சென்ற ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற கையோடு, சினிமா விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற திரைப்படம் ‘கேர் ஆஃப் காஞ்சரபலேம்.’
தெலுங்கு சினிமாவின் வழக்கமான திரைப்படங்களை போல் இல்லாமல், முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது இத்திரைப்படம்.
ஆந்திராவின் விசாகப்பட்டிணத்தை கதைக் களமாகக் கொண்ட இந்தப் படம் நான்கு பல்வேறு வயதுள்ளவர்களின் காதல் கதைகளைக் கொண்டது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக பிரபல தெலுங்கு நடிகர் ராணா டக்குபதியும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழுக்கு ஏற்றாற்போல சில மாறுதல்களுடன் ஒரு யதார்த்தமான காதல் கதையாக இத்திரைப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தை ஸ்ரீஷீரடி சாய் மூவீஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் எம்.ராஜசேகர் ரெட்டி, ஜீவன் கோத்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்திற்கு ஸ்வீகர் அகஸ்தி இசை அமைக்க, குணசேகரன் ஒளிப்பதிவு செய்கிறார். மகா வெங்கடேஷ் கதை எழுத, நீலன் வசனம் எழுத, கபிலன் பாடல்களை எழுத, உடை வடிவமைப்பை சாய் மேற்கொள்கிறார். டெட்ல பள்ளி மதன் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று இருக்கிறார். இயக்குநர் ஹேமம்பர் ஜஸ்தி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும், எதிர்கொள்ளும் மனிதர்களையும், சம்பவங்களையும் மனதில் கொண்டு உருவாகி இருப்பதால், அனைத்து ரசிகர்களும் தம்முடைய வாழ்வில் ஏதோ ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்விதத்தில் ஒரு ஜனரஞ்சகமான கதைக் களமாக அமைந்துள்ளது.
இப்படத்திற்கான பூஜை கடந்த ஜூலை-11ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது நட்சத்திரங்கள், தொழிற் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.