full screen background image

“இந்த ‘ஹாரா’தான் எனது முதல் படம்..” – நடிகர் மோகன் பேச்சு..!

“இந்த ‘ஹாரா’தான் எனது முதல் படம்..” – நடிகர் மோகன் பேச்சு..!

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளி விழா படங்களை தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹாரா’.

கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இருவரும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த ‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசை – ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு – பிரகத் முனியசாமி, படத் தொகுப்பு – குணா.

மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய்ஸ்ரீஜி.

விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு படக் குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் S.P.மோகன் ராஜ் பேசும்போது,  “பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம், முதல் படம் ‘பவுடர்’. இப்படம் முழுக்க, முழுக்க கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன் சாருக்கு அங்கு மிகப் பெரிய வரவேற்பு. படம் நன்றாக வந்துள்ளது. மோகன் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி..” என்றார்.

நடிகை ஸ்வாதி பேசும்போது, “நான் கேரளாவைச் சேர்ந்தவள். இந்தப் படம் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. எல்லோருமே ஜாலியா எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். மோகன் சார் ரொம்ப அழகாக சொல்லித் தருவார். அவர் நடிப்பு, பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படம் மிக அட்டகாசமாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.

இசையமைப்பாளர் ரஷாந்த் ஆர்வின் பேசும்போது, “இந்தப் படம் எனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. மோகன் சாரை எத்தனையோ படங்களில் ரசித்திருக்கிறோம், அவரது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை நன்றாக செய்துள்ளேன் என நினைக்கிறேன். இந்த வாய்ப்பினை தந்த இயக்குநருக்கு நன்றி. மோகன் சார் அற்புதமாக நடித்துள்ளார். ‘ஹரா’ உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.

நடிகை அனித்ரா பேசும்போது, “இந்தப் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. மோகன் சாருடன் கூடவே இருப்பது மாதிரியான கேரக்டர். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம், அவர் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கூட நடிப்பேன் என நினைக்கவில்லை. இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் சாருக்கு நன்றி. இயக்குநரின் பவுடர் படத்திலும் நடித்துள்ளேன். இந்தப் படம் சூப்பராக வந்துள்ளது. ஆதரவு தாருங்கள்…” என்றார்.

நடிகர் ஜெயக்குமார் பேசும்போது, “மோகன் சார் ரசிகன் நான். அவர்கூட நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு பெருமை. இயக்குநர் மிக ஜாலியாக, எல்லோரிடமும் இயல்பாக பழகி, படத்தை எடுத்தார். டீசர் சூப்பராக வந்துள்ளது. இசை அட்டகாசமாக உள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.

நடிகர் ஆதவன் பேசும்போது, “சின்ன வயதிலிருந்து எனக்கு இன்ஸ்பிரேஷன் மோகன் சார்தான். என் அம்மா அவர் பாடல்களுக்கு மிகப் பெரிய ஃபேன். அப்படி வியந்து பார்த்த நடிகரை, விஜய்ஶ்ரீ சார் ஆக்ஷன் ஹீரோவாக காட்டியுள்ளார். மோகன் சார் இப்படத்தில் செம்மையாக ஆக்ஷன் செய்துள்ளார். படம் அட்டகாசமாக வந்துள்ளது. இன்னும் இதுமாதிரி நிறையப் படங்கள் மோகன் சார் செய்ய வேண்டும். மோகன் சாரை வைத்து தயாரிப்பாளர் தொடர்ந்து படம் எடுப்பார், இயக்குநரும் தொடர்ந்து இயக்குவார் என நம்புகிறேன்…” என்றார்.

