இன்று வெளியாகவிருந்த ‘வானவராயன்-வல்லவராயன்’ படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர்கள் கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், ம.கா.பா.ஆனந்த், சந்தானம், எஸ்.பி.பி.சரண், கோவை சரளா, தம்பி ராமையா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வானவராயன் வல்லவராயன்.’
இத்திரைப்படத்தை மகாலட்சுமி மூவிஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.மதுபாலா தயாரித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 12ம் தேதி இன்று வெளியிடப்பட இருந்தது.
இந்நிலையில், வானவராயன்-வல்லவராயன் படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.
சென்னை அசோக்நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்தது.-
சோபனா தான் அளித்த மனுவில், “இந்த படத்தின் காப்புரிமையை எங்கள் நிறுவனத்துக்கு வழங்குவதாக கூறி படத்தின் தயாரிப்பாளர் பல்வேறு தேதிகளில் எங்களிடமிருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த மே 5-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள்தான் பெரும் தொகை செலவு செய்தோம்.
இதன் பின்னர், கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில், ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் விநியோ உரிமையை வேறு சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது எங்களுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து, மகாலட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணத்தை திருப்பிக் கேட்டோம்.
அவருக்கு எதிராக போலீசிலும் புகார் செய்தோம். இதையடுத்து ரூ.25 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்தனர். ரூ.85 லட்சம் பணத்தை இதுவரையிலும் அவர்கள் திருப்பித் தரவில்லை.
இதற்கிடையில், இவர்கள் செய்த இந்த மோசடியை தாங்கிக் கொள்ள முடியாமல் என் கணவர் சுரேஷ் சத்தியா மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில், எங்களுக்கு தர வேண்டிய ரூ.85 லட்சத்தை தராமல், ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை செப்டம்பர் 12-ந் தேதி திரையிட முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக கருதுகிறேன். எனவே, ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். ஒருவேளை மனுதாரருக்கு தர வேண்டிய தொகையை எதிர்மனுதாரர் கொடுத்துவிட்டால், படத்தை அவர்கள் வெளியிடலாம்’ என்று கூறியுள்ளார்.
நேற்று மாலையில் இருந்து வழக்கம்போல திரையுலகப் பஞ்சாயத்துகள் இந்தப் படத்திற்காக பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இப்போது பல திரையரங்குகளிலும் இதற்கான டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வரும் சூழலில் நிச்சயம் படம் ரிலீஸாகிவிடும் என்றே தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு வருகிறதாம்..!