சமீபத்தில் மறைந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் இயக்குநரான செய்யாறு ரவியின் புகைப்பட திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது.
சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் சங்க தலைவர் நாசர், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி, சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் சிவசீனிவாசன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நாசர் பேசும்போது, “இதுவொரு மிகவும் சங்கடமான சூழல். செய்யாறு ரவி என்னோடு படித்தவன். என்னைவிட இனியவன். என்னைவிட இளையவன், என்னைவிட மிகவும் அரும்பாடுபட்டவன். அவனுக்குள் ஒரு போராளி இருக்கிறான். அவனுடைய மறைவு செய்தி என் காதுக்கு கிட்டியபோது சற்றே அதிர்ந்துபோனேன்.
எல்லோர்க்கும் தோன்றுவதை போல, என்னையா இது என்னைவிட சின்ன பையன்தானே என்ற அதிர்ச்சி. இங்கே நீங்க எல்லோரும் வந்திருப்பதற்கு கடமை காரணமல்ல.. அவன் மீது உள்ள அன்பின் காரணமாக வந்திருக்கிறீர்கள். நானும் அதற்காகத்தான் வந்திருக்கிறேன். அவனுடைய சிரித்த முகம்.. யார்கிட்ட என்ன திட்டு வாங்கினாலும் சரி, மன அழுத்தம் இருந்தாலும் சரி, சிரிச்சிக்கிட்டே இருக்கும் குணம்.
அவன் சிறந்த மனிதனாக இருந்தான். கூடவே, சிறந்த படைப்பாளியாகவும் இருந்தான். என்பதற்கு ஒரே ஒரு சான்று, அவன் தன்னுடைய கலை பயணத்தை ஆரம்பித்தது முதல் இதுவரை தியாகராஜன் சாரோடு பயணித்து வந்தான். தியாகராஜன் சார் கடுமையான சட்ட திட்டங்களை வைத்திருப்பவர். அதை சரி பார்க்கிறவர். அவர் சாதாரணமாக ஒரு இயக்குநரை அங்கீகரித்தது கிடையாது. ஆனால், அவர் எப்போது பேசினாலும், அவன் எப்படி வேலை செய்கிறான் என்பதை பற்றி தவறாமல் சொல்வார். அந்த ஒன்றே சான்று, அவன் ஒரு தேர்ந்த படைப்பாளியாக, நல்ல மனிதராக இருந்தான் என்பதற்கு..!
அவனுடைய காலத்தை அவன் முடித்துக்கொண்டாலும், அவன் வாழ்ந்த காலத்தில் என்ன செய்திருக்கிறான், யார் யார்க்கு உதவி செய்திருக்கிறான், என்று பார்க்கும்போது நூறு ஆண்டு வாழ்க்கையை முடித்துவிட்டுத்தான் சென்றிருக்கிறான். இப்படிபட்ட ஒரு எந்திரமயமான காலத்தில் கல்லங்கபடமற்ற ஒரு சிரித்த முகத்தை பார்ப்பது மிக மிக அரிதாக இருக்கிறது. நானே ஒரு இடத்திற்கு சென்றால் சிரித்த முகத்தில் இருக்க முயற்சி செய்கிறேன், ஆனால் முடியவில்லை.
அவனை இழந்துவாடும் அவருடைய மனைவியைவிட அதிகமான இழப்பு அவனுடன் நெருங்கி பழகின நண்பர்களுக்குத்தான். அவன் ஒரு நாள் பழகினாலும், ஒரு வருஷம் பழகினாலும், இல்ல பல வருஷம் பழகினாலும் உங்ககிட்ட செலுத்துன அன்பை காட்டிலும் அதிகமாக எங்களுக்கு கொடுத்திருக்கிறான். இழப்பு எங்களுக்குத்தான். இந்த இழப்பை எப்படி ஈடு செய்வது, உங்களோடு சேர்ந்து எப்படி பகிர்ந்து கொள்வது என்பது உண்மையாக எங்களுக்கு குழப்பமாக இருக்கிறது.
ஆனால், அவன் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து போய் இருக்கிறான். ஒரு நூறாண்டு காலம் வாழ்க்கையை ஐம்பது சொச்ச காலத்தில் வாழ்ந்து சென்றிருக்கிறான். அவரது நற்குணத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவனை இழந்த அனைத்து நெஞ்சங்களோடு, எனது நெஞ்சமும் இணைகிறது…” என்றார்.
சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி பேசும்போது, ”நண்பர் செய்யாறு ரவி உதவி செய்யக் கூடிய குணம் கொண்டவர். எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
சங்கத்தின் தலைவர், செயலாளர் ஒரு மாட்டு வண்டியோட சக்கரம் போல.. ஏன் என்றால், ஒரு சக்கரம் சிறியதாக இருந்தால், அந்த வண்டி அங்கேயேதான் இருக்கும். அதேபோல ஒரு சக்கரம் பலவீனமாக இருந்தால் அந்த வண்டி எங்கேயவது விழுந்துவிடும். ரெண்டு சக்கரமும் ஒரே திசையில், ஒரே மாதிரி பயணிக்கும் போதுதான் அந்த வண்டி சரியான முறையில் பயணிக்கும்.
