புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’.
அறிமுக இயக்குநரான துரைமுருகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜே.கே.சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானாபாலா பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.கே.சசிதரன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க இப்படத்தில் இடம் பெறும் பாடல்களை மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானாபாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 7-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை ஷனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர்.
இவர்களுடன் கவிஞர் மதுரா, வழக்கறிஞர் மோகன், புலமைப்பித்தனின் உதவியாளரான குணசேகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மறைந்த கவிஞர் புலவர் புலமைப்பித்தனின் மனைவியும், ‘எவன்’ படத்தின் தயாரிப்பாளருமான திருமதி தமிழரசி புலமைப்பித்தனும் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் படத்தின் நாயகனான திலீபன் பேசுகையில், ”முதலில் என்னுடைய பாட்டிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பின்போது இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் பணிகள் தடைப்பட்டன.
அப்போது என் பாட்டிதான் 30 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்து இந்தப் படத்தின் பணிகளை தொடரச் செய்தார். அதனால்தான் இந்தப் படம் தற்போது புகழேந்தி புரொடக்ஷன்ஸ் என்னும் பட நிறுவனத்தின் சார்பில் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நாயகனாக என்னை நடிக்க தேர்வு செய்த இயக்குநர் துரைமுருகனுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்ற தகுதியில் நான் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக கடினமாக உழைத்திருக்கிறேன்.
இந்தப் படத்தை இப்போது வெளியிடலாம் என்று சில நாட்களுக்கு முன்னர்தான் தீர்மானித்தோம். இந்த சந்திப்பிற்கு சிறப்பு விருந்தினராக ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மற்றும் பிக் பாஸ் புகழ் ஷனம் ஷெட்டி ஆகிய இருவரையும் அழைக்க வேண்டும் என விரும்பினேன். இருவரும் மன மகிழ்ச்சியுடன் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
எனக்கு ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் அண்ணனை நன்கு தெரியும். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நாயகனான சேதுவும், நானும் உடற்பயிற்சிகூட நண்பர்கள். அவருடன் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறேன். அங்கு ‘பவர்ஸ்டார்’ சீனிவாசனின் நடிப்பு, படப்பிடிப்பு தளத்தில் அவர் உரையாடும் அணுகுமுறை ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவர் இங்கு பேசும்போது ஊடகங்கள், “என்னைப் பற்றிய தவறான செய்தியை வெளியிடுகிறது…” என வருத்தப்பட்டார். அதற்காக அவர் வருத்தப்பட வேண்டாம். ஏனெனில், அண்டர்டேக்கர் என்ற அமெரிக்க விளையாட்டு வீரர் இறந்துவிட்டார் என 7 முறை செய்திகள் வெளியானது. ஆனால் அவர் இறக்கவில்லை. இன்றும் உயிருடன்தான் வாழ்ந்து வருகிறார்.
அதனால், உங்களைப் பற்றி தவறான செய்திகள் வந்தால், அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் 200 ஆண்டுகள் வாழ்வீர்கள். தற்போதே நான் உங்களுடைய 175-ம் ஆண்டு ஆண்டிற்கான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2012-ம் ஆண்டில் நான் பார்த்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனைவிட, தற்போது கம்பீரமாக காட்சியளிக்கிறீர். அதனால் எப்போது நீங்கள் ரசிகர்களுக்கு மாஸ்தான்.
ஷனம் ஷெட்டி கலந்து கொண்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள தயாராக இருந்தேன். ஆனால் கடைசி தருணத்தில் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த சீசனை நான் முழுவதும் பார்த்தேன். ஷனம் ஷெட்டிதான் வெற்றி பெறுவார் என நான் உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தேன். அவருடைய அணுகுமுறை, பேச்சு இவையெல்லாம் எனக்கு பிடிக்கும். அவரும் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து பட குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி.
நான் சிறிய வயதில் வீட்டிற்கு அடங்காத பிள்ளை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தேன். இதற்காக வீட்டிற்குள் ரகளை செய்தேன் மீன் தொட்டியை உடைத்தேன். வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தேன். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா வழக்கறிஞர் மோகனின் பரிந்துரையின் பேரில் எனக்கு பைக் வாங்கி கொடுத்தார்கள். அங்கிருந்துதான் என்னுடைய லட்சியத்திற்கான பயணம் தொடங்கியது.
என்றைக்கும் நான் சினிமாவில் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டதில்லை. நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். பைக் ரேஸில் கலந்து கொண்டபோது நான் நிஜ நாயகனாகவே இருந்தேன். 2009-ம் ஆண்டில் நான் செய்த சாதனையை.. இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
என்னுடைய தாத்தா, பாட்டியை நிறைய முறை கஷ்டப்படுத்தி இருக்கிறேன். எனக்கு யாராவது அறிவுரை கூறினால்.. அதனை நான் ஏற்க மாட்டேன். எனக்குள் தோன்றினால்தான்.. என்னை நான் மாற்றிக் கொள்வேன். அப்படி முடிவு எடுத்துதான் திரைத்துறைக்குள் நுழைந்தேன்.
நான் நேரடியாக என் தாத்தாவிடம் சென்று, என்னை நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரித்து வெளியிடுங்கள் என்றால்… அவர் எனக்காக அதை செய்வார். ஆனால் நான் அப்படி கேட்கவில்லை. அவர் எப்படி சாதாரண நிலையிலிருந்து திரைத்துறைக்கு வருகை தந்து உயர்ந்தாரோ… அதேபோல் நானும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைத்தேன்.
லண்டன் பிலிம் அகாடமியில் சேர்ந்து படித்து, பிறகு ஜெயராவ் மாஸ்டரிடம் நடிப்பை கற்று இருநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்த பிறகுதான் எனக்கு ‘பள்ளிக்கூடம் போகாமலே’ என்னும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ‘பள்ளிக்கூடம் போகாமலே’ படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துதான் இயக்குநர் துரைமுருகன் இந்த ‘எவன்’ படத்திற்கான வாய்ப்பை வழங்கினார்.
தாத்தா இறந்த பிறகு மிகவும் மனம் உடைந்து சொந்த ஊருக்கு சென்று விட்டேன். பிறகு பாட்டி எனக்கு ஆறுதல் அளித்து, ‘எங்களுக்காக நீ இயல்பாக இருக்க வேண்டாம். நீ பைக் ரேஸில் கலந்து கொண்ட போதிலிருந்து இப்போதுவரை உன் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உன் நண்பர்களுக்காக உன்னை நீ தேற்றிக் கொண்டு, மீண்டும் சென்னைக்கு வந்து, நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
அவரது பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்து, அடுத்த நாளே சென்னைக்கு வந்து ‘எவன்’ படத்தின் பணிகளில் ஈடுபட்டேன். என்னுடைய நண்பர்களுக்காகவும் தொடர்ந்து திரை துறையில் பயணிக்க தீர்மானித்திருக்கிறேன்.
நான் தற்போது ‘சாகாவரம்’ என்னும் திரைப்படத்திற்கு கதை எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறேன். அதன் பிறகு ‘ஆண்டனி’ எனும் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் படத்திலும் நடித்து வருகிறேன்.
இந்த ‘எவன்’ படத்தின் கதை, அம்மா மகனை பற்றியது. “அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். அம்மாவிற்காக உயிரையும் எடுப்பான்..” என்ற ஒரு வரி கதையை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.