ஜோக்கர் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘டோலா’.
இந்தப் படத்தில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருப்பது தனி சிறப்பம்சமாகும்.
படத்தின் நாயகனாக ‘அட்டு’ படத்தில் நாயகனாக நடித்த ரிஷி ரித்விக்கும், நாயகியாக டெல்லியைச் சேர்ந்த பிரேர்னா என்னும் புதுமுகமும் நடித்துள்ளனர். இவர்கள் இருவர் மட்டுமே படம் முழுவதும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – எட்மண்ட், கலை இயக்கம் – பி.எல்.சுபேந்தர், படத் தொகுப்பு – வீரா, இசை – அணில், மணி, நடன இயக்கம் – ரமேஷ், சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, புகைப்படங்கள் – அன்பு, டிஸைன்ஸ் – ஏ.ஆர்.பரத் குமார், தயாரிப்பு நிர்வாகி – தென்னரசு, நிர்வாகத் தயாரிப்பு – எம்.ரகு, மக்கள் தொடர்பு – பிரியா, தயாரிப்பு – டாக்டர் ஷாம்குமார், எழுத்து, இயக்கம் – ஆதிசந்திரன்.
இத்திரைப்படம் 10 நாட்களிலேயே உருவாகியிருக்கிறது என்பதும் இன்னொரு சிறப்பம்சமாகும்.
இந்த ‘டோலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் டாக்டர் ஷாம் குமார் பேசும்போது, “நான் இந்த இடத்திற்கு வருவதற்கு காரணம் என் நண்பர்கள்தான். ஒருவரை ஊக்குவிக்க முடியவில்லையென்றாலும் அவரது கைகளைத் தட்டி விடாமலாவது இருங்கள். புதிய தயாரிப்பாளர்களை அனைவரும் வரவேற்க வேண்டும். அப்போதுதான் சினிமா துறையில் பல புதிய படங்கள் உருவாகும்.
ஒரு ஜிம் பாயாக வந்த நான் இன்று ஒரு தயாரிப்பாளராக உங்கள் முன்பாக நிற்கிறேன். அதுதான் சினிமா. சினிமாவை நேசியுங்கள். அதேபோல் குடும்பத்திலுள்ளவர்களையும் நேசியுங்கள். நான் இந்த நிலைக்கு வருவதற்கு என் குடும்பமும் ஒரு காரணம். ஒரு நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தை எடுத்தேன். இப்படத்திற்குப் பிறகு ‘ரகுடு’ என்ற கேங்ஸ்டர் படத்தை அதிகப் பொருட்செலவில் எடுக்கவிருக்கிறோம்…” என்றார்.
சண்டை பயிற்சியாளர் டேஞ்சர் மணி பேசும்போது, “சண்டைக் காட்சிகள் என்று தனியாக இல்லாமல் பாடலுடன் வருவதுபோல் வித்தியாசமாக செய்திருக்கிறோம். சிறு சிறு விஷயங்களை புகுத்தி சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். கதாநாயகன் ரிஷி ரித்விக், சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறார்…” என்றார்.
கதாநாயகன் ரிஷி ரித்விக் பேசும்போது, “இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பதற்கு என்னை அழைத்து கதை கூறினார்கள். படத்திலேயே இரண்டு பேர்தான் என்றாலும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவரின் கடுமையான உழைப்பால் 10 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
சினிமாத் துறையில் வித்தியாசமாகவும், சிறப்பாகவும் செய்தால்தான் நிலைத்து நிற்க முடியும். மேலும், சண்டைக் காட்சிகளில் நான் நன்றாக நடித்திருப்பதற்கு பாண்டியன் மாஸ்டர்தான் காரணம். சிலம்பம் முதல் எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். நாயகி பிரேர்னாவும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்…” என்றார்.
இசையமைப்பாளர் அணில் மற்றும் மணி பேசும்போது, “இப்படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறோம். ஹாரர் திரில்லர் படம் என்பதால் எந்த இடத்திற்கு என்ன மாதிரியான இசையைக் கொடுக்க வேண்டுமென்று ஆலோசித்து செய்திருக்கிறோம்…” என்றனர்.