அந்த வகையில் எனக்கு உற்ற துணையாக எல்லா வகையிலும் பக்க பலமாக இருந்தவர் செய்யாறு ரவி சார். அந்த வகையில் எங்களது சங்கத்திற்கு அவரது இழப்பு மிகப் பெரிய பாதிப்பு. அப்படி இருந்த சக்கரம் பாதிப்போ இல்ல, பழுதோ அடையவில்லை, இந்த உலகத்தைவிட்டே காணாமல் போய்விட்டது. இதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதாவது அவரது இறப்புக்கு ஒரு நொடி முன்பு கூட, அவருக்கோ அவர் கூட இருந்தவங்களுக்கோ யாருக்கும் தெரியவில்லை. ஒரு வகையில தான் இயக்குநராக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு, ஷாட் வைத்திருக்கும்போதே இறந்ததை அவரது ஆத்மா சந்தோஷமாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கோம்.
அவருடன் நிறைய விஷயங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்களோட சங்கம் பொருளாதர நிலையில் மோசமாக இருந்தது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அதேபோல் நல்ல மனம் கொண்ட நிறைய பேருடன் பழகிக் கொண்டிருந்தவர் அவர்தான்.
அதனால், அவர் அடிக்கடி நாம் ஜெகத்ரட்சகன் சாரை சந்திப்போம்… வீரமணி ஐயாவை சந்திப்போம்..நம்ம சங்கத்துக்காக அவங்க கிட்ட உதவி கேட்கலாம்.. என்று சொல்லிட்டே இருப்பார். ஆனால் அதற்குள் அவர் இறந்தது, எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது.
அதனால், அவர் சார்பாக நான் இங்கே கோரிக்கை வைக்கிறேன். மற்ற நிறுவனங்கள், நிறைய மருத்துவமனைகள் ஏழ்மை நிலையில் கஷ்டப்படும் எங்களது சங்கத்து உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்கிறார்கள். இலவசமான கல்லூரி சீட், இலவச சிகிச்சை போன்றவற்றை வழங்குகிறார்கள். அந்த வகையில் நீங்க எங்க சங்கத்திற்கு செய்யாறு ரவி நினைவாக எது செய்தாலும் அவர் வாங்கிக் கொடுத்ததாக அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம்….” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “செய்யாறு ரவி செய்யாறில் பிறந்திருந்தாலும், அவங்க குடும்பத்தாரிடம் இருந்ததைவிட என்கூடத்தான் ரொம்ப நாள் இருந்தார். நிறைய நேரம் எனக்காக அவர் உழைத்தவர். நான் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரா இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு பெரிய காரணம் ரவிதான்.
ஒரு உதவி இயக்குநர் சரியானவனாக இல்லாமல் இருந்தால் ஒரு இயக்குநர் வளரவே முடியாது. எனக்கு அவன் சிஷ்யனாக இருந்தாலும், எனக்கு ஒரு தகப்பன். ரவி தன்னோட நலனுக்காக மட்டுமே இருக்க மாட்டான்.
முதல் படம் என்னுடன் பணிபுரிந்தான். துறு துறு என்று இருப்பான், நாளு ஆள் வேலையை அவன் மட்டுமே சுமந்து செய்வான். யாராவது தப்பு செஞ்சாலும், ‘விடுங்க சார் அவன் போக போக சரியாயிடுவான்..’ என்று சிரிச்சிட்டே சொல்லி நம்மை சமாதானப்படுத்துவான். பிறகு அவங்ககிட்ட போய், ‘பார்த்து செய்யுங்க, இயக்குநர் முதல் படம் செய்கிறார், அவரை டென்ஷன் பண்ண வேண்டாம்’ என்று சொல்லி அனைவருக்கும் ஒரு பாலமாக இருப்பான். பெரிய பெரிய தலைவர்களுக்குத்தான் இது போன்ற குணம் இருக்கும்.
ஒரு பிரச்சினை என்று வரும்போது, செல்வமணியாகட்டும், விக்ரமனாகட்டும், நான் ஆகட்டும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பேசுவான், “சார் எல்லோரும் நல்லவங்களாதானே சார் இருக்கீங்க, உங்கள பத்தி எல்லோரும் நல்லாதானே சொல்றாங்க பிறகு ஏன் சார் சண்டை போட்டுக்கிறீங்க…? விடுங்க சார்” என்று சொல்லி சமாதானப்படுத்துவான். இந்த மாதிரி ஒரு மனுஷன பார்க்குறது ரொம்ப கடினம்.
செய்யாறு ரவி என்கிட்ட சேர்த்துவிட்ட உதவியாளர் பலரும் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். சென்சார் குழுவில் இருந்த பக்கிரிசாமியைகூட என்னிடம் அவன்தான் சேர்த்துவிட்டான். அவன் யாரை அழைத்து வந்தாலும் நான் சேர்த்துக்கொள்வேன். ஏன் என்றால் அவன் நல்லதுதான் செய்வான்.
அதற்கு பிறகு தரணியை என்னிடம் சேர்த்துவிட்டதும் அவன்தான். தரணி என்னிடம் சேர்ந்து முதல் நாள் படப்பிடிப்பு, ஆக்ஷன் காட்சி படமாக்கிவிட்டு முடித்த பிறகு பிரேக்கில் சாப்பிட சென்றோம். அப்போது ஒரே சத்தம், என்ன என்று கேட்டால், பைட்டர்கள் குதித்தது போல தரணி மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாக சொன்னார்கள். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். ஆனால், அந்த விஷயமே எனக்கு தெரியாதவாறு பார்த்துக்கொண்டார் ரவி.
