full screen background image

‘உறுமீன்’ படத்தின் டிரெயிலருக்கே சென்சார் தடை..!

‘உறுமீன்’ படத்தின் டிரெயிலருக்கே சென்சார் தடை..!

பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன் நடித்த ‘உறுமீன்’ படத்தின் டிரைலருக்கு தணிக்கை குழு அனுமதி தர மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த டிரைலரை மறு தணிக்கைக்கு அனுப்ப படத்தின் டைரக்டர் முடிவு செய்து இருக்கிறார்.

‘ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘உறுமீன்.’ இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். சக்திவேல் பெருமாள்சாமி டைரக்டு செய்து இருக்கிறார்.

இந்தப் படத்தின் டிரைலர் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. டிரைலரில் வரும் ஒரு வாசகத்தை அனுமதிக்க முடியாது, அதனை நீக்க வேண்டும் என்று தணிக்கைக் குழுவினர் கூறியிருக்கிறார்கள். இதற்கு இயக்குநர் மறுப்பு தெரிவிக்கவே  ‘சான்றிதழ் தர முடியாது’ என்று தணிக்கைக் குழுவினர் சொல்லிவிட்டார்களாம்.

இது பற்றி டைரக்டர் சக்திவேல் பெருமாள்சாமி கூறும்போது, ‘‘உறுமீன் படத்தின் டிரைலரை தணிக்கை குழுவினருக்கு சமீபத்தில் திரையிட்டு காண்பித்தேன். அதில், ‘பழி வாங்குதல்தான் எப்போதுமே இறுதியானது’ என்ற ஒரு வாசகம் ஆங்கிலத்தில் ஸ்லைடாக வருகிறது. இதை அனுமதிக்க முடியாது என்று தணிக்கை குழுவினர் கூறிவிட்டார்கள். படத்தின் கதை சம்பந்தப்பட்டதால் அந்த வாசகத்தை நீக்க முடியாது என்று நானும் கூறிவிட்டேன்.

இதனால், டிரைலரை மறு தணிக்கைக்கு கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வாசகத்துக்காக படத்தின் டிரைலருக்கு தணிக்கை குழு தடை விதித்து இருப்பது அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தணிக்கை குழுவின் விதிகளும், அவர்கள் முன் வைக்கும் வாதங்களும் அவசியமற்றதாக உள்ளது. பல படங்களில் அநாகரீகமான வார்த்தைகள் இடம் பெறுகின்றன. ஆபாசம், வன்முறை என்று அனைத்தையும் அனுமதிக்கும் தணிக்கை குழு, இதை நிராகரித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை. மறு தணிக்கையிலும் இந்த வாசகத்தை அனுமதிக்கவில்லையென்றால் டிரெயிலரை வெளியிடாமலேயே படத்தை வெளியிடுவேன்…’’ என்றார் ஆவேசமாக..!

அப்போது படத்திற்கும் தணிக்கைக் குழுவினர் தடை போட்டால் என்ன செய்வீர்கள் இயக்குநர் ஸார்..?

Our Score