‘இரும்புத்திரை’ படத்தின் 100-வது நாள் விழாவும், நடிகர் விஷாலின் 41-வது பிறந்த நாள் விழாவும் ஒன்றாக இன்று காலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின் விஷாலின் தாயார், நடிகைகள் சமந்தா, குட்டி பத்மினி, லலிதகுமாரி, உட்பட ஐந்து பேர் மேடையேறி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
பொதுவாக விஷால் தன்னுடைய நிறுவனம் நடத்தும் விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு ஆகும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு கொடுப்பார். அதுபோல இன்றும் கீர்த்தனா, ஐஸ்வர்யா என்ற இரு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகையாக வழங்கினார்.
விஷாலின் தந்தையான ஜி.கே.ரெட்டி, விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “எவனொருவன் தாய், தந்தையை மதிக்கிறானோ அவனை ஆண்டவன் உயர்த்திக் கொண்டேயிருப்பான். 1995-ம் ஆண்டு வரையிலும் பல திரைப்படங்கள் நூறு நாட்கள்வரை ஓடியிருக்கின்றன. ஆனால் இப்போது அது ஒரு சில படங்களுக்கு மட்டுமே அமையும். ‘ஜில்லா’விற்கு பிறகு இந்த படம் தன் நூறு நாட்களை எட்டியிருக்கிறது.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு நான் போகவில்லை என்றாலும், அதை பெரிதும் மதிக்கிறேன். திரையரங்க உரிமையாளர்கள் சிறு படங்களை மதிப்பதேயில்லை. சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இன்னும் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும். விஷால், உங்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது. திரைப்படத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி. எதிர்த்து போராடவில்லை என்றால் அடையாளத்தை இழந்து விடுவோம். ஆகையால், அதை எப்பொழுதும் நீங்கள் விட்டுவிடக் கூடாது.
காசுக்கு ஓட்டுப் போடுவதை மக்கள் நிறுத்த வேண்டும். நீங்கள் திருந்திவிட்டு, எங்களை வழி நடத்த வாருங்கள் என்று சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம்..” என்றார் ஆவேசமாக..!
பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “இப்போதுள்ள ஆட்சியாளர்கள் யாரும் காந்தியோ, நேருவோ இல்லை. ஆகையால், சினிமா துறைக்கு நன்மை செய்வதுபோல் மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று விஷாலுக்கு கோரிக்கை வைத்தார். விஷால் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.. என்றார்.
‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநரான மித்ரன் பேசுகையில், “இப்படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவதற்குள் விஷாலுக்கு 3 பிறந்தநாள், 3 தேர்தல் மற்றும் 3 வேலை நிறுத்தங்களை பார்த்துவிட்டேன். இந்தப் படம் 1௦௦ நாள் விழாவரை வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
பல மேடைகளில் சொல்லிவிட்டேன், இப்படத்தின் கதை என்னுடைய சொந்த அனுபவம். இந்தக் கதையின் மீது முதலில் நம்பிக்கை வைத்தது விஷால்தான். அடுத்தது சமந்தா. பிறகு யுவன் ஷங்கர் ராஜாதான். அவருடைய மிகப் பெரிய ரசிகன். அவருடன் பணிபுரிவது எனக்கு மிகப் பெரிய கனவாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.
பிறகு, அர்ஜுனிடம் இந்த கதையை சொன்னேன். அவர் எப்பொழுது நடிக்க ஒப்புக் கொண்டாரோ அப்போதே இப்படம் வெற்றியடைந்து விடும் என்று நினைத்தேன். அதன்படியே நடந்து முடிந்திருக்கிறது..” என்றார்.
நடிகர் அர்ஜுன் பேசும்போது, “நான் இதுவரையிலும் 15௦ படங்களில் நடித்து விட்டாலும், அதில் நிறைய 1௦௦ நாட்கள், வெள்ளிவிழா பார்த்திருந்தாலும், கடந்த 1௦, 15 வருடங்களில் 1௦௦ நாட்கள் என்பது அரிது. இந்தப் படத்தை 1௦௦ நாள் விழாவாக பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதலில் இப்படத்தின் கதையை கேட்கும்போது வில்லன் கதாப்பாத்திரம் என்றதும், கொஞ்சம் யோசித்தேன். நாட்டு பற்றை வெளிப்படுத்தும் படங்களில் நடித்துவிட்டு இப்போது அதற்கு நேர்எதிர்மறையான கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது, சரியாக வருமா என்று யோசித்தேன்.