காரணம், விஷயம் தெரிந்தால் எங்கே நான் தரணியை வேலையில் இருந்து நீக்கிடுவோனோ என்ற அச்சத்தில், ‘அது ஒண்ணுமில்ல சார்.. லேசான காயம்தான்..’ என்று கூறி விஷயத்தை சமாளித்தார். இப்படித்தான் தனது நண்பர்களுக்காக பல உதவிகளை அவர் எப்போதும் செய்துக் கொண்டிருப்பார்.
யாரச்சும் நண்பர்கள் என்னை பற்றி தவறாக பேசினால், அவர்கிட்ட சண்டை போட்டு, என்னைப் பற்றி அவர்களிடம் விளக்கி சொல்லி அவர்களை சமாதானப்படுத்திவிட்டுத்தான் வருவார். அந்த மாதிரி ஒரு மனிதரைப் பார்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல. எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்தோடு இருப்பார்.
இறக்கும்போதும் சிரித்தபடியேதான் அவர் இறந்திருப்பார். அவரது உடல் வைக்கும்போதுகூட வாயை மூட முடியவில்லை. அந்த அதிர்ச்சியைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு எனது தாயார் மரணமடைந்துவிட்ட செய்தியை எனது சகோதரர் எனக்கு சொன்னவுடன், நான் முதலில் சொன்னது ரவிக்குத்தான். எனக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள்… நண்பர்கள் இருக்கிறார்கள்.. இருந்தாலும் எனக்கு முதலில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது ரவிக்குத்தான்.
அப்போது நான் விஷயத்தைச் சொன்னவுடன் ‘சார் நானும் வரட்டுமா..?’ என்று கேட்டான். ‘உன் வேலையை பாருடா… தேவைப்பட்டா நானே கூப்பிடுறன்..’ என்று சொல்லிவிட்டு 6.15 மணி பிளைட்டில் புறப்பட தயாரானேன். அப்போது 5 மணிக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்துட்டான்.
தனியாக இயக்குநராகி படம் இயக்கிவிட்டான், பல சீரியல்கள் இயக்கி கொண்டிருக்கிறான். அப்படி இருந்தும் என்னை எல்லாமுமாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். நான் என்றால் அவனுக்கு உயிர். அவங்க அப்பாவுக்கு அப்புறம் நான்தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல இதயக்கோளாறு ஏற்பட்டபோது மருத்துவமனையில் அனுமதித்து அதை சரி செய்துவிட்டோம். தற்போடு அதை அப்படியே கவனிக்காமல் விட்டுட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. என் தாயார் மறைவின் 16-ம் நாள் காரியத்தை முடிச்சுட்டு வர்றேன். 17-வது நாள் இவன் என்னைவிட்டு சென்றுவிட்டான். தாயையும், தனனையும் இழந்த சோகம் ஒரே நாளில் வந்தது என்றால் அது எனக்கு மட்டும்தான். நான் அவ்வளவு நேசித்தேன் செய்யாறு ரவியை.
ஒரு குடும்ப திராவிடர் கழகத்தை பின்பற்றுகிறது என்றால் அது செய்யாறு ரவியின் தந்தை குடும்பம்தான். அப்படி ஒரு குடும்பத்தை பார்க்கவே முடியாது. அவங்க அப்பா ஜனாதிபதி விருது பெற்றவர். ஆனால் அதை எப்போதும் ரவி காட்டிக்கவே மாட்டான்.
அவனுக்குப் பொண்ணு பார்க்க போனோம். ஒரு வீட்டில் பெண் கொடுக்க தயங்கினார்கள், சினிமா வேலையாச்சே என்று..! அப்போது, நானும் என் மனைவியும் பெண்ணின் பெற்றோர்களை தனியாக அழைத்து, ‘இவன் விரைவில் இயக்குநராகி விடுவான். என்னை விட பெரிய இயக்குநராவதற்கான அறிவுத் திறன் பெற்றவன், நிச்சயமாக நீங்க அவன நம்பி பெண் கொடுக்கலாம்’ என்று சொன்னோம். அவங்களும் ஒரளவு சமாதானமாகி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.
அப்புறம் எனக்கு டென்ஷன் ஆகியிருச்சு. நம்ம பேச்சை நம்பி பெண்ணையும் கொடுத்துட்டாங்க.. இவன் இயக்குநராகிவிடுவானா..? என்று. ஆனால், அதை காப்பாற்றினான். ஆனந்தி பிலிம்ஸ்ல ஒரு படம் பண்ணான். நம்ப சொன்னது நிறைவேறியது என்று எனக்கு அப்போது சந்தோஷம். பிறகு சத்யஜோதியில் ‘அரிச்சந்திரா’ படம் பண்ணான். பிறகு ஏகப்பட்ட சீரியல்கள் இயக்கினான்.
