Nutmeg Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘டியர்’.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத் தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வரும் ஏப்ரல் 11-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதால் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் அப்துல் லீ பேசும்போது, “ஒரு ரகசியம் சொல்றேன். ஜீவிக்கு 4 குளோன் இருக்கு, ஒண்ணு மியூசிக் போடுது, ஒண்ணு நடிக்கப் போகுது. இதை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொன்னால் அவர் “நானே ஒரு குளோன்தான். ஒரிஜனல் ஐஸ்வர்யா ‘சுழல்’ வெப் சீரீஸில் நடிக்கப் போயிருக்கிறார்” என்றார். அவ்வளவு பிஸியான நடிகர்கள் என்றாலும் இப்படத்தில் இருவரும் நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள்.
என்னை இப்படத்தில் நல்ல முறையில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி. ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக என்னைப் பாராட்டிய அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி..” என்றார்.
நடிகை ரோகிணி பேசும்போது, “விருமாண்டி’ படத்திற்குப் பிறகு லைவ் சவுண்டில் இந்தப் படத்தை செய்துள்ளேன். மிகப் பெரிய மெனக்கெடல் இருந்தால்தான் இதைச் செய்ய முடியும். அதில் பிடிவாதமாக இருந்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள். லைவ் சவுண்ட் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போதுதான் அதன் அருமை தெரிகிறது.
ஜீவி அருமையான நடிகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் இசையமைத்த படங்களும் வருவதால், அவரை இப்போது “வெள்ளிக்கிழமை நாயகன்” என்கிறார்கள். அவரிடம் எப்படி இவ்வளவு வேலைகளைப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். என்னுடைய எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்துவிடுவேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச் சிறந்த நடிகை. நல்ல நடிப்பைத் தந்துள்ளார். இளவரசு நன்றாக நடித்துள்ளார். இதுவொரு அருமையான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.
நடிகை கீதா கைலாசம் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு நல்லதொரு கதாப்பாத்திரத்தைத் தந்த இயக்குநருக்கு நன்றி. ரோகிணி மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜீவி, ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்தது இனிமையான அனுபவம். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி..” என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “தற்காலத்திய ஆண், பெண் உறவில் ஒரு பிளவு ஏன் ஏற்படுகிறது என்பதை அழுத்தமாக இந்தப் படம் பேசுகிறது. இயக்குநர் அதனை அழகாகப் படம் பிடித்துள்ளார். சில பாடல்களை மெட்டுக்களே தந்து விடும், ஜீவியின் இசையை, மெட்டைக் கேட்டவுடன் வார்த்தைகள் வந்து விழும். அப்படி ஒரு நல்ல பாடலை இப்படத்தில் எழுதியது மகிழ்ச்சி. படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படம் எல்லோருக்குமான படமாக இருக்கும் நன்றி..” என்றார்.
ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் பேசும்போது, “இயக்குநர் ஆனந்த்துடன் இணைந்த பயணம் குறும் பட காலத்தில் ஆரம்பித்தது. இன்னும் நிறையப் பயணப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஜீவி பிரகாஷுக்கு ஒளிப்பதிவும் நன்கு தெரிந்திருக்கிறது. என்ன லென்ஸ் போடுகிறோம் என்பது முதல் அவருக்குத் தெரிகிறது, எங்கு படிக்கிறார் என்று தெரியவில்லை, ஜீவி, ஐஸ்வர்யா இருவரையும் அழகாகக் காட்டியுள்ளேன் என நம்புகிறேன். நம் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை எளிமையாகக் கையாண்டிருக்கிற படம் இது. படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும்…” என்றார்.
நடிகர் இளவரசு பேசும்போது, “பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வைதான் இருக்கும். ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர்களை பணத்திற்காகச் செய்துள்ளேன் ஆனால், இந்த அப்பா கதாப்பாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஜீவியுடன் முறைத்துக் கொள்வது போல் ஒரு பாத்திரம், நன்றாக வந்துள்ளது.
ஆண், பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன பிஹேவரியில் ஏற்படும் பிரச்சனை, எங்குக் கொண்டு செல்லும் என்பதை முதிர்ச்சியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். இப்படிப்பட்ட அருமையான படத்தைத் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். மிக முக்கியமான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.
தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி பேசும்போது, “நரேனுக்கு நன்றி. அவரால்தான் நான் திரைத்துறைக்குள் வந்தேன். ஆனந்த் கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. அவர் சிறந்த படத்தைத் தந்துள்ளார். அவருடன் படம் செய்தது பெருமையாக உள்ளது.
ஜீவி, ஐஸ்வர்யா, ரோகிணி, இளவரசு உட்பட அனைவருக்கும் நன்றி. இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி..” என்றார்.
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் பேசும்போது, “2020 ஏப்ரலில் என் முதல் படம் ஓடிடியில் வெளியானது. இங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவால்தான் நான் வெளியே கொஞ்சம் தெரிந்தேன். அதற்காக அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் ஐடியா வந்தபோது நரேனிடம் சொன்னேன். அவர் மூலமாகத்தான் வருணிடம் கதை சொன்னேன். அவர் படங்களே பார்த்ததே இல்லை. எப்படிப் புரிந்து கொள்வார் எனத் தயக்கம் இருந்தது. ஆனால் அவருக்குப் பிடித்தது. உடனே தயாரிக்கலாம் என்றார்.
