தமிழகத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் அங்கம் வகிக்கும் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது
இத்தேர்தலில் நடிகர் ரவி வர்மா சங்கத்தின் புதிய தலைவராகவும், நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் சங்கத்தின் புதிய புதுச் செயலாளராகவும், நடிகர் ஜெயந்த் சங்கத்தின் புதிய பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதுபோல தற்போதைய நிர்வாகத்தினரின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டதால் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய கடந்த ஜனவரி 26-ம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது.
சென்ற முறை போலவே இந்தத் தேர்தலும் சின்னத்திரை நடிகர், நடிகையர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், இந்த முறை தேர்தலில் 4 அணிகள் போட்டியிட்டதுதான்..!
முன்னாள் தலைவரான ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையில் ‘வசந்தம் அணி’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகை நிரோஷாவின் தலைமையில் ‘நம்ம அணி’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகர் ரவி வர்மாவின் தலைமையில் ‘உழைக்கும் கரங்கள்’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகர் போஸ் வெங்கட்டின் தலைமையில் ‘புதிய தலைமுறை அணி’ என்கிற பெயரில் ஒரு அணியுமாக… மொத்தம் நான்கு அணிகள் இத்தேர்தலில் அணி வகுத்து நின்றன.
ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டிக்கு இந்த நான்கு அணிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர்.
‘வசந்தம் அணி’யின் சார்பில் போட்டியிட்ட நடிகர் ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிட்டார். செயலாளர் பதவிக்கு பரத் கல்யாணும், பொருளாளர் பதவிக்கு நடிகை ஸ்ரீவித்யா சங்கரும் போட்டியிட்டனர்.
துணைத் தலைவர் பதவிக்கு மூத்த நடிகர்களான மனோபாலா, ராஜசேகர் இருவரும் போட்டியிட்டனர். இணைச் செயலாளர் பதவிக்கு நடிகை சி.கற்பகவள்ளி, நடிகர்கள் தினேஷ், எம்.டி.மோகன், சவால் ராம் என்னும் இராமநாதன் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் அம்மு, ஆர்.அமுதப்பிரியா, ஆர்.புஷ்பலதா, சிவகவிதா, சுஹாசினி, ஆர்.வாசவி, மற்றும் நடிகர்கள் சின்னி ஜெயந்த், ஆர்.ஆதித்யா, இ.கணேஷ்பாபு, பார்த்தா என்னும் பார்த்தசாரதி, ஆர்.பிரேம்குமார், சி.எம்.ராஜ் கிருஷ்ணா, சரத் சந்திரா, வைரவராஜா என்னும் வைரமணி ஆகிய 14 பேர் போட்டியிட்டனர்.
நடிகை நிரோஷாவின் தலைமையிலான ‘நம்ம அணி’யில் அவரே தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நடிகர் பரத் செயலாளர் பதவிக்கும், நடிகர் ஸ்ரீதர் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர்.
நடிகர் வி.டி.தினகரன், நடிகை கன்யா பாரதி ஆகிய இருவரும் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிட்டனர்.
நடிகர்கள் விஜய் ஆனந்த், ரவீந்திரன், முனீஸ்ராஜா, நடிகை மோனிகா ஆகிய நால்வரும் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.
நடிகைகள் ஷில்பா, கரோலின், சன்தோஷி, ஸ்வேதா, சுஜாதா மற்றும் நடிகர்கள் சதீஷ், வசந்த்குமார், அஸ்வின் குமார், பிர்லா, ஜெயராமன், எஸ்.பி.செந்தில் வேல், கோபாலகிருஷ்ணன், கே.பி.அண்ணாதுரை ஆகிய 14 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டனர்.
‘உழைக்கும் கரங்கள்’ அணியின் சார்பில் போட்டியிடும் நடிகர் ரவி வர்மா அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிட்டார். நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் செயலாளர் பதவிக்கும், ஜெயந்த் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர்.
துணைத் தலைவர் பதவிக்கு நடிகை லஷ்மி, நடிகர் ராஜ்காந்த் இருவரும் போட்டியிட்டார்கள்.