40 நாட்களுக்கு முன்பு, இலங்கைக்காக ஒரு படம் பண்ணியிருக்கேன். கமல் சார் நடிச்ச ‘பாபநாசம்’ படத்தை பண்ணியிருக்கேன், நீங்க பார்க்கணும் என்று சொன்னான். சரி நானும், என் மனைவியும் சென்று அந்த படத்தை பார்த்தோம். அந்த படத்தை பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பல வெளிநாட்டு படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், அந்த படம் ‘பாபநாசம்’ படத்தைக் காட்டிலும் நூறு மடங்கு நன்றாக இருந்தது. இதுதான் உண்மை.
அந்தப் படத்தை பார்த்ததும் முதல் முறையாக ரவி மீது எனக்கு பொறாமை வந்தது. என்னடா இப்படி ஒரு டைரக்ஷன் பண்ணியிருக்க.. என்று வியந்து பாராட்டினேன். முகம் தெரியாத நடிகர்களை வைத்து, அவங்ககிட்ட பிரமாதமாக வேலை வாங்கி, அசத்தியிருந்தான். அந்த படத்தை நீங்க எல்லோரும் பார்க்கணும். அப்படி ஒரு படம். நாம் முயற்சி செய்து அந்த படத்தை போடலாம். இந்த மாதம்தான் அந்த படம் இலங்கையில ரிலீஸ் ஆகப் போகிறது. அந்த படத்தால் சர்வதேச அளவில் விருது பெற வேண்டிய ரவி, அதற்கு முன்பாகவே சென்றுவிட்டது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இவ்வளவு சீக்கிரமாக போக வேண்டியதால் என்னவோ தனது வாழ்க்கையை வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறான். அனைவராலும் நேசிக்கப்பட்டு, அந்த புன்சிரிப்பை நாம் திரும்ப பார்க்கிறோமோ இல்லையோ, ஆனால் அதை மறக்க முடியாது. செய்யாறு ரவி, இன்னும் இருக்கிறான்.. என்னோடு இருக்கிறான்.. எனது உள்ளத்தில் இருக்கிறான். ஏன் என்றால், ஒவ்வொரு நண்பர்களையும் விட்டுக் கொடுக்கமாட்டான், அத்தகைய நண்பர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அந்த குடும்பத்திற்கு நாம் அனைவரும் இருக்கிறோம், ஒண்ணும் பிரச்சினை இல்லை. அவனது மனைவி ஜெயந்தியிடம் தன்னம்பிக்கை இருக்கிறது. அவனது மனைவியிடம் தைரியத்தை வளர்த்திருக்கிறான். அவங்க குடும்பத்தை தனியாக நின்று காப்பாற்றும் அளவுக்கு தைரியம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவன் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பான், நம்மையும் ஜெயிக்க வைப்பான். அவனுடைய நினைவுகளில் வாழும் உதயகுமார் நான்…” என்று தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசும்போது, “தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக, சங்க செயலாளர் செய்யாறு ரவி படத்திறப்பு நிகழ்ச்சி, இங்கே ஏற்கனவே உரையாற்றி அமர்ந்திருக்கிறவர்கள், உரையாற்றப் போகிறவர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.
ஆர்.வி.உதயகுமார் அவர்கள் இதயத்தை பிழிந்து சாறெடுத்து பேசி அமர்ந்திருக்கிறார்கள். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் நம் உயிரோடும், உணர்வோடும் கலந்திருக்கும் வகையில் அவர் பேசினார். நான் எதை சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை.
ரவி என்னுடைய பிள்ளை. ரவி கடந்த 25 ஆண்டு காலமாக என்னுடன் ஊனோடும், உயிரோடும் கலந்திருந்தவன். எங்களுடைய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பெருந்தகை. அவனைப் போன்ற ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்லை, பழகியதும் இல்லை.
எப்போது பார்த்தாலும் புன்சிரிப்பு ஒரு புறம். நமக்கு ஏற்படுகிற இன்னல்களைகூட, அதை கலைகிற வகையிலே, மயில் தோகையில் தடவி விடுவதை போல, நமது நெஞ்சங்களை இதமாக தடவி விட்டு அதில் இருந்து நாம் மீண்டு வர உறுதுணையாக இருப்பான்.
எனக்கு வாரத்திற்கு ஒரு சோதனை வரும், வாரத்திற்கு ஒரு பிரச்சினை வரும், அப்போது என்னுடன் பக்கபலமாக இருப்பான். அவனைப் போல எனது பிள்ளைகள்கூட என்னோடு இருந்ததில்லை. எனது உற்றார் உறவினர்கள்கூட இருந்ததில்லை, அவன் மட்டும்தான் இருந்தான். அது எந்த பிறவியில் ஏற்பட்ட பந்தம் என்று தெரியவில்லை.
வாய் திறந்து எதையும் கேட்க மாட்டான். இது வேண்டும் அது வேண்டும் என்று எதையும் கேட்டதில்லை. ஏம்பா படம் எதாவது பண்ணனுமா.. சொல்றா உதவி செய்றேன் என்று சொன்னாலும், எதுவும் வேண்டாங்க. நீங்க சந்தோஷமாக இருக்கணும். மகிழ்ச்சியா இருக்கணும், நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லி வேண்டாம் வேண்டாம் என்று சொல்வான்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது என்னை பார்த்துவிட்டுதான் போவான். அது என்னாச்சு, இந்த பிரச்சினை என்று சொன்னார்கள் சரியாயிடுச்சா, இன்கம்டாக்ஸ் ரைடு என்று சொன்னார்கள்.. என்னாச்சு, நான் யாரையாவது பார்க்க வேண்டுமா? என்று கேட்பான்.
