‘புலி’ படத்திற்கு சமூக வலைத்தளங்களில் சரி பாதியாக கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
‘புலி’ படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த இயக்குநர் லிங்குசாமி உடனடியாக இயக்குநர் சிம்புதேவனையும், படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான பி.டி.செல்வகுமாரையும் தொடர்பு கொண்டு, குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியதற்காகப் பாராட்டியிருக்கிறார்.
மேலும், “இளைய தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தும் வகையிலான படங்களைத் தேர்வு செய்யாமல், இதுபோன்று குழந்தைகளும் பார்த்து ரசிக்கும்வகையில் தொடர்ந்து படங்களைக் கொடுக்க வேண்டும்…” எனவும் கேட்டுக் கொண்டாராம் லிங்குசாமி.
அதேபோல ‘புலி’ படம் பார்த்த இயக்குநர் எம்.சசிகுமார், “நம் தமிழ் சினிமாவை ‘புலி’ திரைப்படம் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் ஸாருக்கும், அவரது டீமுக்கும் எனது வாழ்த்துக்கள்..!” என்று வாழ்த்தியிருக்கிறார்.