இணைச் செயலாளர் பதவிக்கு நடிகர்கள் அசோக் சாமுவேல், டி.சிவக்குமார், ஸ்ரீகஜேஷ், நடிகை டாக்டர் ஷர்மிளா ஆகியோர் போட்டியிட்டனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகைகள் தேவி கிருபா, டி.தீபா, எஸ்.ராகவி, பிரேமலதா, செளதாமணி, தேவி, ஸ்வேதா பண்டேகர், நடிகர்கள் வெங்கடகிருஷ்ணன், சுதாகர், சி.என்.ரவிசங்கர், பிரகாஷ் ராஜன், எஸ்.பாண்டியராஜ், ஈஸ்வர் ரகுநாதன், ஆர்.தேவேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
நடிகர் போஸ் வெங்கட்டின் தலைமையில் போட்டியிடும் ‘புதிய தலைமுறை அணி’யின் சார்பில் தலைவர் பதவிக்கு போஸ் வெங்கட்டே போட்டியிட்டார்.
செயலாளர் பதவிக்கு நடிகர் பி.கே.கமலேஷூம், பொருளாளர் பதவிக்கு வி.நவீந்தரும் போட்டியிட்டனர்.
இணைச் செயலாளர் பதவிக்கு நடிகை சோனியா வெங்கட்டும், நடிகர் எல்.ராஜாவும் போட்டியிட்டனர்.
துணைத் தலைவர் பதவிக்கு நடிகர்கள் தாடி பாலாஜி, தேவ் ஆனந்த், கே.கமலஹாசன் மற்றும் நடிகை திகா என்னும் சுமதியும் போட்டியிட்டனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகைகள் பி.அருணா தேவி, சந்திரா லட்சுமண், டி.தாட்சாயிணி, ஷாமிலி, நீபா என்கிற சண்முகப்பிரியா, ஆர்.ஸ்ருதி சண்முகப்பிரியா, எஸ்.சுதா, ஸ்வேதா சுப்ரமணியன், நடிகர்கள் ஆர்.வெங்கடேஷ், சக்தி சரவணன், ரிஷி, குரு என்னும் வி.அரவிந்த், ஜெமினி என்கிற தணிகை அரசு, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த ஜனவரி 26-ம் தேதி விருகம்பாக்கம் மார்க்கெட் அருகில் இருக்கும் A.K.R. கல்யாண மண்டபத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கான ஓட்டுக்கள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிந்தது. தலைவர் பதவிக்கான ஓட்டுக்கள் தவறுதலாக மற்றைய பெட்டிகளில் போடப்பட்டிருந்ததால் ஓட்டுச் சீட்டின் மொத்த எண்ணிக்கையில் சற்றுக் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பம் மறுநாள் மற்றைய பெட்டிகளை திறந்து பார்த்து ஓட்டுக்களை எண்ணியபோது தீர்ந்து போனது.
மற்றைய பதவிகளுக்கான ஓட்டுக்கள் மறுநாள் ஜனவரி 27-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் மாலையிலேயே அனைத்து முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தலுக்கு பிரபல இயக்குநர் லியாகத் அலிகான் தேர்தல் அலுவலராகவும், இணை இயக்குநர் தங்கத்துரை துணைத் தேர்தல் அலுவலராகவும் பணியாற்றி தேர்தலை நடத்திக் கொடுத்தார்கள்.
தேர்தல் முடிவுகள் விபரம் :
தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் : 927
தலைவர் பதவி :
A.ரவி வர்மா – 264
சிவன் சீனிவாசன் – 257
நிரோஷா – 199
போஸ் வெங்கட் – 183
செல்லாத வாக்குகள் – 16
தபால் வாக்குகளில் திரும்பி வராதவை – 8
அதிக வாக்குகள் பெற்றவர் என்கிற முறையில் ரவி வர்மா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுச் செயலாளர் பதவி :
‘ஆடுகளம்’ நரேன் – 332
பரத் – 213
பரத் கல்யாண் – 196
பி.கே.கமலேஷ் – 149
செல்லாத வாக்குகள் – 27
அதிக ஓட்டுக்கள் வாங்கிய ‘ஆடுகளம்’ நரேன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொருளாளர் பதவி :
ஜெயந்த் – 294
நவீந்தர் – தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருடைய ஓட்டுக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
வித்யா சங்கர் – 196
ஸ்ரீதர் – 176
செல்லாத வாக்குகள் – 29
அதிக வாக்குகளைப் பெற்றிருந்த ஜெயந்த் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவர் பதவி :
ராஜ்காந்த் – 332
மனோபாலா – 265