எங்களது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திலும் அப்படித்தான் இருந்தான். எங்கள் அண்ணன் மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. எம்.ஜி.ஆரையே தராசில் வைத்து பார்ப்பவர் எங்கள் அண்ணன் ஆர்.எம்.வீ அவர்கள், ஆனால் ரவியை அண்ணன் ஆர்.எம்.வீ ஏற்றுக் கொண்டவர். அவனது திறமையை போற்றியிருக்கிறார். அந்த திறமையை எங்கிருந்து கற்றுக் கொண்டான் என்று தெரியவில்லை.
ஒரு கிராமத்து கிளி, ஒரு கிராமத்து பறவை, ஒரு சாதாரணமான கிராமத்தில் பிறந்தவன். அந்த கிராமத்தில் இருந்து வந்து நமக்கு இத்தனை வண்ணங்களை கொடுத்திருக்கிறான். அவன் ஒரு சுயம்பு, அவனது இழப்பு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஓர் திருவிழாவுக்காக காப்பு கட்டியிருந்தேன். அப்போது அவனது இறப்பு செய்தி கேட்டு பதறிப்போய் வந்தேன். எனக்காக காத்திருந்தார்கள், வந்ததும் சடங்குகளை ஆரம்பிக்க சொன்னேன்.. இல்ல அந்த பழக்கம் இல்ல என்று சொன்னார்கள். ஏம்பா நாம வன்னியர்தானே, நமக்கு அந்த சடங்குகள் இருக்கிறது.. என்றேன், இல்ல நாங்க தி.க. என்று சொன்னார்கள். ஒரு சின்ன சடங்குகூட கிடையாது. இங்கே தமையன் தலைவர் அமர்ந்திருக்கிறார், எந்த அளவுக்கு இந்த கொள்கைகளில் ஊறியிருக்கிறீர்கள் என்று நான் மெய்சிலிர்த்து போனேன். உலத்துல எங்கேயும் பார்க்க முடியாது.
சுடுகாட்டுக்கு போனோம்.. அங்கே முகத்த மூடுவதற்கு முன்னால் வாய்க்கரிசி போட வேண்டும் என்று நினைத்து, அவனது அப்பாவிடம் ‘வாய்க்கரிசி போடலாம்’னு சொன்னேன். ‘அதெல்லாம் வேண்டாம்பா.. சீக்கிரம் முடிங்கடா…’ என்று சொல்லிவிட்டார். எந்த அளவுக்கு அந்த கொள்கையில் அந்த குடும்பம் ஊறிப் போய் இருக்கிறது பாருங்கள். அந்த மன தைரியத்தை பாருங்கள்.
அந்த ஊரில் நெருப்பு மிதிப்பார்கள். ‘சாமி இல்லை என்று சொல்கிறீர்களே.. பிறகு ஏன் நெருப்பு மிதிக்கிறார்கள்..?’ என்று விசாரித்தேன், சாமி இல்ல.. சாமி இல்ல… என்று சொல்லித்தான் அந்த ஊர் மக்கள் நெருப்பு மிதிப்பார்களாம், அப்படி ஒரு திடமான கொள்ளைகளை கொண்ட கிராமத்தில் இருந்து வந்த பறவைதான் நம்ம ரவி.
அதனால்தான் அவனுக்கு இவ்வளவு திறமை வந்ததோ. ஒரு வன்னியர் சமூகம், பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகம், அது அனைவருக்கும் தெரியும். வாழ்க்கையில் மிக, மிக பின் தங்கிய சமூகத்தை சேர்ந்தவன். அவன் சினிமாவில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறான்.
ஒரு பூவுக்கு பூக்க மட்டும்தான் தெரியும், மின்னலுக்கு மின்ன மட்டும்தான் தெரியும். இவனுக்கு மட்டும்தான் அனைத்தும் தெரிந்திருந்தது இந்த கலியுகத்தில். அனைத்து பரிமாணத்தையும் தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தான். அனைத்து பரிமாணத்திற்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டவன்.
எனக்கு சத்யஜோதி பிலிம்ஸும், சத்யா மூவிஸும் சொந்த நிறுவனம் போல.. என்னிடம் வந்து ‘இப்படி சொல்லுங்க’ என்று சொல்லவே மாட்டான். நானே ‘எதாவது சொல்லட்டுமடா..?’ என்று கேட்டாலும்கூட, ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம்’ என்றுதான் சொல்லுவான். அந்த அளவுக்கு தன்னுடைய திறமை மீது மட்டுமே நம்பிக்கை வைத்து வாழ்க்கையில் உயர்ந்தவன் நம்ம ரவி.
ரவி இப்போது நம் முன் படமாக இருக்கிறான் என்று சொல்ல முடியாது, அவன் நமக்கு பெரிய பாடம். அப்படி பாடமாக இருந்தவன் இன்னும் நூறு ஆண்டு வாழ்ந்திருக்க வேண்டும். மத்தவங்கள ‘உடம்பை பாத்துக்குங்க’ என்று அடிக்கடி சொல்வான். என் கூடவே இருப்பான். கோவில் நிகழ்வுகளில் என்னுடன் கலந்து கொள்வான். ஆனா பொட்டு வைக்க மாட்டான், நான், எனது வீட்டில் கொடுத்தாலும் வச்சிக்க மாட்டான். எனக்குக் கூட தெரியாது நாத்திகத்தில் இவ்வளவு பைத்தியமாக இருப்பான் என்று..!