அவருக்குப் பிடித்தால் அதைப் பற்றி முழுதாக தெரிந்து கொண்டு ஆர்வமுடன் செய்வார். பல ஐடியாக்கள் தந்தார். கோபி பிரசன்னா அழகாக டிசைன் செய்து தந்தார். கார்த்திக் நேத்தா அருமையான வரிகள் தந்தார். ஜெகதீஷ் என் குறும்படத்தில் வேலை பார்த்த காலத்தில் கிம்பல் வைத்து ஒரே ஷாட்டில் ஒரு படம் எடுத்தோம். அப்போது ஆரம்பித்த பயணம், என் முதல் படத்திற்கே அவரைத்தான் கேட்டேன். இந்தப் படத்தில் அவர் விஷுவல்தான் ஞாபகம் வரும். ஐஸ்வர்யாவை அழகாகக் காட்டியுள்ளார்.
எனக்கு பர்ஸனலாக டப்பிங் பிடிக்காது. அதனால்தான் லைவ் சவுண்ட். சின்ன சின்ன சவுண்ட் கூட ஷீட்டிங்கில் சிக்கலாகி விடும். திரும்பத் திரும்ப எடுக்க வேண்டி வரும். ஆனாலும் லைவ் சவுண்ட் பேசப்படும். நல்ல பெர்ஃபார்ம் பண்ணுகிற ஆர்டிஸ்டால்தான் முடியும். அதனால் தேடித் தேடி நடிகர்களைத் தேர்வு செய்தேன்.
ரோகிணி மேடம் ஏற்கனவே லைவ் சவுண்டில் வேலை பார்த்திருக்கிறார். அவரே ஒரு இயக்குநர்தான். இப்படத்திலும் பல காட்சிகளில் அசத்தியிருக்கிறார். தலைவாசல் விஜய் சார் நல்ல ரோல் செய்துள்ளார். காளி அண்ணா நல்ல மெத்தட் ஆக்டர். அருமையாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யாவிடம்தான் முதலில் கதை சொன்னேன் அவர் வீட்டுக்குப் போனபோது 60 கேடயங்கள் இருந்தன. அதைப் பார்த்தால் நல்ல கதை இருந்தால் மட்டும் வா என்பதுபோல் எனக்குத் தோன்றியது. மிக எளிமையாகப் பழகுவார். திரைக்கதையிலும் அவர் பங்களிப்பு அதிகம்.
படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சீன் வரும் அது அவர் ஐடியாதான். தயாரிப்பாளருக்குப் பிடித்த நடிகை. ஜீவியிடம், ஐஸ்வர்யாதான் ஃபிளைட்டில் பார்த்து கால்ஷீட் வாங்கித் தந்தார். ஜீவி நோதான் சொல்வார் என நினைத்தேன். ஆனால், அவரோ “கதை நல்லாயிருக்கு. நான் நடிக்கிறேன்” எனச் சொல்லிவிட்டார்.
அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிக்கும்போது கதைகள் கேட்பார். மியூசிக் போடுவார். இந்திப் படத்தில் நடிக்கிறார். தயாரிக்கிறார். அவரைப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் பெட்டராக நடிக்க முயற்சிப்பார். இப்படம் அவரோட பெஸ்ட்டாக இருக்கும்.
இது ஒரு ரிலேஷன்ஷிப் டிராமா. உங்கள் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும். ஏப்ரல் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள்…” என்றார்.
நடிகர் ஜீவி பிரகாஷ் பேசும்போது, “வாரா வாராம் என் படம் வருதே எனக் கேட்கிறார்கள். ஆனால், இது 4 வருடங்களாக உழைத்து உருவான படங்கள். அனைத்து வேலைகளும் முடித்து இப்போதுதான் வரிசையாக வெளிவருகின்றன.
ஒரு நாள் ஐஸ்வர்யாவை ஃபிளைட்டில் என்னைப் பார்த்தபோது “இந்தக் கதையைக் கேளுங்கள்” என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன். ஆனால் கதையைக் கேட்டவுடன் அழுதுவிட்டேன். மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக் கொண்டேன்.
லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். வருணுக்கு என் வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நன்றி..” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “இந்த வருடம் ஜீவிக்கு நடந்தது. கடந்த வருடம் எனக்கும் நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி எனக் கூப்பிட்டுள்ளார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும்.
கள்வன் படத்திற்காக ஜீவிக்கு வாழ்த்துக்கள். இந்த டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப் படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை அவ்வளவு அழகாகக் காட்டியுள்ளார்.
இந்தப் படம் ஷீட்டிங்கே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் பகிர்ந்து கொள்வதைக் கேட்பதே வரம்தான். எல்லோருடன் பழகியது மிகச் சிறந்த அனுபவம். இந்தப் படம் மூலம் இயக்குநர் ஆனந்த் எனக்கு நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார். இந்தப் படம் எனக்கு மூன்று வருடப் பயணம். ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.
தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன். அதுவும் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜீவிதான். நல்ல நண்பர். அவரைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் இந்த ‘டியர்’ படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.