கன்யா பாரதி – 203
வி.சோனியா – 200
எல்.ராஜா – 188
ராஜசேகர் – 180
லஷ்மி – 168
வி.டி.தினகரன் – 133
செல்லாத வாக்குகள் – 17
இந்தப் பிரிவில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கும் ராஜ்காந்த், மற்றும் மனோபாலா இருவரும் துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இணைச் செயலாளர் பதவி :
அசோக் சாமுவேல் – 279
விஜய் ஆனந்த் – 247
எம்.டி.மோகன் – 242
சி.கற்பகவள்ளி – 239
டாக்டர் ஷர்மிளா – 231
தாடி பாலாஜி – 208
டி.சிவக்குமார் – 206
தேவ் ஆனந்த் – 188
ஸ்ரீகஜேஷ் – 185
சவால் ராம் – 179
முனீஸ்ராஜா – 176
ஆர்.ரவீந்திரன் – 167
கே.கமல்ஹாசன் – 166
ஹெச்.மோனிகா – 166
தளபதி தினேஷ் – 166
ஸ்ரீதிகா – 135
செல்லாத வாக்குகள் – 28
இந்தப் பிரிவில் அதிக வாக்குகளைப் பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த அசோக் சாமுவேல், விஜய் ஆனந்த், எம்.டி.மோகன், சி.கற்பகவள்ளி நால்வரும் இணைச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவி :
சி.என்.ரவி சங்கர் – 319
பிர்லா போஸ் – 300
சதீஷ் – 288
தேவி – 270
ஈஸ்வர் – 266
நீபா – 251
வெங்கட கிருஷ்ணன் – 242
சின்னி ஜெயந்த் – 237
சிவகவிதா – 237
ரிஷி – 231
தீபாஸ்ரீ – 224
டி.பி.கஜேந்திரன் – 224
வைரவராஜ் – 219
தேவி கிருபா – 218
இந்த 14 பேரும் மொத்தம் போட்டியிட்ட 56 செயற்குழு வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதால் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருமே ‘உழைக்கும் கரங்கள் அணி’ என்கிற பெயரில் நடிகர் ரவி வர்மாவின் தலைமையின் கீழ் போட்டியிட்டவர்கள், என்பதால் தலைமை நிர்வாகத்தில் குழப்பம் வராது என்று நம்பலாம்.
ஆனால் அதற்கடுத்த அமைப்புகளில் குழப்பம் இருக்கிறது.
துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்காந்த், ரவி வர்மா அணியில் போட்டியிட்டவர். மனோபாலா, முன்னாள் தலைவர் சிவன் சீனிவாசனின் அணியில் போட்டியிட்டவர்.
இணைச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் சாமுவேல் ரவி வர்மா அணியிலும், விஜய் ஆனந்த் நிரோஷா அணியிலும், எம்.டி.மோகன் மற்றும் சி.கற்பகவள்ளி இருவரும் சிவன் சீனிவாசன் அணியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் சி.என்.ரவிசங்கர், ஸ்ரீதேவி, ஈஸ்வர் ரகுநாதன், தீபா, தேவி கிருபா, வெங்கட கிருஷ்ணன் ஆகிய 6 பேரும் தலைவர் ரவி வர்மா அணியைச் சேர்ந்தவர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் சின்னி ஜெயந்த், சிவகவிதா வைரவராஜ் ஆகிய 3 பேரும் சிவன் சீனிவாசன் அணியைச் சேர்ந்தவர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் நீபா, ரிஷி, டி.பி.கஜேந்திரன் ஆகிய 3 பேரும் போஸ் வெங்கட் அணியைச் சேர்ந்தவர்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் பிர்லா போஸ், சதீஷ் ஆகிய 2 பேரும் நிரோஷா அணியைச் சேர்ந்தவர்கள்.
இப்படி ஒரு கதம்ப மாலையாக அனைத்து அணியினரும் கலந்து கட்டி தேர்வாகியுள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த நான்கு அணியினருமே, “நாங்கள் இப்போது தேர்தலில் நான்கு அணிகளாக போட்டியிட்டாலும், தேர்தல் முடிந்த பிறகு… யார் வெற்றி பெற்றாலும் ஒரே அணியாகவே நாங்கள் செயல்படுவோம்…” என்று சொல்லியிருந்தார்கள்.
இப்படி அவர்கள் சொன்னதை நிச்சயமாக செயல்படுத்துவார்கள் என்று 1500-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்..!
நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக..!!!
















