இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவின் துவக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
“எங்களுடைய இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்று எளிமையாக முடித்துக் கொண்டார்.
இசை அமைப்பாளர் தென்மா பேசியபோது, “இந்த மேடையில் பேசுவதற்காக ஐந்து வருடம் பிராக்டிஸ் பண்ணேன். இன்னைக்குத்தான் நடந்திருக்கு. காரணம் பா.இரஞ்சித் சார்தான். இந்தப் படத்தோட ஜர்னில நான் நிறைய பேருக்கு நன்றி சொல்லணும்.
தயாரிப்பாளாரா பா.ரஞ்சித் சாருக்கு ரொம்ப நன்றி. இயக்குநர் அதியன்கூட க்ளோசா பயணிக்க முடிந்தது. அவர் பொலட்டிக்கலா யோசிக்கக் கூடியவர். அதனால் எப்படி இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் பேரன்பின் காதலர். கிஷோர் பற்றி நிறையா பேசலாம். நீலம் புரொடக்சன் டீம் எல்லாருமே எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணாங்க. மேலும் என்னோட டீம் எல்லாருக்குமே நன்றி…” என்றார்.
அடுத்த்தாக பேசிய நடிகர் லிஜிஸ், “எங்கப்பாவின் ஆட்டிட்யூவைத்தான் இந்தப் படத்தில் நான் ஃபாலோ பண்றேன். என்னை ரஞ்சித் அண்ணனிடம் அறிமுகப்படுத்தியது அதியன் அண்ணன்தான். ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் போலவே இப்படத்தையும் ஊடகங்களும் மக்களும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “நீலம் புரொடெக்சன் நிறுவனம் இது போன்று நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ… அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது இந்த ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித்.
தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. படத்தைப் பற்றி ரஞ்சித் அண்ணன் நிறையவே பேசி இருக்கிறார். இப்படத்தை எதைக் கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்…” என்றார்.
நடிகை ஆனந்தி பேசும்போது, “ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடெக்சன் நிறுவனம் என் சொந்த கம்பெனி மாதிரி. நீலம் புரொடெக்சன் படத்தில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். ஏன்னா கண்டெண்ட் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கும்.
இயக்குநர் அதியன் தோழர் நல்ல இயக்குநர். அதைவிட மிகச் சிறந்த மனிதர். இந்தப் படத்திற்காக படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகப் பெரிய உழைப்பைப் கொட்டியிருக்கிறார்கள். நடிகர் தினேஷ் கிரேட் ஆர்ட்டிஸ்ட். டிசம்பர் 6-ஆம் தேதி இப்படம் வெளியாகப் போகுது. நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றியடையும்…” என்றார்.
நடிகர் தினேஷ் பேசும்போது, “சக்ஸஸ் பிஸ்னெஸ் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு படம் ஜெயித்த பிறகு அதைப் பற்றி பேசுவதுதான் எனர்ஜியாக இருக்கும். இசை வெளியீட்டு விழாக்களில் பேசும்போது எனக்கு எப்போதுமே பதட்டமாக இருக்கும். ஒரு இரும்புக் கடையில் வேலை பார்ப்பவனுக்குள் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை இயக்குநர் அதியன் பேசும்போது அதிகமாக வலித்தது. அனைவருக்கும் நன்றி…” என்றார்.
இயக்குநர் அதியன் ஆதிரை பேசும்போது, “தோழர் என்ற வார்த்தையை சொன்னதிற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இரும்புக் கடையில் வேலை செய்யும்போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக் கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். கலை இயக்குநர் ராமலிங்கம் அண்ணன் எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்துள்ளார்.
இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன். அதன் பின் எனக்கு கஷ்டமே வந்ததில்லை. இந்தக் ‘குண்டு’ படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை இருக்கிறது. இரும்புக் கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டு கொள்வதில்லை.
இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் எதார்த்தத்தை அழித்துவிடக் கூடாது என்று ரஞ்சித் அண்ணன் சொல்லியிருக்கிறார்.
இந்தப் படம் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பதிவு செய்கிறது. இந்தச் சமூகத்தில் நடக்கும் எல்லா விசயங்களின் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித், ‘நீலம் புரொடெக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்’ என்றார்.
இதைக் கேட்டபோது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இந்தக் கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படத்தைப் பார்த்த பிறகுதான் என்னுடைய கதைகளையும் படமாக பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது.
தோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பை பாராட்டி இருக்கிறார்கள். இப்படி, படத்தில் நடித்திருக்கும் அனைவருமே மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
கேமராமேன் கிஷோர் ரொம்ப நெருக்கமான மனிதர். எமோஷனலா நம்மோடு கனெக்ட் ஆகிறவர்களிடம் வொர்க் பண்ணும்போது அது சிறப்பாக வரும். இசை அமைப்பாளர் தென்மா அழகாக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார். மேலும், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி…” என்றார்.