மறைந்த திரையிசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநதன் அவர்களுக்கு தமிழ்நாடு திரையிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நேற்று மாலை வடபழனி திரையிசை கலைஞர்கள் சங்கத்தின் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் திருவுருவப் படத்தை இசைஞானி இளையராஜா திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “இன்றைக்கு நம்முடைய இசைக் கலைஞர்கள் சங்கத்தில் எம்,.எஸ்.வி அவர்களின் நினைவஞ்சலி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சங்கம் உருவாவதற்கு முக்கிய காரணமே நம்ம அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்தான். இந்த சங்கத்தை உருவாக்க பிலிப்ஸ், மங்களமூர்த்தி, ஹென்றி டேனியல், ஃபாப்ஸ் போன்ற கலைஞர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
அந்தக் காலத்தில் இசை என்கிற தொழில் எப்படி நடந்தது என்று இன்று உள்ள இசையமைப்பாளர்களுக்கு தெரியாது. அப்போதெல்லாம் இசைக் கலைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரமே இல்லை. கம்பெனி வேன் வரும். இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவரையும் ஏற்றிக் கொண்டு வேன் ஸ்டுடியோவிற்கு வரும்.
அங்கே அவங்களுக்கு முன்பாகவே அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் வந்து காத்திருப்பார். இன்று உள்ளதைபோல் ஸ்பாட் பேமண்ட் அப்போது கிடையாது. பாட்டெல்லாம் மொத்தமாக வசித்து முடித்துவிட்டு படம் வெளியாகி பல நாட்களுக்குப் பிறகு அந்த கம்பெனிக்குப் போயி இசைக் கலைஞர்கள் வரிசையில் நின்று தங்களுடைய பெயரை பதிவு செய்து டிக் அடித்த பிறகே சம்பளம் பெற்றனர்.
அதுவும் இடையில் உள்ள சிலர் தங்களுடைய கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகே கொடுப்பார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் முழு சம்பளம் கிடைக்கும். அண்ணன் சாப்பிட மறந்து போய் உழைத்துக் கொண்டிருப்பார். ஆனால் அவரிடம் டியூன் வாங்குவதில் குறியாக இருந்தவர்கள் அவர் நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்று நினைத்ததில்லை. இதை அண்ணன் உண்ர்ந்திருந்தனால்தான் இந்த சங்கம் தோன்றியது.
சாப்பிடக்கூட நேரமே இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்த இசைக் கலைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தையும், அந்த இடத்திலேயே சம்பளம் கிடைக்கும் முறையை கொண்டு வருவதற்கு மூல கரணமாக இருந்தவர் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்தான்.
இதே போல் கவிஞர்களை ஊக்குவிப்பதிலும் அண்ணன் முதல் ஆளாக இருந்தார். ‘கவிஞர்கள் பாபநாசம் சிவனும், கண்ணதாசனும் எனக்கு இரு கண்களை போன்றவர்கள்’ என்றவர், ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நெற்றிக் கண்ணைப் போன்றவர்’ என்றார். இப்படி இன்று காமகோடியான்வரைக்கும் ஊக்குவித்தார்.
அண்ணன் இசையமைத்த படத்தின் பெயர் தெரியாவிட்டாலும் இன்றளவுக்கும் அவருடைய பாட்டு அந்த படத்தின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும். ‘நான் ஆணையிட்டால்’ என்று பாட்டு ஒலித்தால் அந்த படத்தின் ஷாட்டு மறந்து போயிருக்கும், ஆனால் பாட்டு நினைவிலிருக்கும்.
ஒரு பாட்டு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணன் வடிவமைத்தார். இத்தாலி நாட்டில் பெர்டி என்ர கம்போஸர் இருந்தார். ஒரு சமயம் அந்த நாட்டின் தலை சிறந்த கவிஞர் ஒருவர் இறந்து போனார். அப்போது பெர்டி தலை சிறந்த நூறு இசைக் கலைஞர்களை வைத்து அந்த கவிஞருக்கு அஞ்சலி இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த அஞ்சலி இசை விழாவில், “இந்த இத்தாலி நாடு கர்வம் கொண்டிருந்த இசைக் கலைஞன் மறைந்த பிறகு இந்த நாடு எதை நினைத்து கர்வம் கொள்ளப் போகிறது.” என்றார்.
