2013-ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் உச்ச விருதான தாதாசாகேப் பால்கே விருது பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியருமான குல்சாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
79 வயதான குல்சாரின் இயற்பெயர் சம்பூரண் சிங் கர்லா. 1934-ம் ஆண்டு பிறந்த குல்சார் 1957-ம் ஆண்டில் இந்தித் திரையுலகில் ஒரு பாடலாசிரியராக கால் பதித்தார். அதிலிருந்து துவங்கி கவிஞர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், படத் தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவராக இப்போதுவரையிலும் பாலிவுட்டில் மிகச் சிறப்பான பெயரோடு இருக்கிறார்.
எண்ணற்ற விருதுகளை பெற்றுக் குவித்திருக்கும் குல்சார், 2004-ம் ஆண்டு பத்மபூஷன் விருதினைப் பெற்றார். 2002-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றிருக்கிறார். கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ள இவர், 20 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றவர்.
22 ஹிந்தி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் குல்சார். 2010-ம் ஆண்டு நமது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதினை பெற்றுத் தந்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலை எழுதியவர் சாட்சாத் இவரேதான். இதே பாடலுக்காக கிராமி விருதையும் பெற்றிருக்கிறார் குல்சார்.
ஆர்.டி.பர்மனுடன் இணைந்து இவர் வழங்கிய ஹிந்தித் திரைப்பட பாடல்கள் அனைத்துமே பாலிவுட் இசை உலகத்தில் முத்திரை பதித்தவை. ஆர்.டி.பர்மன் மட்டுமில்லாமல் ஹிந்தி திரையுலகில் கொடி கட்டிப் பறந்த அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களை எழுதிக் குவித்துள்ளார். சலீல் சவுத்ரி, மதன் மோகன், விஷால் பரத்வாஜ், சங்கர் ராய், ஏ.ஆர்.ரஹ்மான் என்று மூன்று தலைமுறைகளையும் கடந்த சாதனையாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் குல்சார்.
பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் குல்சாருக்கு தாதாசாஹேப் பால்கே விருது கிடைத்தமைக்காக நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..