full screen background image

“அடுத்தப் பிறவியிலும் சினிமாக்காரனாகவே பிறக்க வேண்டும்” – இயக்குநர் பாரதிராஜாவின் ஆசை..!

“அடுத்தப் பிறவியிலும் சினிமாக்காரனாகவே பிறக்க வேண்டும்” – இயக்குநர் பாரதிராஜாவின் ஆசை..!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசுகையில், ”பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் நான் கலந்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால் தற்போது இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இது போன்ற நிகழ்வுகளில்தான் எனது சக கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன். அதில் கருணாஸ் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு  வீதிகளில் நடக்கும்போது என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது. கதை என்ன என்று முழுதாக தெரியாதிருந்தாலும் முன்னோட்டத்தை பார்க்கும்போதே கண்ணீர் வருகிறது.

இந்தச் சினிமா துறையில் நமக்கு கிடைக்கும் பேரும். புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை. சினிமா தொழில் நல்ல தொழில்தான். ஒரு தயாரிப்பின் மதிப்பு 100 ரூபாய். ஆனால் அந்தத் தயாரிப்பு 70 ரூபாய் செலவில் உருவாகிறது என்ற கவலைதான் அருண் பாண்டியனுக்கு. ஏனென்றால் அவன் தயாரிப்பாளராகவும் இருந்தவன்.

நடிகர்கள் சம்பளம் வாங்குவதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பட தயாரிப்பில் அவர்களுடைய சம்பளம் மட்டும் எவ்வளவு பங்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்ப் படங்களைவிட தெலுங்கு படங்களில் அண்மைக் காலமாக பிரம்மாண்டமாக பணத்தை செலவழித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

அந்த வகையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய சூழலில் தமிழ் மலையாள சினிமாக்களைவிட தெலுங்கு சினிமா ஒரு படி உயர்வாகவே இருக்கிறது.

எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் சினிமாக்காரனாகவே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை…” என்றார்.நிகழ்ச்சியின் இறுதியில் படத்தின் இசைத் தட்டை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் அதைப் பெற்றுக் கொண்டனர்.

 
Our Score