நடிகர் சிங்கம் புலி பேசும்போது, “அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்நாளில் ஒரு விழாவில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. இந்தப் பட வாய்ப்பு, நமஸ்காரம் சரவணன் எனும் நண்பரால் வந்தது அதுவும் பவுடர் படத்தில்தான் முதலில் வாய்ப்பு வந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனால் இயக்குநர் மூன்று கேமராக்களை வைத்து காட்சிகளை எடுப்பார். வித்தியாசமாக இருக்கும். அது தான் அவர் திறமை. இயக்குநர் மிகப் பெரிய ஆக்சிடெண்டை தாண்டி வந்திருக்கிறார். ஹரா மாதிரி இன்னும் நிறைய படங்கள் அவர் எடுக்க வேண்டும். நல்ல உழைப்பாளி. டீசர் பார்த்தேன் அதிலேயே 43 ஷாட் இருக்கிறது, பார்க்க அட்டகாசமாக இருக்கிறது. வாழ்த்துகள். அனுமோல் உடன் அயலி சீரீஸில் நடித்தேன். இங்கு அவரிடம் பேசலாம் என நினைத்தேன், ஆனால் டிரெய்லரில் ஒரு உதை விடுகிறார் அதைப் பார்த்தவுடனே அப்படியே வீட்டுக்குப் போய்விடலாம் என முடிவு செய்து விட்டேன். அதைப் பார்த்தவுடன் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் தினமும் நிறையக் கூட்டம் இருக்கும், பட்ஜெட் பெரிதாகுமே எனக் கேட்டால், மோகன் சார் படம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பார் இயக்குநர்.

இப்போதெல்லாம் ஒரு படத்தை விளம்பரப்படுத்த ஏதோதோ செய்கிறார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு அது எதுவும் தேவை இல்லை. மோகன் சார் ஒருவரே போதும். அவர் 5 படங்களில்தான் மைக் பிடித்து நடித்தேன் என்கிறார். ஆனால் அது ஒவ்வொன்றும் 5 வருடங்கள் ஓடியிருக்கிறதே! இன்றும் எங்கும் அவர் பாடல்கள்தான்.

அவர் எத்தனையோ பேரை வாழவைத்துள்ளார். இசையை யாரும் மறக்க முடியாது, அதுபோல் மோகன் சாரை யாரும் மறக்க முடியாது. தயாரிப்பாளர் அனைவரையும் அத்தனை ஆதரவுடன் பார்த்துக் கொண்டார், அடுத்தப் படத்தில் என்னையும் மறக்க மாட்டார் என நம்புகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார்.

நாயகி அனுமோல் பேசும்போது, “அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். எனக்கு நீங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த வாய்ப்பு தந்த விஜய்ஶ்ரீ சாருக்கு நன்றி. நான் மோகன் சார் ஆக்டிங் பார்த்துதான் நடிக்க கற்றேன். அவர் பாடல்கள் எல்லாம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எல்லாப் படத்திற்கும் கதை கேட்டால்தான் எக்ஸைட் ஆவார்கள், ஆனால் இந்தப் படத்தில் மோகன் சார் நடிக்கிறார் என்றவுடனே நான் எக்ஸைட் ஆகிவிட்டேன். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படத்தில் அசத்தியுள்ளார். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.

இயக்குநர் மிகக் கடினமாக உழைத்துள்ளார். ஆக்சிடெண்ட்டில் அவர் உடம்பில் 12 பிளேட் வைத்திருக்கிறார்கள், ஆனாலும் எப்போதும் படம், படம் என்றே இருப்பார். அவர் மனதிற்கு கடவுள் பெரிய வெற்றியைத் தருவார். எப்போதும் தமிழில் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள், இப்படத்திற்கும் அதே ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன்…” என்றார்.

இயக்குநர் விஜய் ஶ்ரீஜி பேசும்போது, “அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த மேடையில் நிற்பேன் என நினைத்து பார்க்கவில்லை. காரில் போகும்போது ஒரு ஆக்ஸிடெண்ட். மூன்று நாட்கள்ள் கழித்துதான் எனக்கு நினைவே வந்தது. மோகன் சார் குடும்பத்தோடு என்னைப் பார்க்க வந்துவிட்டார். எல்லோருக்கும் குடும்பம் ன் முக்கியம். 16 லட்சம் செலவானது. மோகன் சார், மோகன் ராஜ் சார்தான் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்கள்.

