அப்பு மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் Abbas தூயவன் தயாரித்துள்ள திரைப்படம் ‘இட்லி’.
இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷிணி, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இக்காலத்துக்கு தேவையான மெசேஜும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டப்படி 29 நாட்களில் படபிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் வித்யாதரன், “வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமான கதையை எழுதி இயக்க வேண்டும்.. அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அப்படி யோசிக்கும்போதுதான் இப்படத்தின் கதை எனக்கு மனதில் வந்தது.
வயதான மூன்று பாட்டிகள்தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள்தான் கதை. படத்தில் பாடல்கள், ஆக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இதுதான் ‘இட்லி’ படத்தின் ஸ்பெஷல்.
இது அனைவரையும் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். நான் படத்தின் கதையை சரண்யா பொன்வண்ணனிடம் முதலில் கூறியபோது நாங்கள் துப்பாக்கி தூக்குவதை போல நடித்தால் நல்லாயிருக்குமா.. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா…? என்று சந்தேகத்தோடு கேட்டார்.
படப்பிடிப்பில் அந்த காட்சியில் நடிக்கும்போதுகூட நடிகைகள் மூவருக்கும் அந்த சந்தேகம் இருந்தது. நடித்து முடித்து அந்த காட்சியை டப்பிங்கில் பார்க்கும்போது தங்களுக்கு இப்போது மனநிறைவாக இருப்பதாக சொன்னார்கள்.
அனைத்து பணிகளும் முடிவடைந்து இந்தப் படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. வரும் நவம்பர் மாதம் படத்தை வெளியிட எண்ணியுள்ளோம்..” என்றார் இயக்குநர் வித்யாதரன்.
‘இட்லி’ படத்தின் டீஸர் வெளியிட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் ‘இட்லி’ படத்தின் டீஸரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். நடிகைகள் கோவை சரளாவும், சரண்யா பொன்வண்ணனும் பெற்றுக் கொண்டனர்.