கன மழையையும் பொருட்படுத்தாமல் விஷாலின் ‘இரும்புத் திரை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷாலே இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்த ‘இரும்புத் திரை’ படத்தில் சமந்தா, ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜார்ஜ் C.வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இபடத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இயக்குநர் மித்ரன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார்.
விஷால் ஒரே நேரத்தில் ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத் திரை’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். ‘துப்பறிவாளன்’ சென்ற வருடமும், ‘இரும்புத் திரை’ இந்த வருட பொங்கலுக்கும் வெளியாக வேண்டிய திரைப்படங்கள்.
ஆனால் நடிகர் விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. இதனால் விஷாலுக்கு நஷ்டம்தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் ‘துப்பறிவாளன்’ திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து ‘சண்டகோழி-2’-வின் முதல் கட்ட படபிடிப்பு நிறைவடைந்து. தற்போது ‘இரும்புத் திரை’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 29-ம் தேதி துவங்கியது. தற்போது பெய்து வரும் கன மழையையும் பொருட்படுத்தாமல் அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு மற்றும் அண்ணா சாலையின் பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘இரும்புத் திரை’யை அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியிட வேண்டும் என்பதால், படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிவரை தொடர்ந்து இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.










