நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘ராணி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் அவர்கள் இசைஞானியை மிஞ்ச முடியாது..” என்றார்.
விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “என் வாழ்நாளில் நான் இரண்டே இரண்டு பேரை பார்த்துதான் பொறாமைப்பட்டுள்ளேன். ஒன்று, என்னுடைய முன்னாள் காதலியின் கணவன்.. மற்றொன்று இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் படம் இயக்கும் இயக்குநர்கள். அந்த விதத்தில் எனக்கு இந்தப் படத்தின் இயக்குநரான பாணி மீது மிகப் பெரிய பொறமை உண்டு.
நான் இசைஞானி இளையராஜாவை கவரும் வகையில் கதையை தயார் செய்து நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன். நாம் எல்லோரும் பயணத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள்தான். அவருடைய பாடல்களை கேட்டால் 2,000 கிலோ மீட்டர் தாண்டிகூட பயணிக்கலாம்.
இயக்குநர் பாணியின் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படத்தில் எனக்கு அனைத்து பாடல்களும் மனதை கவரும் வகையில் உள்ளது. இப்படிப்பட்ட சிறந்த பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்களால்தான் உருவாக்க முடியும்.
எனக்கு இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை.. அவர் இதை போல பாடல்களைத்தான் உருவாக்க வேண்டும் என்பதுதான் அது. கரு. பழனியப்பன் கூறியதுபோல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜாதான். ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசைஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது என்பதுதான் உண்மை…” என்றார் முத்தாய்ப்பாக.