ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் காவியா வேணுகோபாலின் தயாரிப்பில், அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’.
நடிகர் அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.
வரும் மே 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்தப் படத்தை குரு ஸ்ரீமிஷ்ரி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சி.எஸ்.பதம்சந்த் ஜெயின்.
இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று மதியம் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் பேசும்போது, “இயக்குநர் சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் இது. முந்தைய இரண்டு படங்களும் காமெடி படங்கள். இந்த படம் கதை எழுதுபோதே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஒரு திரில்லர் படம். திரைக்கதை மிகச் சிறப்பாக இருக்கும்..” என்றார்.
இசையமைப்பாளர் சி.எஸ்.சாம் பேசும்போது, “சமீப காலங்களில் ‘விக்ரம் வேதா’, ‘அடங்க மறு’, ‘100’, ‘அயோக்யா’ என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசையமைத்து வருகிறேன்.
வெளியில் இருந்து பார்த்தால் எல்லா படங்களும் ஒரே மாதிரியாக தோன்றும். ஆனால் திரைக்கதையில் ஒவ்வொன்றும் வித்தியாசமானது. ஒரு திரைக்கதைதான் பின்னணி இசையை கோரும்.
எனக்கு காமெடி படங்கள் பண்ணனும்னு ஆசை. சாம் எனக்கு கதை சொல்ல வந்தபோது எனக்கு ஒரு நல்ல காமெடி படம் மாட்டிக்கிச்சு என சந்தோஷப்பட்டேன். ஆனால் கதையைக் கேட்டபோது இதுவும் ஒரு போலீஸ் படம். சீரியஸ் படமாகவே இருக்க எனக்கு ஏமாற்றமாகிவிட்டது.
அவர் காமெடியைவிட திரில்லர் படங்களைத்தான் மிகச் சிறப்பாக எடுக்கிறார். அவர் எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதுதான் என் வேலையை மிகச் சிறப்பாக செய்ய ஊக்கப்படுத்தியது.
அதர்வா உடல் உழைப்பு அபாரம். சண்டைக் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். இது சமூகத்தில் தற்போது நடக்கிற விஷயங்களை பேசும், கண்டிப்பாக இன்றைய காலகட்டத்துக்கு தேவையான ஒரு படம். இந்த படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும்…” என்றார்.
இயக்குநர் சாம் ஆண்டன் பேசும்போது, “அதர்வா சாரிடம் கதை சொல்ல போனபோது என்னை நம்பி சீரியஸான கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார். கதைக்கு ஏற்ற வகையில் ஒரு மீட்டரில், சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் மகேஷ் கல்லூரியில் எனக்கு சீனியர். அவர் எனக்கு இந்த படத்தை கொடுத்தார். எந்த தயக்கமும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ எல்லாவற்றையும் கொடுத்தார். அவரும் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிக நன்றாகவே நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.தான் திரில்லர் படம் பண்ணுங்க என ஆரம்பத்திலேயே என்னை ஊக்கப்படுத்தினார். இன்றைய உலகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக உள்ளது, அதைப் பற்றிப் பேசும் படமாக இது இருக்கும்…” என்றார்.
தயாரிப்பாளர் மகேஷ் பேசும்போது, “ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஏதாவது ஒரு படம் புதிய பரிமாணத்தை கொடுக்கும். அந்த வகையில் அதர்வாவுக்கு இது அடுத்த கட்ட படமாக இருக்கும். கமெர்சியல் போலீஸ் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும்.
இப்போது ‘அவெஞ்சர்ஸ்’, ‘காஞ்சனா-3’ போன்ற படங்கள் மிகச் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் ஒரு வாரம் படத்தை தள்ளி ரிலீஸ் செய்யலாம் என நானும், வினியோகஸ்தர்களும் முடிவெடுத்தோம்.
இந்த ஒரு பெரிய படம், ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்க கொஞ்சம் நல்ல திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். நிச்சயம் இந்த படம் பேசப்படும்…” என்றார்.
நடிகர் அதர்வா பேசும்போது, “தமிழ் சினிமாவில் நிறைய போலீஸ் படங்கள் வருகின்றன, அதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
இது காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் ஒரு கதை. இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். சாம் ஆண்டன் ஆக்ஷன் படங்களை மிகச் சிறப்பாக எடுக்கிறார். அவர் தொடர்ந்து ஆக்ஷன் படங்களை இயக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.
இன்றையச் சமூகத்தில் சம காலத்தில் நடக்கும் விஷயங்களை இந்த படம் பேசும். நிச்சயம் இது என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்…” என்றார்.