முக்குழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘குழலி’.
இந்தப் படத்தில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை ஆரா நடித்துள்ளார்.
D.M.உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும், தியாகு படத் தொகுப்பினையும் செய்திருக்கிறார்கள். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ஊர்வசி, இயக்குநர்கள் R.V.உதயகுமார், பேரரசு, ஜாகுவார் தங்கம் மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் நடிகை ஊர்வசி பேசும்போது, “பல வருடங்களாக எனது அண்ணனின் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நடக்கவில்லை. தற்போது அண்ணன் ஒரு படம் எடுத்திருக்கிறார். அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
இயக்குநர் R.V.உதயகுமார் பேசும்போது, “இத்தனை வருடத்தில் நான் இயக்க முடியாமல் போன நடிகை ஊர்வசி மட்டும்தான். இப்படி போன்றவர்கள் இங்கு வருகை தந்து இப்படத்தை வாழ்த்துகிறார்கள் கண்டிப்பாக படம் வெற்றி அடையும். படம் பிரமாதமாக வந்துள்ளது. இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள். படக் குழுவினர் அனைவருக்கும் இயக்குனர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்…” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “கொரோனா காலத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறேன். ஜாதியை ஒழிப்பதற்காக திரைப்படங்கள் வர வேண்டுமே தவிர, அதை வளர்க்கக் கூடாது. சமீப காலங்களில் வரும் சாதி படங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படமாக இந்தக் ‘குழலி’ திரைப்படம் அமைய வேண்டும். இயக்குநருக்கும், படக் குழுவினருக்கும் படம் மிகப் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
நடிகர் விக்னேஷ் பேசும்போது, “சில வருடங்களுக்கு முன்பு ‘காக்கா முட்டை’ படத்திற்காக மேடை ஏறினேன். அதற்குப் பிறகு இப்படத்தில்தான் மேடை ஏறுகிறேன். இந்தப் படம் வெளியான பிறகு ‘காக்கா முட்டை’ விக்கி என அழைப்பதற்கு பதிலாக ‘குழலி விக்கி’ என்றுதான் அழைப்பார்கள் என நினைக்கிறேன்…” என்றார்.
படத்தின் இயக்குநரான செரா.கலையரசன் பேசும்போது, “சமூக அக்கறையுடன்தான் நான் படங்களை இயக்க வந்துள்ளேன். பெண்களை தவறாக சித்தரிக்கும் படங்களை நான் எடுக்க வரவில்லை. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை.
படத்தின் பாடல்கள் மிகவும் பிரமாதமாக உள்ளது. இசை அமைப்பாளர் உதயகுமார் அவர்களுக்கு இதற்காக என் நன்றி. கிராமிய இசைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளரை தகப்பன் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு உதவிகளையும், சுதந்திரத்தையும் எனக்கு அளித்திருந்தார்…” என்றார்.