கொண்ட கொள்கையில் திடமாக இருந்த ஒரு பெருந்தகை. அவனது படத்தை திறப்பதற்கு எனக்கு சக்தியில்லை. நான் நேரம் கழித்து வந்ததற்கு அது ஒரு காரணம். அவன் இறந்துவிட்டான் என்று இன்றைக்கும் என்னால் நினைக்க முடியவில்லை. என் மேலே அவ்வளவு பாசம்,
ரவி குடும்பத்த பத்தி யாரும் கவலைப்படாதிங்க… நான் இருக்கிறேன். நான் பாத்துக்கிறேன். அதேபோல இந்த சின்னத்திரை பற்றி சொன்னார்கள். ரொம்ப பாவமாக இருக்கிறது. கல்லூரி பற்றி சொன்னார்கள். யார் யாருக்கோ கொடுக்குறோம். உங்களுக்கு கொடுக்கிறது பெரிய விஷயமே இல்லை.
சினிமா எடுத்துடலாம். ஆனால் தினம், தினம் சினிமா பார்க்க முடியும் என்று சொல்வது சின்னத்திரையினால் மட்டும்தான். சின்னத்திரை போல கடுமையான துறை எதுவுமே இல்லை. தினம், தினம் சிரிக்க வைக்கிறீர்கள், தினம், தினம் அழ வைக்கிறீர்கள். நீங்க எப்போது வேண்டுமானாலும் வாங்க.. உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நான் காத்திருப்பேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்..” என்றார்.
திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, “நம்முடைய பெருமைக்குரிய கெஜத் அவர்கள் ஒரு வார்த்தை சொன்னார். அவர் நமக்கு படமாக அல்ல, பாடமாகவும் திகழ்கிறார் என்று. ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி ஒரு சொல்லை பயன்படுத்துவார், இதுபோல எதிர்பாரத ஒரு சம்பவம், அதிர்ச்சியளிக்க கூடிய சம்பவம் நடந்தால், இயற்கை கோணல் புத்தி என்று சொல்வார். ஒரு மிகப் பெரிய சாதனையாளராக, இன்னும் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்த இருந்த ஒரு சகோதரனை நாம் இன்றைக்கு இழந்து தவித்துக் கொண்டிருக்கிறோம். இதில் எனக்கு மிகப் பெரிய மன சங்கடம், மன வேதனை என்னவென்று சொன்னால், அடிக்கடி அவருடன் பழகிய நண்பர்கள், தோழர்கள் சொன்னார்கள்.
அதேபோல், ஜெகத் அவர்கள் சொன்னது போல, செய்யாறு ரவி குடும்பம் திராவிட இயக்க குடும்பம், ஒரு கொள்கை குடும்பம். பெரியாரின் இந்த கொள்கைகள் அந்த சிறிய கிராமத்தில் இந்த அளவுக்கு வீரியமாக இருந்திருக்கிறது. திருமண வீட்டில்கூட நமது கொள்ளைகளை நிலைநாட்டி விடலாம். ஆனால், துக்க வீடுகளில் நிலைநாட்டுவது என்பது ரொம்ப கடினம். யாராவது ஒருவன் ஆரம்பித்து விடுவான். அதை யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், செய்யாறு ரவியின் சகோதரர்கள், அவரது தந்தையார் கொள்கையில் திடமாக இருந்திருக்கிறார்கள்.
செய்யாறு ரவியின் திருமணத்தை நானும் கலைஞரும்தான் இணைந்து நடத்தி வைத்தோம். இதே சென்னையில்தான் ரவியின் திருமணம் நடைபெற்றது. அதில் நானும், கலைஞரும் கலந்து கொண்டோம். யாருக்கு திருமணத்தை நடத்தி வைத்தோமோ, அவரது படத்தையே திறந்து வைப்பது என்பது பெரும் சோகம். இது போன்ற ஒரு சோதனை யாருக்கும் வந்துவிடக் கூடாது. நாம எத்தனையோ சோதனைகளை சந்தித்திருக்கிறோம். ஆனால், யாருடைய மண விழாவை நடத்தி வைத்தோமோ, அவரது படத்தையும் திறப்பது என்று சொன்னால், அப்போதுதான் பகுத்தறிவின் சிறப்பை சிந்திக்க வேண்டும். வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான். அதனால் இரண்டையும் ஏற்றுக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்று சிந்திக்க வேண்டும். இந்த உலகத்தோட சிறப்பே இன்று இருப்பவர் நாளை இல்லை என்பதுதான், என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
கடந்த மாதம்தான் அவர்களது புதுவீட்டு திறப்பு விழா நிகழ்வில் நாங்கள் கலந்து கொண்டோம். அப்போது ஐயாவின் 85-வது பிறந்தநாள் விழா.. வீடு திறப்பு என்று நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் ரவிதான் அனைவரையும் அழைத்துச் சென்றார். அவ்வளவு சிறப்பாக நடந்தது நிகழ்ச்சி, அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதே மாநாடு போல நடந்தது.