அதேபோல இன்றைக்கு நாமெல்லாம் கர்வம் கொள்கிற மாதிரி நம்ம அண்ணன் நம்மிடையே வாழ்ந்தார். கவிஞர் எவ்வளவோ கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவையெல்லாம் மக்களை போய்ச் சேர்ந்ததா..? அண்ணன் எம்.எஸ்.வி. இசையமைத்த பிறகுதான் அது மக்களை சென்றடைந்தது.
அந்த மெட்டுக்களில்தான் எனது அண்ணன் பாவலர் வரதராஜன், கம்யூனிஸ கருத்துக்களை எழுதி பாடி வந்தார். அப்படி ஒரு முறை மதுரை ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் பாடி கொண்டிருந்தோம். அதே காலனியில் தன்னுடைய உறவினரை பார்க்க வந்திருந்த அண்ணன் எம்.எஸ்.வி. கச்சேரி நடக்கும் மேடைக்கு இரண்டு வீடுகள் தள்ளி தங்கியிருந்தார். இது எங்களுக்கு தெரியாது.
கச்சேரி முடிந்து அன்றிரவு நாங்கள் கம்யூனிஸ்டு ஆபிஸில் படுத்திருந்தபோது ஒரு ஊழியர் வந்து அண்ணன் எங்கள் பாட்டை கேட்டதாக சொன்னார். எங்களுக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. சில நாட்களில் சென்னை வந்து அண்ணனை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வந்தோம்.
அவருடைய இசை என்னைப் போன்ற மரமண்டைகளுக்கும் வந்து சேர்ந்தது. அப்படிபட்ட எம்.எஸ்.வி. அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை என்னிடம் வைத்தால், அதை நானே செய்து விடூவேன் என்பதாலேயோ என்னவோ அதற்கு முன்கூட்டியே அந்த விஷயம் நடந்து விட்டது.
இன்று இளைஞர்களுக்கெல்லாம் ஊக்கமாக இருந்த கலாம் மறந்து விட்டார். நமது ரத்த நளங்களில் கலந்துவிட்ட அண்ணன் எம்.எஸ்.வி.யும் மறைந்து விட்டார். இந்த நாட்டின் கர்வ காரணங்கள் மறைந்து விட்டார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம், அவர்களுடைய இசையும், கலாம் தந்த ஊக்கமும் வருகின்ற சமுதாயத்திற்கு ஊக்கமாக இருக்கும்…” என்றார் இசைஞானி இளையராஜா.
முன்னதாக பேசிய கவிஞர் கணணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் எம்.எஸ்.வி.க்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும். சென்னையில் மயிலாப்பூர் லஸ் கார்னரிலோ, கடற்கரை சந்திப்பிலோ அந்தம் சிலையை நிறுவ வேண்டும். என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
அதற்கு பதிலளிக்கும்விதமாக பின்பு பேசிய இசையமைப்பாளர் கங்கைஅமரன் எம்.எஸ்.வி.க்கு சிலை அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும், அந்த முயற்சிகளை தானே முன் நின்று செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களான இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், எஸ்.எ.ராஜ்குமார், இமான், ஸ்ரீகாந்த்தேவா, எஸ்.எஸ்.தமண், சந்தோஷ் நாராயணன், வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி மற்றும் எம்.எஸ்.வி.யின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஜி.சிவா, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோரும் பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், வாணிஜெயராம், ஹரிசரண், உன்னிகிருஷ்ணன், பாடகி கமலா மற்றும் கவிஞர்கள் முத்துலிங்கம், பிறைசூடன், எஸ்.வி.சுரேந்தர், எம்.எஸ்.வி.யின் நண்பர் கிட்டாரிஸ்ட் பிலிப்ஸ், பிரசாத், காந்தி கண்ணதாசன், முரளி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவை இசையமைப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.எ.ராஜ்குமார், பொதுச் செயலாளர் எ.டொம்னிக் சேவியர் ஆகியோர் அனைவரையும் வரேவேற்று நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார்கள்.