மோகன் சார் மிகப் பெரிய ஆளுமை, ஆனால், ஒரு துளி கர்வம்கூட அவரிடம் இருக்காது. இந்தப் படத்திற்காக பேசும்போது, “அவருக்கு என்ன மார்க்கெட் இருக்கிறது.. அவரை வைத்து ஏன் படமெடுக்கிறீர்கள்..?” என்று கேட்டார்கள். ஆனால், கோயம்புத்தூரில் ஷூட் செய்யும்போது எங்கு போனாலும் 500 பேர் அவரைப் பார்க்க கூடி விடுவார்கள். அவர் வந்தால் தெரியும், அவர் மார்க்கெட் என்னவென்று..!?

எல்லாவற்றையும் கடந்து அவரின் மனிதம் என்னை பிரமிக்க வைத்தது. அவர்தான் என்னை உயிர்ப்பித்தார். நாம் பல இடங்களில் சீட் பெல்ட் போடுவதில்லை, கவனம் இல்லாமல் இருக்கிறோம். அதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். மோகன் சார் நடிப்பில் கலக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அவருக்கு இந்த ‘ஹரா’ மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும்…” என்றார்.

நடிகர் மோகன் பேசும்போது, “எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். எத்தனையோ படம் நடித்திருக்கலாம். ஆனால் நான் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.. இந்த ‘ஹரா’தான் என் முதல் படம். 

நான் நடித்த படங்களின் லிஸ்ட்டையெல்லாம் நான் வைத்துக் கொண்டதே இல்லை. நான் நடிக்க ஆரம்பித்தபோது, எனக்கு என மார்க்கெட் வாய்ப்பு வந்த பிறகு, எப்போதும் என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு, வெறியோடு படம் செய்வார்கள் என்றுதான் நினைத்துள்ளேன்.

என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு காரணம் இசைஞானிதான். அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால், அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர்.சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியதுதான் காரணம்.

அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப் பெறச் செய்தார்கள். அதனால்தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும்தான் என் வெற்றிக்கு காரணம்.

நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன், ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவுதான். நிகில்தான் இந்த இயக்குநர் விஜய் ஶ்ரீயை கூட்டி வந்தார், எனக்கு திரைக்கதையில் சில தயக்கங்கள் இருந்தது, அதை மனமுவந்து மாற்றினார் இயக்குநர். 7 முறை திரைக்கதையை மாற்றித்தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம்.

ஏன் இந்த ‘ஹரா’ படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டீர்கள் என எல்லோரும் கேட்டார்கள். விஜய்ஶ்ரீயிடம் ஒரு ஃபெண்டாஸ்டிக்கான லைட் அண்ட் சவுண்ட் சென்ஸ் இருக்கிறது. அந்த திறமை அவரை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும்.

விஜய்ஶ்ரீக்கு என்ன ஆனாலும், படத்தை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருப்பார். அவர் பிழைத்து வரக் காரணம் அவர் மனைவி, குழந்தைகள் புண்ணியம்தான். அவர் இன்னும் நிறைய நல்ல படங்கள் தருவார். இந்தப் படத்தில் முதலில் பாடல்கள் இல்லை. ஆனால், மூன்று பாடல்கள் வைத்துவிட்டார். மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். மணிவண்ணன் மாதிரியான அறிவு கொண்டவர். மணிவண்ணன்தான் பேப்பரில் கதை இல்லாமல் எடுப்பார்.

சுரேஷ் மேனன் சாரை கேமராமேனாக பார்த்திருக்கிறேன். இப்போது அவருடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளேன். சிங்கம்புலி, அனுமோல் முதலாக இணைந்து நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் பாருங்கள்.. உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்…” என்றார்.

Our Score