கணெக்டிங் டாட்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் , கார்த்திக் மதுசூதன் இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘டூடி’.
இசையும், இளமையும் இணைந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் கார்த்திக் மதுசூதன் ஜோடியாக சனா ஷாலினி, ஷ்ரிதா சிவதாஸ் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி, அர்ஜுன் மணிகண்டன், விஜய் மணிகண்டன், மதுசூதன் GV, அக்ஷ்தா, எட்வின் ராஜ், உத்ரா, ராணி ஸ்வாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்த பாலசாரங்கன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரவீனிடம் உதவியாளராக இருந்த ஷாம் ஆர்டி எக்ஸ் படத் தொகுப்பு செய்ய, மதன் சுந்தர்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் இயக்குநரும், கதாநாயகனுமான கார்த்திக் மதுசூதன் பேசும்போது, ”சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு சின்ன வயசிலிருந்தே ஆடல், பாடல் என கலைகளில் ஆர்வம் இருந்தது. அப்போதிலிருந்தே எனக்குள் சினிமா ஆசை இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பும் வசதியும் அப்போது கிடைக்கவில்லை.
என் அப்பா ஒரு சமையல்காரர். அதனால் 24 வயசில் நான் கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பித்து சம்பாதிக்கத் தொடங்கினேன். 2018-ல் மீண்டும் சினிமா ஆசை வந்து கதை எழுதினேன். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பாலசாரங்கனிடம்தான் முதன் முதலில் கதையை சொன்னேன். கதையை கேட்ட அவர் நன்றாக இருக்கிறது என்றார்.
பிறகு பட வேலைகளை தொடங்கினோம். கொரோனா காலக்கட்டத்தில் பட வேலைகள் பாதிக்கப்பட்டு சிக்கலை சந்தித்தேன். பல தடைகளைத் தாண்டி ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்துள்ளோம். வரும் செப்டம்பர் 16 அன்று படம் ரிலீஸ் ஆகிறது.
படத்தில் நான் கிடார் இசைக் கலைஞனாக வருகிறேன். ‘டூடி’ என்றால் என்ன அர்த்தம் என்பதை படம் பார்த்தால் தெரியும். படத்தின் தொகுப்பாளர் ஷாம் என்னோடு இணைந்து இயக்கத்திலும் பங்கேற்றார். நவீன தொழில் நுட்பங்களுடன் மதன் சுந்தர்ராஜ் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இந்த ’டூடி’ படம் இருக்கும்.” என்றார்.