‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
‘குக்கூ’ மற்றும் ‘விசாரணை’ படங்களைப்போல சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் ‘திருடன் போலீஸ்’, ‘அண்ணனுக்கு ஜே’ என பக்காவான எண்ட்டெர்டெயினிங் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் தினேஷ்.
அந்த வரிசையில் தற்பொழுது இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரையின் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நடித்துள்ள ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படமும் இடம் பெறுகிறது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசிய நடிகர் தினேஷ், “இந்தப் படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப் போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.
அதேசமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும், குடும்பங்கள், இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் இது மிகவும் முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக, வடதமிழகத்து இளைஞனாக நடித்தது எனக்குக் கிடைத்துள்ள ஒரு புதிய அனுபவம்.
அடுத்தடுத்து தமிழகம் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன்…” என்றார் தினேஷ்.