Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க,
‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில்,
‘இளைய திலகம்’ பிரபு மற்றும் புது வரவான ‘பிக்பாஸ்-7’ நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர்.
டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக் களத்தில் திரில்லர் – காமெடி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இவர்களுடன் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். வான்கோ போஸ்டர் வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். மேலும் இப்படத்தில் DC படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வில் இளைய திலகம் பிரபு பேசியதாவது:
“ஃபிராங்க்ளின் தம்பி ‘ரைட்டர்’ படத்தின் இயக்குநர். அவர் ஒரு அருமையான கதையைச் சொன்னார். இப்படியொரு வித்தியாசமான படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
இப்படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் சிறப்பான கலைஞர்கள்.
குறிப்பாக, புதிய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் இயக்குநர் ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து கலந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர் யுவனுக்கும், படக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.
ராகுல் ஒரு சிறப்பான திரைப்படத் தயாரிப்பாளர். ஒரு படத்தை உருவாக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. இந்தக் கதைக்கு ஏற்ற வகையில் என்னையும் இப்படத்தில் இணைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படம் சிறப்பாக உருவாகி, அனைவருக்கும் நல்ல அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன். நன்றி.” என்றார்.
நடிகர் விஜய் வர்மா பேசியதாவது:
“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படக் குழுவினர் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தப் படத்திற்காக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் பணிகள் பற்றி எனக்குத் தெரியும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த ப்ராஜெக்ட் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன்.
இப்போது இந்தப் படம் உருவாகும் நிலையில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படம் சிறப்பாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இந்தப் பயணத்தில் இணைத்துக் கொண்ட ஃபிராங்க்ளின் அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.” என்றார்.
இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது:
“ஃபிராங்க்ளின் என்னுடைய இணை இயக்குநர். இது இன்னொரு திரைப்படம் என்ற அளவில் மட்டும் பார்க்கக் கூடிய படமாக இருக்காது. இந்தப் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தில் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இருக்கிறது.
குறிப்பாக, இளம் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் தங்களுக்கான தனித்துவமான கதைகளையும் புதிய களங்களையும் உருவாக்க வேண்டும்.
அந்த வகையில் இப்படத்தின் முயற்சி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் மற்றும் படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
‘டிசி’ படத்தில் பணியாற்றிய குழு அப்படியே இதிலும் பணியாற்றுகிறார்கள். ஃபிராங்க்ளின் ‘டிசி’ படத்திற்கு வசனம் எழுதினார். ‘வேட்டுவம்’ படத்திற்கும் எழுதியுள்ளார். ‘டிசி’ போல இந்தப் படமும் வெற்றி பெறட்டும்.
எனக்கு ‘ரைட்டர்’ படம் மிகவும் பிடிக்கும். ஃபிராங்க்ளினுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இடம் உள்ளது. அது இப்படத்தின் மூலம் நடக்கும் என்று நம்புகிறேன்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது இப்படத்தின் மிகப் பெரும் பலம்.
இளைய திலகம் பிரபு சார் போன்ற மிகப் பெரிய நடிகர் இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞருடன் புதிய தலைமுறை படைப்பாளிகள் இணைந்து பணியாற்றுவது நல்ல விஷயம்.
இந்தப் படம் சிறப்பாக உருவாகி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது:
“ராகுல் பிரதர் எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய வளர்ச்சியை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்தப் புதிய முயற்சிக்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரபு சார், உங்களை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். ‘ராக்கி’ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அது அப்போது நடக்கவில்லை.
ஃபிராங்க்ளினுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஒரு நல்ல திறமைசாலி. அவருடைய படைப்பில் ஒரு தனித்துவமான அணுகுமுறை இருக்கிறது.
என்னுடைய முதல் படமும் ஃபிராங்க்ளினுடைய முதல் படமும் ஒரே நாளில் வெளியானவை. அதன்பிறகு நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அவருடைய கதைகள் எனக்குத் தெரியும்; என்னுடைய கதைகள் அவருக்குத் தெரியும். இந்தப் படத்தின் கதையும் எனக்குத் தெரியும். இது மிகவும் நல்ல கதை.
ஒரு நல்ல இயக்குநருக்கு படம் அமையாமல் இருப்பதை மிகப் பெரும் வன்முறையாகக் கருதுகிறேன். இப்போது அவருக்கு இந்தப் படம் அமைந்திருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.
இந்தக் கதையில் பிரபு சார் நடிக்கிறார் என்று சொன்னபோது, அது எனக்கு மிகவும் ஆச்சரியமான, எதிர்பாராத தேர்வாக இருந்தது. ஆனால் அந்தக் கூட்டணி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசை தனித்துவமானது. அவர் இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலம். பிரபு சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட். நன்றி.” என்றார்.
இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் பேசியதாவது:
“முதலில் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வரவேற்பும் நன்றியும்.
ராகுல் என்னிடம் இந்த ப்ராஜெக்ட் குறித்து பேசியபோது, அவரிடம் நான் சொன்ன ஐடியா அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை நாமே செய்யலாம் என முடிவு செய்தோம்.
இப்போது அந்தப் படத்தை சிறப்பாக டேக்-ஆஃப் செய்திருக்கிறோம். இனி இதை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
பிரபு சாரை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று ராகுல்தான் முதலில் சொன்னார். எனக்கும் அதில் மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது.
தமிழ் சினிமாவில் அவருக்கென்று இருக்கும் தனித்துவமான நடிப்பு பாணியை வைத்து, இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான அணுகுமுறையில் அவரை இந்தப் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
இந்தக் கதையை அவரிடம் சொன்னபோது, அவர் மிகவும் ஆர்வமாகக் கேட்டு ரசித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதை ரசித்து, ‘இந்தப் படம் பண்ணலாம்’ என்று சொன்னது எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
இந்தக் கதையில் பிரபு சார் நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கு மிகப் பெரிய பலம். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இந்தப் படத்தின் தொடக்க நிகழ்வுக்கு வந்து எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக பா. ரஞ்சித் அண்ணன், அருண் மாதேஸ்வரன் சார், நீங்கள் வந்ததற்கு மிக்க நன்றி.
இந்தப் படக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் ஆதரவுடனும் இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்குவோம். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது:
“இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவரும் என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர்கள். அவர்களைப் பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும்.
இப்படத்தின் கதை மிகவும் சிறப்பானது. என்னுடைய நண்பரான இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப்புடன் இணைந்து பணியாற்றுவதைவிட, இளைய திலகம் பிரபு அவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்படம் கண்டிப்பாக அவருக்குப் பிடித்தமான படமாக அமையும். அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.
படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.