அவரது சகோதரர் என்னால் தயாரிக்கப்பட்டவர், எனது உதவியாளர் என்று சொல்லலாம். அவர் விடுதலை அலுவலகத்திற்கு வந்து நிகழ்ச்சி குறித்து நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். ‘நிகழ்ச்சி நல்லா நடந்தது ஐயா, ரொம்ப நன்றி, நல்ல மரியாதையாக இருந்தது’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பும் ஸ்டுடியோவில் வெளியாகிக் கொண்டிருந்தது.
அதுதான் வாழ்க்கை, எதிர்பாராதது நடந்துவிடும். அவரிடம் கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை,. நல்ல பழக்கங்கள் மட்டுமே இருந்தது. அதனால்தான் அவருக்கு இவ்வளவு வாழ்த்துகள். அவர் இன்னும் நூறாண்டு வாழ்ந்திருக்கலாம் அந்த அளவுக்கு வசதிகள் வந்திருந்தாலும், அவர் அரை நூற்றாண்டு வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறார்.
ஒருவன் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதைவிட, வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தார் என்பதுதான் முக்கியம். அப்படி வாழும்போது அவரது சரித்திரம் என்பது ரொம்ப வியப்பாக இருக்கிறது. ரவி மேலே எனக்கு தனி பிரியம் என்னவென்றால், நிறைய தோழர்களை எனக்கு அறிமுகம் செய்து வைப்பார். எதாவது ஒரு நிகழ்வுக்கு வந்தால், பத்து பேரை அறிமுகம் செய்து வைப்பார், அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க ஆசைப்படுவார்.
தந்தை பெரியாரின் முக்கியமான இரண்டு வாக்கியம், “மனிதன் தானாக பிறக்கவில்லை, தனக்காகவும் பிறக்கவில்லை” என்பதுதான். அடுத்தவருக்கு உதவுவதுதான் பகுத்தறிவு.
இல்லறம் துறவறம் என்று சொல்லுவார்கள், இன்று துறவறம் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஹைடக் துறவிகளாக இருக்கிறார்கள், அல்லது துறவிகள் போட்டி போட்டுக் கொண்டு தொழில் செய்கிறார்கள். அதனால்தான் தந்தை பெரியார் தொண்டரகம் என்று சொன்னார்கள். அப்படி ஆனால், தன் குடும்பம், தன் பிள்ளை என்று இல்லாமல், மற்றவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
அந்த வகையில் ரவியின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் திராவிட கொள்கைகளை பின்பற்றவில்லை, ரவி தனது படங்களின் மூலமாகவும் கொள்கைகளை பரப்பினார். பெரியாருக்கு சினிமா என்றால் பிடிக்காது என்று சொல்வார்கள், அப்படி ஏதும் இல்லை, அந்த சினிமா எதை வலியுறுத்துகிறது என்பதை வைத்துதான் அவரது கருத்து இருக்கும்.
அதுபோல சகோதரர் சொன்னதுபோல ரவியின் வாழ்க்கையை நாம் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் 70 ஆண்டுகளை தாண்டி விட்டது. முன்பெல்லாம் 20, 30 என்று இருந்த வாழ்க்கை தற்போது 70 ஆண்டுகள் வாழலாம்.
முன்பெல்லாம் பெண் கருவுற்றால், கிராமத்தில் சொல்வார்கள் ‘தலையில் சாவ வச்சிருக்கா, எப்போ எது வேண்ணாலும் நடக்கும்’ என்று. ஆனால், இப்போது அப்படியெல்லம் இல்லை, பல வசதிகள் வந்துவிட்டது. அப்படி இருந்தும் இது போன்ற சில நிகழ்வுகள் நடக்கின்றது.
எவ்வளவுதான் அறிவு படைத்தவர்களாக இருந்தாலும், நமது தலைவர்கள் உடற்பயிற்சியை மேற்கொண்டார்கள். முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகுதான் நோய்கள் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போதைய உணவு பழக்க வழக்கங்களினால் சிறு வயதிலேயே பல நோய்கள் வருகிறது.
இளைஞர்கள் வீட்டு உணவை சாப்பிடுவதில்லை. பாஸ்ட் புட் என்று சொல்லக்கூடிய ருசியை தேடி உடலை வீணாக்கிக் கொள்கிறார்கள். எனவே அறிவை பெருக்கி கொள்வதோடு, நமது உடலையும் நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்துக் கொண்டு அவரது இந்த வாழ்க்கையை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மனிதன் நிறைய சம்பாதிக்கலாம். பெரிய பதவிகளுக்கு போகலாம். பெரிய மனிதர். புகழ் பெற்ற நடிகர் என்று பெயர் வாங்குவதை விட ஒரு நல்ல மனிதர் என்ற பெயர் வாங்குவதுதான் சிறப்பானது. நிறைய அளவுக்கு கூட்டம் இருக்கிறது, இதில் மனிதத்தை தேடுவதுதான் முக்கியம்.
தன்னைப் போல மற்றவர்களை நினைப்பது, மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது, மற்றவர்களுக்கு கைகொடுத்து தூக்குவிடுவது, சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து கொள்வது என்பதெல்லாம் மிக மிக முக்கியம். அவற்றுக்கெள்ளாம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்தான் படமாக இருக்கும் ரவி அவர்கள்.
