விஜயசாந்தி, நயன்தாரா, டாப்சி போன்றோர் ஹீரோக்களை போன்று தனித்தன்மையுள்ள ஹீரோயிஸமான கதைகளில் நடித்து பிரபலமானார்கள். மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்து வசூல் ரீதியாகவும், அத்திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
இப்பொழுது நடிகை ஹன்சிகாவும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தை, யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்ம பிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சமாக ஒரு முக்கிய வேடத்தில் – நெகடிவ் கேரக்டரில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் நடிக்கவிருக்கிறார்.
இத்திரைப்படத்தை இரட்டை இயக்குநர்களான ஹரி – ஹரிஷ் இருவரும் இணைந்து இயக்குகிறார்கள். சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களான இவர்கள் ஏற்கனவே ‘அம்புலி’, ‘அ'(AAAH), ‘ஜம்புலிங்கம்’ போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்கள்.
முழுக்க, முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது. ஹாரர், காமெடி கலந்த பேய்ப் படமாக அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தின் கதையை அமைத்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.