full screen background image

“தமிழ் பேச தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பில்லையே..” – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வருத்தம்..!

“தமிழ் பேச தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பில்லையே..” – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வருத்தம்..!

அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்‘.  இதில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, வி.டி.வி. கணேஷ், கருணாகரன், சிங்கம் புலி, சிங்கப்பூர் தீபன்  ஆகியோர் நடித்துள்ளனர்.  புதுமுக இயக்குநரான பாஸ்கர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் வி.டி.வி. கணேஷ், சிங்கம் புலி, சிங்கப்பூர் தீபன்,  நடன இயக்குநர் சிவராஜ் சங்கர், ஒளிப்பதிவாளர் பாலமுருகன். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG_9570

இதில் நடிகர் வைபவ் பேசும்போது. “நான் இதில் பிக்பாக்கெட் அடிப்பவனாக நடித்திருக்கிறேன். இயக்குநர் புதியவர் என்றாலும் நினைத்ததை எடுப்பவர். நினைத்தது வரும்வரைவிட மாட்டார். ‘உய்யோ கவிதா’ என்கிற வசனம் எனக்குச் சரியாக வரவில்லை. அந்தக் காட்சியை மட்டுமே 30 முறை விடாமல் எடுத்தார். அன்றுதான் சுந்தர்.சி சார் படப்பிடிப்புக்கு வந்திருந்தார். இந்தக் கூத்தைப் பார்த்துவிட்டு ‘ஐயோ’ என்று ஓடியேவிட்டார். இதில் நான் ரொம்பச் சிரமப்பட்டு சாவுக் குத்துப் பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறேன். அது தரை லோக்கலாக இருக்கும். பேய்ப் பட ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் புடிக்கும்…” என்றார்.

IMG_5174

ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாஸ்கர் சாருக்கு நன்றி. தமிழ் பேசி நடிக்கும் நடிகை என்பதால் என்னை தேர்வு செய்ததாகக் கூறினார். தமிழ் பேசும்  நடிகைகளுக்கு தமிழ்த் திரையுலகத்தில் அவ்வளவாக வாய்ப்பு தருவதில்லை. இந்த வகையில் எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்த ‘ஹலோ நான் பேய் பேசுறேன்‘ படம் நல்லதொரு பொழுது போக்குப் படம். கமர்ஷியலாக அனைத்துமே இதில் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். அந்தக் காட்சிகளில் நடித்தபோது எங்களாலேயே சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இந்தப் படத்தில் நான் வி.டி.வி. கணேஷின் சகோதரியாக நடித்திருக்கிறேன்.

படத்தில் வைபவ் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தில் அது புதிதாகத் தெரியும். இதில் நாங்கள் ஆடும் சாவுக் குத்தாட்டம்  பக்கா லோக்கலாக இருக்கும், அது பேசப்படும்.  நான் இதுவரை எந்தப் படத்திலும் சரியாக நடனம் ஆடி நடித்ததில்லை. ஆனால் இதில் சிரமப்பட்டு ஆடியிருக்கிறேன். ‘சில்லாக்கி டும்மா’ என்ற அந்தப் பாடல் காட்சியில் பிணத்தின் மீதெல்லாம் ஏறி நடனம்  ஆடியிருக்கிறேன். இது ஒரு நல்ல அனுபவம்..” என்றார்.

படத்தின் இயக்குநர் பாஸ்கர் பேசும்போது, “நான் அடிப்படையில் மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். மார்க்கெட்டிங் துறையில் அலைந்து கொண்டிருந்தவன்.

எட்டு குறும் படங்களை இயக்கியிருக்கிறேன். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு ஒரு முறை சுந்தர்.சி.சார் நடுவராக வந்தார். அப்போது வெளியிட்ட என் குறும்படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்தான் எனக்கு படம் இயக்கும் வாய்ப்பினை அளித்தார். அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையால் மட்டும் கூறிவிட முடியாது.

இது திகில், சஸ்பென்ஸ் கலந்த காமெடி  படம். பயப்படவும் வைக்கும். சிரிக்கவும் வைக்கும். வழக்கமாக பேய் படங்களில் ஒரு பழைய பங்களாவில் இருந்து பேய் வெளியே வரும். செத்தவர் உடம்பிலிருந்தும் பேய் வரும். ஆனால் இந்தப் படத்தில் வித்தியாசமாக போனிலிருந்தே பேய் வரும். நிறைய பயமுறுத்தும்.

வைபவ் ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழ் பேசத் தெரிந்ததால் ஐஸ்வர்யாவை இதில் நடிக்க வைத்துள்ளேன். ஓவியாவும் நடித்திருக்கிறார். வி.டி.வி. கணேஷ் படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ்வரையிலும் வருவார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனாலும் உங்கள் பின்னாலேயே வருவார். கருணாகரன் படத்துக்கு தூண் மாதிரி இருப்பார். 

இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ‘மஜா’ பாடலை விஜய் சேதுபதி சார் பாடிக் கொடுத்தார். அவர் பாடியதும் அது எங்கேயோ போய் விட்டது. இப்போது அந்தப் பாடல் ஒலிக்காத கல்யாண விழாக்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அந்தப் பாடல் பேமஸாகிவிட்டது. ஒளிப்பதிவாளர் பாலமுருகன் எடிட்டர் ஸ்ரீகாந்த் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். நிச்சயம் இது வெற்றிப் படமாகும் என்பதில் சந்தேகமில்லை..” என்றார் நம்பிக்கையாக.

Our Score