எனவே அவர்கள் மறைந்தும் நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார். அவரது குடும்பம் எந்த நிலையிலும் சாயாது விழாது, அவர் இருந்தால் எப்படி நடத்துவாரோ, அதைவிடவும் சிறப்பாக நடத்த அவரது துணைவியாருக்கு தைரியத்தை கொடுத்துச் சென்றிருக்கிறார். அவரது குடும்பம் தனி குடும்பம் அல்ல, நாம் அனைவரும் அந்த குடும்ப உறுப்பினர்கள், அந்த குடும்பத்தை பாதுகாக்க கூடியவர்கள் என்ற உணர்வோடு அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறோம்.
அவருடைய தந்தைக்கு வந்த சோதனை எனக்கு வந்ததை போல, அவருடைய திருமணத்தையும் நடத்தி, இப்போது அவரது பட திறப்பிலும் கலந்து கொள்கிறேனோ, அதுபோலத்தான் அவரது தந்தையின் நிலையும். இதுபோன்ற முதுமை காலத்தில் நமது சடங்குகளை பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், பிள்ளைகள் சடங்குகளில் நாம் கலந்து கொள்வது பெரும் சோகம். ஆனால் இதுதான் வாழ்க்கை.
இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். துன்பத்தின் விளிம்புக்கு சென்றுவிட கூடாது. துக்கத்தை துரத்தி நாம் வாழ்ந்து காட்டவேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.
இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது, “எல்லோருக்கும் தெரியும் செய்யாறு ரவி கருப்பு சட்டை போட்டிருப்பாரு. திராவிட கொள்கையில் ஊறிப் போய் இருப்பாரு என்பது… ஆனால், மற்றவர்களிடம் அன்பு காட்டுவதில் அவரைப்போல யாரும் இருக்க முடியாது.
2013-ம் ஆண்டு இயக்குநர்கள் சங்க தேர்தலில் நான் போட்டியிட்டேன். ஆர்.வி.உதயகுமார் எதிர் அணியில் போட்டியிட்டபோது, அவரது அணியில் செய்யாறு ரவி போட்டியிட்டார். ஆனால், பிறகு உதயகுமார் விலகிட்டாரு, நான் வெற்றி பெற்றேன். நான் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானபோது எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர் அவர்தான். எங்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிச்சார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கேரக்டர் இருக்கும். அதுபோல ரவிக்கு பிறருக்கு உதவி செய்யும் கேரக்டர் இருந்தது. மற்றவர்களுக்கு உதவி செய்வது அவருடைய தனித்துவமான கேரக்டர். அவரே முன்வந்து ‘சார் உங்களுக்கு எதாவது செய்யணுமா..?’ என்று கேட்பார். அவரது மறைவு சின்னத்திரைக்கும், பெரிய திரைக்கும் மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய இயக்குநர்கள் சங்கம் தயாராக இருக்கிறது…” என்றார்.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ரவி தன் வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கில் எங்களுடன் இருந்தார். அவரை எனக்கு 33 வருடங்களாக தெரியும். நெருங்கிய நண்பர். ரவி இறந்துவிட்டார் என்ற விஷயமே என்னால் நம்ப முடியல. அவர் பிலிம் இன்ஸ்ட்டியூட்ல சேர்ந்தது முதல், உதவி இயக்குநராக பணியாற்றியது, இயக்குநரானது என்று எதையும் மறக்க முடியல.
ரவிக்கும் எனக்குமான நட்பு பிலிம் இன்ஸ்ட்டியூட்டிலேயே ஏற்பட்ட ஒன்றாகும். ஒரு சமோசாவை நான்காக பங்கு போட்டு சாப்பிட்டு நாங்கள் வாழ்ந்திருக்கோம். எந்த நல்ல விஷயமாக இருந்தாலும் அதை ரவி பகிர்ந்து கொள்வார். ரவி என்றாலே அவரது சிறித்த முகம்தான் நினைவுக்கு வரும். அவரது இறப்பு செய்தியை கேட்டு என்னால் நம்ப முடியல. வீரமணி ஐயா சொன்ன மாதிரி வாழ்க்கையில் எதிர்பாராதது நடக்கும். அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
நான்கு நாட்களுக்கு முன்பு அவரை சந்திக்கும்போது எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தார். ஷூட்டிங்கின்போதே மரணம் என்பது யாருக்கும் கிடைக்காத பாக்கியம். இது நல்ல விஷயம் இல்லை என்றாலும், ஒரு இயக்குநருக்கு கிடைத்த கெளரவமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வீரமணி ஐயா சொன்னதைப் போல ரவியின் மரணம் பலருக்கு பாடமாக இருக்க வேண்டும். நானும் இதை பாடமாக எடுத்துக்கொண்டு எனது உடலை பேணி காக்க நினைத்திருக்கிறேன்.
ரவியின் பிள்ளைகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்களது தந்தையின் சகோதரனாக என்னை பாருங்கள். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள். அது எதுவாக இருந்தாலும் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்ற உத்திரவாதத்தை இந்த மேடையில் கொடுக்கிறேன்…” என்றார்.