில் நடித்ததே புதிய அனுபவம்தான். சுந்தர் சி.யிடம் ஒரு படம் செய்யலாம் என்று கேட்கத்தான் போனேன்.  அவரோ ‘இப்ப நான் படம் இயக்கவில்லை. ஏதாவது படத்தில் நடித்துக் கொடுக்கிறேன்..’ என்று சொன்னார். அவரிடம் இந்தப் படத்தின் இயக்குநரான V.Z.துரையை அறிமுகப்படுத்தினேன்.

vtv ganesh

கதையைக் கேட்டுவிட்டு ‘சூப்பர்’ என்றார் சுந்தர். ‘பெரிய படமாக செய்யலாம்’ என்றேன். ‘அதிலும், வழக்கமான படமாக இருக்கக் கூடாது’ என்றும் சொன்னேன். இயக்குநர் V.Z.துரை புதிதாக இஸ்லாம் சம்பந்தமாக ஒரு விசயத்தை பிடித்தார். அது பக்காவாக இருந்தது. ஊட்டியில் ஷுட்டிங் நடத்தினோம். நாயகன் சுந்தர் சி. வீட்டுக்கே போகவில்லை. அவ்வளவு டெடிக்கேட்டாக உழைத்தார். இயக்குநர் துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படம் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்…” என்றார்.

IMG_0041

நாயகி சாக்‌ஷி சௌத்ரி பேசும்போது, “இந்தப் படம் நான்  நீண்ட நாளாக  எதிர்பார்த்திருக்கும் கனவு. இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி.  சுந்தர் சி. சாருடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இப்படத்தின் கதை புதுமையாக இருந்தது. படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி…” என்றார்.

இயக்குநர் V.Z.துரை பேசும்போது, “இப்படத்தின் மூலமாக எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் சுந்தர் சி. சாரின் நட்பு. V.T.V.கணேஷ் சார்தான் இப்படம் உருவாக காரணம். அவர்தான் இப்படத்தை உருவாக்கினார்.

v.z.durai

சுந்தர் சார் ‘பேய் படம் செய்யலாம்’ என சொன்னபோது நான், ‘வேண்டாம் சார். எனக்கு பயமா இருக்கு. நான் பண்ண மாட்டேன்’ என்றேன். ‘அப்ப நீங்கதான் இதுக்கு சரியான ஆள். உலகின் மிகப் பெரிய ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வானும் பேய்களுக்குப் பயப்படுபவர்தான்’ என்று சொல்லி என்னைச் சமதானப்படுத்தினார் சுந்தர் ஸார்.

அவரே ஒரு ஹாரர் பட இயக்குநர்தான். அவர் படங்கள் அனைத்துமே கமர்ஷியல் கலந்து இருக்கும்.  அதோடு, அவருடைய ஐடியாக்கள் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். என்னுடையது வேறு மாதிரி இருக்கும். ஆனால் அவரோ ‘இந்தப் படம் முழுக்க, முழுக்க பயப்படற மாதிரியான படமா இருக்கணும்.. நீங்க டைரக்ட் பண்ணுங்க… நான் நடிக்கிறேன்..’ என்றார். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப் படத்தில் உழைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது விசயத்தை இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். Screen Scene நிறுவனத்தினர் இப்படத்தை தயாரித்து வெளியிடுகிறார்கள்..” என்றார்.

sundar.c

படத்தின் நாயகனான சுந்தர் சி. பேசும்போது, “ரொம்ப நாள் கழித்து ஒரு நடிகராக இந்த மேடையில் நிற்கிறேன். V.T.V. கணேஷ் சார்தான் இந்தப் படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன்.

நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விசயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம்.

V.Z.துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன். அவர் படங்கள் பார்த்து.. அவர் வயலண்டாகா இருப்பாரோ என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. முதலில் ‘பேய்ப் படம் பண்ண மாட்டேன்’ என்றார். அவரை தயார்படுத்தி நிறைய பேய் படங்களை பார்க்க வைத்தோம்.

பின்பு அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை. இதுதான் முதல் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

துரை இயக்குநராக முதல் நாளிலேயே என்னைக் கவர்ந்துவிட்டார். ஒரு காட்சியில் என்னை 10 டேக் வரையிலும் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக் கொண்டேன். அவருக்கு திருப்தி வரும்வரை அவர் மீண்டும், மீண்டும்  எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக் கொண்டேன் என்று சொல்வார். ஆனால் ஒரு நடிகராக அவரிடம்தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

இந்தப் படம் புதிதான பேய் படமாக இருக்கும். படம் வரும் டிசம்பர் 6-ம் தேதியன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்…” என்றார்.

Our Score