full screen background image

“முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தோமா..?” – மறுக்கிறார் சங்கத் தலைவர்

“முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தோமா..?” – மறுக்கிறார் சங்கத் தலைவர்

“முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கவில்லை. அவரது மகனை நான் பார்த்ததுகூட கிடையாது..” என்கிறார் தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரான குணசேகரன்.

இந்த அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசும்போது இதைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக பேசும்போது, “தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் திரைப்படம் திரையிடும் தொழில் செய்து வந்தவர்களை ஒருங்கினைத்து செயல்படும் அமைப்புதான் எங்களது தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி கல்வி திரைப்பட அமைப்பாளர்கள் சங்கம்.

வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளிவரும் படங்களில் குழந்தைகளுக்கான படம் என தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களை பள்ளி, கல்லூரிகளில் திரையிட அப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்று அதன் அடிப்படையில் மாநில செய்தி துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்து அவர்கள் ஒதுக்கீடு செய்யும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி இருவரும் அனுமதி வழங்கும் பள்ளி கல்லூரிகளில் படங்களை திரையிடும் வழக்கம் இருந்து வந்தது.

பள்ளி, கல்லூரிகளில் திரையிடும் படங்கள் 70 நிமிடங்கள் மட்டுமே திரையில் ஓடக் கூடிய படமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விதியின் காரணமாக 2.30 மணி நேரம் திரையில் ஓடக்கூடிய படங்களை திரையிட முடியாத சூழல் ஏற்பட்டது

இதன் காரணமாக இந்த தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேலை வாய்ப்பு இழப்பை தடுக்கவும் தொடர்ந்து அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு தனி நபர்களால் முதலீடு செய்து படங்களை தயாரிக்க முடியாது என்பதால்…

எங்களது சங்கத்தின் சார்பில் பள்ளி கல்லூரி, மாணவர்களிடம் தன்னம்பிக்கை, தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில் அரசு வழிகாட்டுதல்படி 70 நிமிடங்கள் மட்டுமே திரையில் ஓடக் கூடிய படங்களை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தேசப்பற்று, தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மற்றும் தேசிய தலைவர்கள், சாதனையாளர்களின் வரலாறு பற்றிய

1.சலாம் கலாம்

  1. தேசத்தந்தை
  2. கவிஞன்
  3. நேரு மாமா
  4. மாவீரன் நேதாஜி
  5. கலாம்,
  6. வெற்றி நிச்சயம்
  7. கருணை இல்லம்
  8. இரும்பு பெண்மணி
  9. ஜெயிப்பது நிஜம்
  10. ஓட்டப் பந்தய வீராங்கனை
  11. முடியும்
  12. உங்களால் முடியும்
  13. சாதனையாளன்
  14. கற்றவை கற்பின்
  15. விழித்தெழு
  16. நாளை நமதே

என்ற 17 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

இந்தப் படங்களுக்கு முறைப்படி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் விண்ணப்பித்து குழந்தைகளுக்கான படம் என சான்றிதழ் பெறப்பட்டது.

வணிக அடிப்படையில் திரையரங்குகளில் மேற்கண்ட படங்களை திரையிட முடியாது. பள்ளி, கல்லூரி வளாகங்களில் மட்டும் திரையிட முடியும்.

 இப்படிப்பட்ட நிலையில்தான் “போணியாகாத குறும் படம் பார்க்க 5.5 கோடி வசூலா” என தலைப்பிட்டு குறிப்பிட்ட சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

பள்ளி, கல்லூரிகளில் திரையிடுவதற்கு என்று தயாரிக்கப்பட்ட படங்களை வணிக அடிப்படையில் திரையரங்குகளில் திரையிட விற்பனை செய்ய முடியாது.

ஒரு பள்ளியில் 1000 ம் மாணவர்கள் படித்தாலும் அவர்கள் அனைவரும் திரைப்படம் பார்க்க வருவது இல்லை. அதிகப்பட்சமாக 20 சதவிகித மாணவ, மாணவிகளே படம் பார்க்க வருவார்கள். இந்த நிலையில் 5 லட்சத்து 50,000 மாணவ, மாணவிகள் இருக்கக் கூடிய மாவட்டத்தில் அனைவரும் திரைப்படத்தை எப்படி பார்த்திருப்பார்கள்? அதன் மூலம் 5.5 கோடி ரூபாய் எப்படி வசூலாகியிருக்க முடியும்?

இந்தப் படங்களை திரையிடும் உரிமைய குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுவுக்கு அவரது மகன் மூலம் 5 கோடி ரூபாய் அத்துறை சம்மந்தபட்ட அதிகாரிகள் மூலம் கொடுக்கப்பட்டதாக எந்தவித ஆதாரமும் இன்றி செய்திகள் வெளியாகியுள்ளன.

வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே படங்களை திரையிட பள்ளி, கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்காததால் திரைப்படங்களை திரையிட முடியாததால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போய் இருந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றவுடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படங்களை திரையிட அரசின் விதி முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் எங்களது சங்கத்தின் ஒற்றுமையையும், சங்க உறுப்பினர்களின் தொழிலை சீர் கலக்கும் வகையிலும், சங்கத்தில் உறுப்பினராக இல்லாத, எதிரான நிலை கொண்டவர்கள் தவறான தகவலை ஊடகங்களிடம் தெரிவித்து இது போன்ற செய்திகளை வெளிவர வைத்திருக்கிறார்கள். இதனால் எங்கள் மீது மட்டுமின்றி அரசு ஆணை வழங்கும் அதிகாரிகள் மீதும் களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் படங்களை திரையிட்டால்கூட மொத்த வருவாய் ஐந்து கோடி ரூபாய் கிடைக்காது என்பதுதான் தற்போதைய கள நிலவரம்.

இந்தச் செயல் இந்தத் தொழிலை நம்பி இருப்பவர்கள் ஒரே அமைப்பாக செயல்படுவதை சீர்குலைக்கும் முயற்சி என்பதுடன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை இந்த விஷயத்தில் சம்பந்தப்படுத்தி எங்கள் அமைப்பைக்கு அரசியல் சாயம் பூசும் முயற்சி இது என்றே கருதுகிறோம்.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய தணிக்கை வாரியம் வழங்கும் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை திரையிடுவதற்கான அனுமதி பெற செய்தி  துறை அமைச்சகத்தில் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

திரையிட விண்ணப்பிக்கும் திரைப்படங்களை அரசு அதிகாரிகள் குழு பார்த்து அவர்கள் தேர்வு செய்யும் படங்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகளில் திரையிட அனுமதி வழங்கப்படும்.

அப்படி உரிமம் வழங்கப்படும் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு நிர்ணயிக்கும் தொகையை செலுத்திய பின்னரே அரசு உத்தரவு வழங்கப்படுகிறது.

அரசு விதிமுறைகளுக்கு பொருந்தும் குழந்தைகளுக்கான  திரைப்படங்கள் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

இதைவிட்டு விட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே முறைகேடாக அனுமதி வழங்கப்படுகிறது என்று தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது

அந்த வருடத்தில் வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்பதால் அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட படத்தின் உரிமை வைத்துள்ள எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை முறைகேடு என்று எப்படி கூற முடியும்..?

காலங்காலமாக இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்வகையில் தமிழக மக்களின் மனம் கவர்ந்த முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  தொடர்ந்து செய்திட ஆவண செய்திட வேண்டுகிறோம்…” என்றார்.

Our Score