ஆனால் ‘திருடனுக்கு தேள் கொட்டுனா பொத்திகிட்டு இருக்கணும், இங்கு நீங்கள் எல்லாம் திருடனுங்க, நான் தேள்.. நான் கொட்டுனா போத்திகிட்டு இருக்கணும்’ என்ற வசனத்தைக் கேட்டவுடன் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டேன். அது தவிர, ஒரு படம் நன்றாக வருவதற்கு இயக்குநர்தான் காரணம்.
சிறு வயதிலிருந்தே விஷாலை எனக்குத் தெரியும். நான் ‘வேதம்’ படம் இயக்கிக் கொண்டிருக்கும்போது தான் ஜி.கே.ரெட்டி விஷாலை அழைத்து வந்தார். என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அப்போதுதான் நான் அவர் அப்பாவிடம் கூறினேன், ‘உங்க பையன் நிறம் குறைவாக இருந்தாலும் முக அமைப்பு ஒரு கதாநாயகனைப் போல் இருக்கிறது’ என்று. இன்று அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது…” என்று மனமாரப் பாராட்டினார்.
நடிகர் விஷால் பேசும்போது, “சில படங்கள் வெற்றியடைந்தாலும் சில படங்கள்தான் திருப்புமுனையாக அமையும், அப்படிதான் ‘இரும்புத் திரை’யும். இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே முடிவு செய்து விட்டேன், கண்டிப்பாக என் சினிமா வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்று..!
நான் முதலில் அர்ஜுனிடம் தன் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். என்னுடைய முதல் சம்பளம் 1௦௦ ரூபாய். சிறிது சிறிதாக சேர்த்து என் அம்மாவிற்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு shaving kit–ம் வாங்கிக் கொடுத்தேன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் அர்ஜுன்தான்.
சினிமாத் துறையில் கதாநாயகிக்கு திருமணமாகிவிட்டால் அதோடு, நடிக்க வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் அக்கா கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரத்தில்தான் நடிப்பார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து, கதாநாயகியாக நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சமந்தா. அவரை நான் பெரிதும் வாழ்த்துகிறேன்..” என்றார்.
நடிகை சமந்தா பேசுகையில், “இந்த விழா ஒரு உண்மையான கொண்டாட்டம். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி…” என்று கூறினார்.
இறுதியாக, இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஏனென்றால், கனடா நாட்டிலிருந்து வந்த அக்ஷயா என்ற பெண்ணிடம்தான் கேடயத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார். அப்பெண் பிறந்தது முதல் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுடைய 24 படங்களையும் காதால் கேட்டே வளர்ந்துள்ளார். இவர் படத்தின் எந்த வசனத்தைக் கூறினாலும் அது எந்த படம் என்று சரியாகச் சொல்லிவிடுவார். ஆகையால் அவர் கையால் கேடயம் பெறுவதே தனக்கு மிகச் சிறந்த பரிசாகக் கருதுவதாகக் கூறினார் விஷால். அந்தப் பெண் நேற்றே விஷாலின் இல்லத்திற்கு வந்து விஷாலிடம் கேடயத்தை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குட்டி பத்மினி, லிங்குசாமி, மன்சூரலிகான், மிஷ்கின், சுந்தர்.சி. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் FEFSI நிர்வாகிகள், மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
மற்றும் அர்ச்சனா AGS, லைக்கா குழுமம் GM MR.நிஷாந்த், ஐயுப்கான், யுவன்சங்கர்ராஜா, மனோபாலா, A.L.உதயா, பி.கண்ணன், பிரேம், மாரிமுத்து, ஆதவ் கண்ணதாஸ், ரோபோ ஷங்கர், லலிதகுமாரி, Think Music ஹேமச்சந்திரன், சுப்பு பஞ்சு, டெல்லி கணேஷ், ராமச்சந்திரன், மீரா மிதுன், கமலா சினிமாஸ், பிரவீன்காந்த்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள்,தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், FEFSI உறப்பினர்கள், மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களும் விஷாலின் அனைத்து மாநில ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.