Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V.Z.துரை தயாரிப்பில், மிகப் பெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமான ‘தலைநகரம்’ படத்தின் 2-ம் பாகமாக உருவாகியிருக்கும் படம் ‘தலைநகரம்-2’.
சுந்தர் சி., பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V.Z.துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக் குழுவினர் இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “வழக்கமான இந்த மாதிரி விழாக்களில்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால், இப்போதெல்லாம் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லி விடுகிறோம்.
நான் “இந்தப் படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது..?” என்று துரையிடம் கேட்டேன். அவர் “350-க்கும் அதிகம்…” என்று சொன்னபோது, பயந்துவிட்டேன். இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத்தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால்தான் பயந்தேன். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி இந்த ‘தலைநகரம்-2’ படம் திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
‘தலைநகரம்-2’ ஒரு எமோஷனல் ஆக்சன் மூவி. ஒவ்வொரு ஆக்கனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும். நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார் துரை. தியேட்டரில் பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள்.
இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கு அவர்களே சாட்சி. இப்படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும், உங்களுக்கும் என் நன்றிகள்…” என்றார்.
நடிகை ஆயிரா பேசும்போது, “இது ரொம்ப சந்தோஷமான தருணம். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V.Z.துரை சாருக்கு நன்றி. நான் இந்த கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா என பயந்தேன். ஆனால், துரை சார் ஊக்கம் தந்து செய்ய வைத்தார். சுந்தர்.சி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தப் படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி…” என்றார்.
இணை தயாரிப்பாளரான மதுராஜ் பேசும்போது, “நண்பன் துரை உடன் இணைந்து, இந்தப் படத்திற்காக 2, 3 வருடங்கள் தொடர்ந்து உழைத்துள்ளோம். பிரபாகரன், விவேகானந்தன் சார், ரவி அண்ணன் என எங்களுக்கு நல்லது நினைக்கும், நல்ல உள்ளங்கள் பலரும் உடனிருந்தார்கள்.
இந்தப் படம் பல தடைகளைத் தாண்டித்தான் வந்தது. ரிலீஸே ஆகாது எனப் பலர் சொன்னார்கள். ஆனால், இப்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் காரணம்.
ஒரு படத்திற்குப் பின்னால் ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கை இருக்கிறது. அதை மனதில் வைத்து விமர்சனம் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை மதிக்கிறோம். எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்…” என்றார்.
இயக்குநர் V.Z.துரை பேசும்போது, “இந்த ’தலைநகரம்-2’ படத்தை எடுக்க ஆரம்பித்ததிலிருந்தே ‘தலைநகரம்-1’ படம் பற்றியும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அது மிகப் பெரிய வெற்றிப் படம். வடிவேலு சார் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் காமெடியே இல்லை.
ஏன் இந்தப் படத்தை இப்படியெடுத்தேன் என்றால், இந்தக் கதை ஒரு எக்ஸ் ரௌடி பற்றியது. அதற்கு ஏற்கனவே ரௌடியாக நடித்து ஃபேமஸான ஒருத்தராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சுந்தர் சார் ஏற்கனவே ‘தலைநகரம்’ படத்தில் ரவுடியாக நடித்திருந்ததால் அவரை வைத்தே இந்தப் படத்தை செய்யலாம் என்று நினைத்து அவரிடமே கேட்டேன், எந்த தயக்கமும் இல்லாமல் “உடனே செய்யுங்கள்” என்றார். எங்களுக்காக ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் இந்த டைட்டிலை விட்டுக் கொடுத்தார்.
இப்போது படம் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘தலைநகரம்’ முதல் பாகத்தைவிட இந்த இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கு காமெடி தேவையில்லை என்று அவர்களே சொல்வதுதான் பெரும் மகிழ்ச்சி.
இந்தப் படத்திற்கு 300 தியேட்டர்கள் கிடைக்கவிருந்தபோது அதை வேண்டாம் என்றேன். ஆனால் தியேட்டர்காரர்களே கேட்கிறார்கள் என்று விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். என்னால் மறுக்க முடியவில்லை. இப்போது 350 தியேட்டர்களில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய தியேட்டர்களில் படத்தைக் கேட்டு வாங்கி ஓட்டுகிறார்கள். மகிழ்ச்சியாக உள்ளது.
முக்கியமாக இந்தப் படத்திற்கு ஆதரவு தந்த பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கு நன்றிகள். உங்கள் விமர்சனம் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபாகரனுக்கு நன்றி. இணை தயாரிப்பாளர் நண்பன் மது என்னோட எல்லா துக்கத்தையும் அவனிடம்தான் பகிர்ந்து கொள்வேன். அவனுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி..” என்றார்.