தமிழ்ச் சினிமாவில் அரசியல் எந்த அளவுக்கு ஊடுறுவி இருக்கிறது என்பதற்கு உதயநிதி ஸ்டாலினே இப்போது ஒரு உதாரணமாகத் திகழ்கிறார்.
2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த்தில் இருந்தே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த எந்தவொரு திரைப்படத்திற்கும் தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்கவே இல்லை. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக் கழிப்பதே தமிழக அரசின் வேலையாகிவிட்டது.
இதற்காக உச்சநீதிமன்றம்வரையிலும் சென்று வழக்காடி தீர்ப்பினை வாங்கி வந்தாலும் இன்னமும் தற்போதைய ஆட்சியாளர்களின் பாரபட்சமான போக்கு மாறவேயில்லை.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கெத்து’ படத்திற்கும் வரி விலக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
‘கெத்து’ என்பது தமிழ்ப் பெயர் இல்லை என்பதுதான் அரசுத் தரப்பினர் சொல்லும் விளக்கம். ஆனால் இந்த ‘கெத்து’ என்பதற்கு தமிழ் அகராதிகளில் ‘தந்திரம்’ என்று விளக்கவுரை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதனை எடுத்துச் சொல்லியும் வரி விலக்கு கமிட்டியினர் இதனை ஏற்க மறுத்துவிட்டார்களாம். இதனால் மறுபடியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்திருக்கிறார் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்.
இந்த வரிவிலக்கு அளிக்கும் கமிட்டியில் பழம் பெரும் நடிகை எம்.என்.ராஜம், பிரபல பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன், பாடகி வாணி ஜெயராம், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோரும் இருந்தனர் என்பதுதான் காலத்தின் கொடுமை..!
ஆட்சி மாற்றம் நடந்துவிட்டால் இவர்கள் என்ன செய்வார்களாம்..?










