full screen background image

“வாரிசு படத்துக்குத் தியேட்டர் கிடைக்கலைன்னா உனக்கென்ன..?” – தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வி

“வாரிசு படத்துக்குத் தியேட்டர் கிடைக்கலைன்னா உனக்கென்ன..?” – தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வி

Basket Films & Creations  தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குர் பாஸ்கி T.ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் வகையில் உருவாகியிருக்கிறது Hi 5’ திரைப்படம்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறார்கள். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.  நடிகர்கள் யாரும் புதிய முகங்கள் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளனர். இந்தக் குழுவிற்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

ajayanbala

எழுத்தாளர் அஜயன் பாலா பேசும்போது, “இந்தப் படம் அன்பைப் பற்றிய படமாக தெரிகிறது. நல்ல எண்ணங்களால் வாழ்பவர்களே நீண்ட காலம் வாழ்கிறார்கள். மறைந்தும் வாழ்கிறார்கள். அதேபோல் நல்ல எண்ணங்களால் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப் படத்தில் கிராமமும் இருக்கிறது. நகரமும் இருக்கிறது. இப்படம் வயதானவர்களின் வலியை சொல்கிறது. இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களை பார்த்து கொள்ள  ஆளில்லை என்ற பிரச்சனைதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி. படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

k.rajan

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்த மேடை அழகாக இருக்கிறது. ஒரு காலத்தில் உறவுகளை போற்றியது தமிழ்நாடு. இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு ரூமில் இருக்கிறார்கள். வயதனாவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. அதற்காக ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

‘வாரிசு’ படத்திற்கு ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தியேட்டர் கிடைக்கவில்லை என்று இங்கேயுள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள். தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை..? இங்கே லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இங்கேயா அந்தப் படத்தை எடுத்தார்கள்..? இங்கே இந்த மாதிரி சின்ன படம்தான் ஓட வேண்டும். நல்ல கதையை சொல்லும் இந்தப் படம் ஓட வேண்டும். இப்படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..” என்றார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான பாஸ்கி T.ராஜ் பேசும்போது, “இப்படம் எடுப்பதற்கு உதவிய அனைத்து கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இங்கு வந்து எங்களை வாழ்த்திய பிரபலங்களுக்கும் நன்றி.

முதியவர்கள் இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்பவர்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து கொள்வதில்லை. முதியவர்களை புரிந்து கொள்ள சொல்வதுதான் இந்தப் படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தை சொல்லியுள்ளோம்.  படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டுகள் கடந்தும் வாழலாம். மதுப் பழக்கம் இல்லாமல் வாழுங்கள்.

இந்தப் படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையை சொல்கிறது. இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா, அப்பாவை போற்ற வேண்டும். அம்மா, அப்பாவை வணங்குபவன்தான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.  இந்த படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “சினிமாவில் இளைஞர்களை காட்டி வெற்றி அடைவது எளிதானது. ஆனால், வயதானவர்களை காட்டி வெற்றி அடைவது கஷ்டம். ஆனால் அதில் நீங்கள் சாதிப்பீர்கள். முதுமைக் காலம்தான் நம் வாழ்வில் முக்கியமானது. நாம் அந்தக் காலக்கட்டத்தில்தான் நமக்கு பிடித்ததை செய்ய விருப்பப்பட்டு வாழுகிறோம்.  முதுமை காலத்தின் வலிகளை சொல்லும் படத்தை தரும் இந்த படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். படம் மிகப் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

Our Score