full screen background image

ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்

ஓநாய் மனிதனிடம் ‘கெஸ்ட்’ ஆக சிக்கிய சாக்ஷி அகர்வால்

குட் ஹோப் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் ; சாப்டர்-2’.

இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷிஅகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி’ மதுமிதாவும் நடித்துள்ளனர்.

ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்ய, அன்வர்கான் தாரிக் இசையமைக்கிறார். படத் தொகுப்பை சியான் கவனிக்கிறார்.

க்ரைம் த்ரில்லர், சைக்கோ த்ரில்லர் என வழக்கமாக வெளிவரும் திரைப்படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு அனிமல் திரில்லர்’ என்கிற ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படம் பற்றி இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் கூறும்போது, “இன்றைக்கு இது போன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. நல்ல வியாபாரத்திற்கான அம்சங்களும் இருக்கின்றன.. அதுமட்டுமல்ல இந்த ஓநாய் மனிதன்’ என்கிற கதைக் களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போதுதான் முழுமையாகக் கையாளப்படுகிறது. 

இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ‘ஓநாய் மனிதன்’ என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் ‘ஓநாய் மனிதன்’ உருவாக்கத்தில் வி.எஃப்.எஸ். தொழில் நுட்பம் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது. 

 அதிலும் இங்கே இந்தியாவில் இந்த ‘ஓநாய் மனிதன்’ சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு வி.ஃஎப்.எக்ஸ். தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் ஹாங்காங்கில் வைத்து இந்த படத்தின் காட்சிகளை வடிவமைத்துள்ளோம்.

கொடைக்கானல் மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் கிட்டத்தட்ட 45 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். 

இப்படத்தின் கதாநாயகி சாக்ஷி அகர்வால் அத்தனை நாட்கள் அந்த காட்டுப் பகுதியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கலந்து கொண்டு நடித்தது பாராட்டுக்குரியது.

அதுமட்டுமல்ல இதுவரை நகைச்சுவை நடிகையாக பார்த்து வந்த மதுமிதா இந்த படத்தில் தனது வேறொரு நடிப்பு முகத்தைக் காட்டியுள்ளார். 

படத்தின் இரண்டு நாயகர்களும்கூட மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் ரன்வீர் குமார் மும்பையை சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் எங்களுக்கு இன்னும் வசதியாக இருந்தது. படத்தின் கதையே இந்த நால்வரை சுற்றித்தான் பின்னப்பட்டுள்ளது.. 

இந்த நான்கு பேரில் ஒருவர்தான் ஓநாய் மனிதராக மாறுகிறார்.. அது யார் ? எதற்காக அவர் ஓநாய் மனிதராக மாறுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை…” என்றார் இயக்குநர் ரங்கா புவனேஷ்வர். 

Our Score