1991-ம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் – மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில்தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

நடிகர் ராஜ்கிரணின் சினிமா வாழ்க்கையிலும், நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்காத இடத்தைப் பிடித்த படம் இது. 80-ஸ் கிட்ஸ் மட்டும் அல்ல இப்போதுள்ள 2K கிட்ஸுக்கும் பிடிக்கும் அளவிற்கு அப்படம் இன்றும் நிறம் மாறாமல் இருக்கிறது.
தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் ‘திப்பு சுல்தான் நைனார் முஹம்மது’ இயக்க இருக்கிறார்.

இது குறித்து நடிகர் ராஜ்கிரண் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள். “என் ராசாவின் மனசிலே” இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக் கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார்.
அவர் மிகப் பெரும் வெற்றிப்பட இயக்குநராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.