ஆந்திராவில் கடந்த வாரம் நடைபெற்ற நடிகை அஞ்சலியின் சித்தி மகன் திருமணத்தில் கலந்து கொள்ள தனது நண்பர்களுடன் சென்றிருந்தார் இயக்குநர் மு.களஞ்சியம்.
அப்போது ஓங்கோல் என்னுமிடத்தில் களஞ்சியம் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் காரில் இருந்த களஞ்சியத்தின் உதவி இயக்குநர் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் களஞ்சியத்தின் நண்பர்கள் மூவர் படுகாயமடைந்தனர்.
இயக்குனர் களஞ்சியத்திற்கு தலையில் பலத்த அடிபட்டு சுயநினைவை இழந்துவிட்டார். ஓங்கோலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ஞ்சியம் மேல் சிகிச்சைக்காக நேற்று திருச்சியில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் முழுவதும் பலத்த அடிபட்டு சுயநினைவில்லாததால் களஞ்சியத்தால் முழுமையாக எதையும் உணர முடியவில்லை. யாரை பார்த்தாலும் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே அவருக்கு தெரிகிறது. மற்றபடி யார் என்ன என்பது பற்றிய உணர்வு அவருக்கு வரவில்லை..
சில நேரங்களில் கண் விழித்துப் பார்க்கிறார்.. இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சையில் இருப்பார் என்பதும் தெரியவில்லையாம். தொடர்ந்த சிகிச்சைக்கு பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம்..
களஞ்சியம் இயக்கி அஞ்சலி நடித்த ‘ஊர் சுற்றி புராணம்’ படமும் பாதியில் நிற்கிறது. மருத்துவ சிகிச்சைக்காக யாரிடம் போய் உதவி கேட்டாலும் “ஏற்கெனவே அந்தப் படத்திற்காக கொடுத்த பணம் என்ன ஆச்சு…?” என்று கேட்டு உதவ மறுக்கிறார்களாம்.
கூடவே களஞ்சியத்தின் தற்போதைய நிலையை காரணம் காட்டி, ‘ஊர் சுற்றி புராணம்’ படத்திற்காக கடன் கொடுத்திருந்தவர்கள் இப்போது களஞ்சியத்தின் குடும்பத்தினரிடம் கடனை திருப்பிக் கேட்டு நெருக்குகிறார்களாம்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையை மனதில் வைத்து படத்தின் ஹீரோயினான நடிகை அஞ்சலி, இந்தப் படத்திற்காக வாங்கிய முன் பணத்தை திருப்பி கொடுத்தால் அதனை வைத்து களஞ்சியத்தின் உயிர் காக்கும் மருத்துவத்திற்கு செலவிடமுடியும் என்று அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
“இதற்காக திரைப்பட சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் அநியாயமாக ஒரு உயிரின் இழப்புக்கு அவர்களே காரணமாக இருப்பார்கள்..” என்று களஞ்சியத்திற்கு வேண்டிய திரையுலக நண்பர்கள் ஆதங்கத்துடன் சொல்லி வருகிறார்கள்.
இது பற்றி சம்பந்தப்பட்ட திரைப்பட சங்கங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்களாம்..
களஞ்சியத்தின் உடல் நலம் தேற நாம் ஆண்டவனை பிரார்த்திப்போம்..!