ஆடியன்ஸ் கிளாப்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பெண் இயக்குநர் J.M.நூர்ஜஹான் எழுதி இயக்கி, தயரிக்கும் திரைப்பபடம் ‘கரிக்காட்டுக் குப்பம்.’
கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்த ‘கரிக்காட்டுக் குப்பம்’ திரைப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் அபி சரவணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்வேதா நடிக்கிறார். இவர் விவேக் நடித்த ‘நான்தான் பாலா’ படத்தில் நாயகியாக நடித்தவர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு – எட்வின் சகாய், இசை – ஜான் பீட்டர், நடனம் – லாரன்ஸ் சிவா, பாடல்கள் – சினேகன், சண்டை பயிற்சி – பயர் கார்த்திக், எழுத்து, இயக்கம் – J.M. நூர்ஜஹான்.
சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் பத்து இடங்களில் முதலாவது இடமாகக் கருதப்படுவதுதான் இந்த ‘கரிக்காட்டுக் குப்பம்.’ இந்த இடம் அமானுஷ்ய சக்திகள் கூடாரம் என்று கருதப்படுகிறது. அதனால்தான் ECR பகுதிகளில் அதிகளவு விபத்துக்கள், சுனாமி போன்ற பலி வாங்குதல் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த உண்மையை அடிப்படையாக கொண்டுதான் இந்த ‘கரிக்காட்டுக் குப்பம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
படம் பற்றி இயக்குனர் J.M.நூர்ஜஹான் பேசும்போது, “இன்றைய இளைஞர்கள் கல்லூரி வாழ்கையை கடப்பதற்கு முன்பேயே காதல் என்கிற மாயையில் விழுந்து விடுகிறார்கள். தன் காதலியோடு ஊர் சுற்ற வேண்டுமென்று, வசதி படைத்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் பெற்றோர்களை வற்புறுத்தி பைக் வாங்கிக் கொள்கிறார்கள். பிள்ளைகளின் ஆசைக்காக கஷ்டப்பட்டு கடன் வாங்கிக் கொடுத்த பைக்கில் காதலிகளோடும், பைக் ரேஸிலும் ஈடுபடுகிறார்கள்.
அப்படி ஒரு காதலனும், காதலியும் செல்லும்போது ஏற்பட்ட விபத்தினால் காதலன் இறக்கிறான். தன் காதலியுடன் வாழ முடியாமல் நிராசையுடன் இறந்த அந்த ஆத்மாவின் நிலை என்ன என்ற கதையுடன் திகில் கலந்த படமாக இந்த ‘கரிக்காட்டுக் குப்பம்’ திரைப்படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது..” என்றார் இயக்குநர் J.M.நூர்ஜஹான்.
இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள புது பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நடிக்கும் நடிகர், நடிகையர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் நூர்ஜஹான் இவர்களுடன் கில்டு அமைப்பின் தலைவரான ஜாக்குவார் தங்கம், பாடலாசிரியர் சினேகன் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.