கதாநாயகி பிரேர்னா பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நடிக்கும்போது இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு தமிழ் தெரியாததால் கதாநாயகன் ரிஷி ரித்விக் படப்பிடிப்பில் எனக்கு மிகவும் உதவி செய்தார்…” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்த ‘டோலா’ படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இசையும் நன்றாக இருக்கிறது. இக்காலகட்டத்தில் சிறிய படம், பெரிய படம் என்ற வித்தியாசமில்லை. கதை நன்றாக இருந்தால் எந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் வெற்றியடையும்…” என்றார்.
‘ஜாகுவார்’ தங்கம் பேசும்போது, “இந்த ‘டோலா’ படத்தின் படப்பிடிப்பை 10 நாட்களிலேயே முடித்திருக்கிறார்கள். நானும், பாக்யராஜ் ஸாரிடம் நாமும் இது போன்று குறைந்த நாட்களில் ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்று சொன்னேன்.
நானும், கே.ராஜனும் இணைந்து சிறிய பட்ஜெட் படங்களுக்கு 100 திரையரங்குகளாவது கிடைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறோம், திரைப்படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகளை எடுக்காதீர்கள். குறைந்தபட்சம் கதாநாயகனாகனாவது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் படம் பார்க்க வரும் இளைஞர்கள் மதுவை நாடாமல் இருப்பார்கள்.
கதாநாயகன் ரிஷியை எனக்கு 4 வருடங்களாக தெரியும். அமைதியான, பண்புள்ள மனிதர். அவர் குணத்திற்கு நிச்சயம் வெற்றி பெறுவார். இப்படத்தின் டிரைலரையும், பாடல்களையும் பார்க்கும்போது ஒரு சில காட்சிகளில் பயம் ஏற்படும் அளவிற்கு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களின் கடின உழைப்பிற்கு இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது, “தயாரிப்பாளருக்கு முதல் படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், படம் வெளியிடும் அளவிற்கு வருவதே வெற்றிதான். நடிப்பதே பெரிய கலை. இயக்குநரின் கருவை உள்வாங்கி முகபாவனைகளைக் கொடுப்பதற்கு ஒரு திறமை வேண்டும். அந்த பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் கதாநாயகி பிரேர்னா. நாயகன் ரிஷியும், நாயகியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். அணில் மற்றும் மணி இருவரும் நன்றாக இசையமைத்திருக்கிறார்கள். வாழ்த்துகள்…” என்றார்.
இயக்குநர் ஆதிசந்திரன் பேசும்போது, “இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. நான் ஏகலைவன் போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன்.
பொதுவாக நான் பாடல்களிலும், இசையிலும் தலையிடுவேன். என் விருப்பத்திற்கேற்றாற்போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளரைப் பற்றி படத்தின் காட்சிகளே கூறும். தயாரிப்பாளர் ஷாம் நல்ல மனிதர்..” என்றார்.
நடிகர் சரண்ராஜ் பேசும்போது, “என்னையும் என் மகனையும் வைத்து ‘ரகுடு’ படத்தைத் தயாரிக்கிறார் ஷாம் குமார். அசோக் இப்படத்தை இயக்குகிறார். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இயக்குநர் பாக்யராஜ் படம் இயக்குவதாக இருந்தால் கதாநாயகன் யாராக இருந்தாலும் நானே அந்தப் படத்தைத் தயாரிப்பேன்…” என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்த ‘டோலா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. படத்தில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் புதுமுகங்கள்தான். காட்சி அமைப்புகளைப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. கதாநாயகியும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள்தான் எப்போதும் வெற்றி பெறும். இப்படமும் அதேபோல் வெற்றியைப் பெற எனது வாழ்த்துக்கள்…” என்றார்.
நிறைவாக ‘டோலா’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.
அதன் பின்பு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ்-ன் இரண்டாவது தயாரிப்பான ‘ரகுடு’ திரைப்படத்தின் முதல் பார்வையும் வெளியிடப்பட்டது.