‘அய்யன்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏஆர்.கேந்திரன் முனியசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’.
அவரே நாயகனாக நடித்திருக்கும் படத்தில், கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் நடித்து இருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான், சிவக்குமார், டெல்டா வீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த ‘ஓங்காரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் மோகன்.ஜி., நடிகர் கஞ்சா கருப்பு, சர்வதேச விளையாட்டு வீரர் மா.ரா.சௌந்தரராஜன், தமிழ் திரைப்பட விநியோகஸ்தர் ஜெயம் S.கோபி, தமிழ் திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் R.K.அன்புச் செல்வன், தயாரிப்பாளர் ராஜன், நடிகர் சரவண சக்தி உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ‘நடிகர், நடிகைகளுக்காகத்தானே நாங்கள் இவ்வளவு சிரமப்படுகிறோம். நாங்கள் செய்யும் செலவு அத்தனையும் உங்களுக்காகத்தான். ஆகவே படத்திற்கு மரியாதை கொடுங்கள். படங்களில் நடிக்கும் நடிகையைவிட நடிகையின் அம்மாதான் ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகியாக நடித்த நடிகை, இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு 1 லட்சம் கேட்டதாகவும், அதுமட்டுமின்றி பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தாராம். தயாரிப்பாளர்கள் அதை ஏற்காததால், இந்த விழாவிற்கு படத்தின் நாயகி வரவில்லை. இதனால், அவரை வேறு தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பணியில் சிறந்து விளங்கி வருகிறார். ஆனால் திரையுலகினருக்கு இன்னமும் ஏதும் செய்யவில்லை. கருணாநிதி திரைத்துறைக்காக நிறைய செய்துள்ளார். ஆகவே, அவரின் மகனான நீங்கள் உதவ வேண்டும். சின்ன திரைப்படம்தான் சினிமாவை காப்பாற்றி கொண்டிருக்கிறது…” என்றார்.
இயக்குநர் மோகன்.ஜி பேசும்போது, “சினிமாவில் வலது சாரி, நடு நிலை, இடது சாரி என அனைத்து திரைப்படங்களும் வெளியாக வேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஒன்று. யாரும், இவற்றின் கதைகளை எடுக்கக் கூடாது என வற்புறுத்தக் கூடாது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வலதுசாரி சிந்தனை கொண்டது. கல்கி எழுதிய நாவல் முழுவதுமே அப்படிதான். திரைப்படத்தில், த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரமும், விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரமும் உரையாடும் காட்சி ஒன்றுதான் தற்போது எழுந்துள்ள இந்த சர்ச்சைக்கு அடிப்படை.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில், கையாலய மலையின் வடிவத்தை கொண்டது. ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனும், கங்கை கொண்ட சோழபுரத்தை தூய்மைப்படுத் கங்கையில் இருந்து நீர் எடுத்துவந்து ஊர் முழுவதும் தெளித்தார். இந்த சடங்கு தற்போதுவரை துக்க வீடுகளில் செய்யப்படுகிறது. எனவே, தற்போதைய காலக்கட்டத்தைதான் பார்க்க வேண்டும். மக்களை குழப்பி, அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்க வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ் திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான R.K.அன்புச் செல்வன் பேசியபோது, “சினிமா, வெறும் சினிமாவாக இருக்கும்போது சினிமாவாகவே இருந்தது. சினிமாவுக்குள் எப்போது அரசியல் புகுந்ததோ அப்போது சினிமாவின் முகம் மாறி விட்டது. இன்று முருகதாஸ் போன்ற எத்தனையோ திறமைமிக்க இயக்குநர்கள் வாய்ப்பு கிடைக்காமல் அலைகிறார்கள். நல்ல கதை இருந்தால் ஒரு சிறிய பட்ஜெட்டில் நல்ல படம் பண்ண முடியும். அதற்கு இந்த தம்பியும் ஒரு உதாரணம்.
சினிமா நிகழ்ச்சிகளுக்கு பேச வந்தால், சினிமா பற்றியே பேச வேண்டும். அரசியல் பேசக் கூடாது. ஒரு ஆட்சி வந்தால் மொத்தமாக அங்கு போய் ஜால்ரா அடிப்பது. இன்னொரு ஆட்சி வந்தால் மொத்தமாக அங்கு போய் ஜால்ரா அடிப்பது. முதலில் இதை கை விடுங்கள். முதல்வர் என்றால் முதல்வருக்குரிய மரியாதையை கொடுங்கள். அது போதும்.
இந்த ‘ஓங்காரம்’ படத்தின் இயக்குநர் ஒரு நாள் என்னைப் பார்க்க வந்தார். “இந்த ஓங்காரம் படத்திற்கு சென்சார் பண்ணனும்” என்றார். படத்தைப் பற்றி எல்லா விஷயத்தையும் சொன்னார். “வாங்க தம்பி” என்று அழைத்து போய் என்னென்ன செய்ய வேண்டுமென அனைத்தையும் சொன்னேன். தம்பியும் நாங்கள் சொன்ன விஷயத்தை முறையாக பின்பற்றி சென்சாரும் வாங்கிட்டார். சின்ன பட்ஜெட்டில் நல்லாவே படம் பண்ணியிருக்கிறார் இந்த தம்பி.
இன்றைய இயக்குநர்கள் பலரும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் பின்னே அலைந்து தயாரிப்பாளர்களை தெருக்கோடிக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். நல்ல கதை இருந்தால் 1.5 கோடிக்குள் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துவிட முடியும்.
இன்று பல சிறு பட தயாரிப்பாளர்கள் விளம்பரம் குடுக்க முடியாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். தினத்தந்தியில் கால் பக்க விளம்பரம் குடுக்கக்கூட பல தயாரிப்பாளர்கள் கையில் பணம் இல்லாமல் இருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமாவை வாழ வைப்பது ‘தினத்தந்தி’ பத்திரிகை மட்டுமே. யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இதுதான் உண்மை. சிறு பட தயாரிப்பாளருக்கு கை கொடுக்கும் நாயகனாக ‘தினத்தந்தி’ திகழ்கிறது. ஒரு படத்திற்கு 4 விளம்பரங்கள் இலவசமாக தினத்தந்தி கொடுக்கிறது. நேற்று இந்த தம்பியுடைய இந்த ‘ஓங்காரம்’ படத்தின் விளம்பரம் ‘தினத்தந்தி’யில் இலவசமாக வந்து இருக்கிறது. ‘தினத்தந்தி’ சிறு பட தயாரிப்பாளர்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்ச் சினிமாவையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா சிறு பட தயாரிப்பாளர்களை நம்பியே இருக்கிறது. இங்கு சிலர் பேச பயப்படுகிறார்கள். ஜால்ரா போட்டு பயனில்லை. சினிமா நல்லா இருக்கணும் என்றால் ஜால்ராக்கள் ஒழியணும். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஜால்ரா போடாமல் அவர்களிடம் கோரிக்கை வையுங்கள். சினிமாவை வாழ வையுங்கள். சிறு பட தயாரிப்பாளர்களுக்கு பல உதவிகளை எங்கள் சங்கம் செய்கிறது. இன்னமும் தொடர்ந்து செய்யும்…” என்றார்.