அம்மன்யா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.மஞ்சுநாதன் தனது முதல் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஐதராபாத்தைச் சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார் இவர் தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்தவர்.
மேலும், இப்படத்தில் நடிகர் யோக் ஜேபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு முருக சரவணன். இவர் ‘தீரன்’ மற்றும் ‘விஜய் 64’ ஆகிய படங்களில் 2-nd யூனிட் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தின் இசையமைப்பாளர் பிரசன்னா இசை அமைக்கிறார். படத் தொகுப்பை ‘ரிச்சி’ படத்தின் படத் தொகுப்பாளரான அதுல் விஜய் கவனிக்கிறார். கலை இயக்குநராக ‘காற்று வெளியிடை’, ‘மாரி-2’ போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய அமரன் பணியாற்றுகிறார்.
சண்டை இயக்கத்தை ‘மாரி-2’, ‘வி.ஐ.பி.’ உள்ளிட்ட வெற்றி படங்களில் பணியாற்றிய ஹரி தினேஷ் கவனிக்கிறார்.
அறிமுக இயக்குநரான எஸ்.காளிங்கன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இவர் ‘என்றென்றும் புன்னகை’, ‘ரிச்சி’ போன்ற படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சி.வி.மஞ்சுநாதன் கூறுகையில், “இந்தப் படத்தை ‘மித்தலாஜிக்கல் பீரியட் பிலிம்’ என்றே கூறலாம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் எஸ்.காளிங்கன் எங்களிடம் கூறிய உடனேயே இப்படத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம். காரணம், ஹாலிவுட் திரைப்படங்களிலெல்லாம் மித்தலாஜிக்கல் வகையை சார்ந்த திரைப்படங்கள் அதிகப்படியாக வருகின்றன. ஆனால், தமிழ் சினிமாவில் இத்தகைய மித்தலாஜிக்கல் திரைப்படங்கள் அதிகமாக வரவில்லை.
இந்த வகை திரைப்படங்களை சரியான கமர்ஷியல் படமாகவும், தமிழில் எடுக்கவில்லை. அதனை நிவர்த்தி செய்யும் படமாக இப்படம் அமையும்.
இது தமிழ் ரசிகர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களுக்கான படமாகவே அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்குகிறோம்.
இப்படத்திற்காக ஆரி தனது உடல் எடையை 10 கிலோவரை குறைத்து வருகிறார். இப்படத்தின் மூலமாக ஆரி முதன்முறையாக மித்தலாஜிக்கல் பீரியட் பிலிமில் நடிக்கிறார். இப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமையும்.
இப்படத்தைத் தொடர்ந்து எங்கள் நிறுவனம் சார்பாக இனிமேல் வருடத்திற்கு இரண்டு, மூன்று தரமான திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம்…” என்றார்.
இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படுமாம்.
இந்தப் புதிய படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணிக்கு டி.ஆர். கார்டனில் இனிதே துவங்கியது.












