பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது ‘குட் நைட்’.
அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தப் படம் தயாராகிறது.
இந்தப் படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார். பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதிய படத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். ‘மாடர்ன் லவ்’ புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் கண்ணா ரவி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இசை – ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பரத் விக்ரமன், கலை – ராஜ்கமல், பாடல்கள் – மோகன்ராஜன், தயாரிப்பு – நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன், பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.
“தற்காலத்தியக் காதல்கள், அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் சொல்லும் படமாக இது இருக்கும்..” என்கிறார் இயக்குநர் பிரபுராம் வியாஸ்.
சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.
இப்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.













