தயாரிப்பாளகர்களான ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’.
இந்தப் படத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் – விக்ரம் ஸ்ரீதரன், எழுத்து, தயாரிப்பு – ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன், இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் – உதய் தங்கவேல், தயாரிப்பு வடிவமைப்பாளர் – ராமு தங்கராஜ், படத் தொகுப்பு – இனியவன் பாண்டியன், ஆடை வடிவமைப்பாளர் – ஸ்ருதி கண்ணத், கூடுதல் திரைக்கதை எழுத்தாளர் – அனுசுயா வாசுதேவன், ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமாஸ், ஒலிக்கலவை – அரவிந்த் மேனன், கலரிஸ்ட்/ டிஐ – பிரதீக் மகேஷ், விஷூவல் எஃபெக்ட்ஸ் – ஃபிக்ஸ் இட் இன் போஸ்ட் ஸ்டுடியோ, தயாரிப்பு நிர்வாகி – ரவிக்குமார், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஸ்ரீராம் சிவராமன், லைன் புரொட்யூசர் – கார்த்தி வேல், புரொஸ்தெடிக்ஸ் – வினீஷ் விஜயன், விளம்பர வடிவமைப்பாளர் – கௌதம்.ஜே., உதவி இயக்குநர்கள் – டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார்.
‘ஜெனி’ என்ற மிர்னாவின் கதாபாத்திரத்தைச் சுற்றியே இந்தப் படத்தின் கதை நகர்கிறது. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசும்போது, ” இந்த ‘பர்த் மார்க்’ திரைப்படம் நிச்சயமாக ஒரு புது அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும்.
இதுவரை பார்த்துச் சலித்த கதைகளைப் போல இல்லாமல் புதிதாக எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போதுதான் சுகப் பிரசவம் பற்றி விக்ரம் ஒரு விசயத்தைக் கூறினார். அதைப் பற்றி படிக்கும்போது நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் தெரிய வந்தது.
இப்போது இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்ததால் அதையே படமாக எடுத்துள்ளோம். நம் வாழ்க்கையில் ‘பர்த் மார்க்’ என்பது சாதாரண விஷயம் கிடையாது.
இந்தப் படம் 1990-களில் நடக்கிறது. கார்கில் போருக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய டேனி என்ற இராணுவ வீரர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை தன்வந்திரி என்கிற கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் அந்த கிராமம்.
அங்கு தம்பதிகள் சந்திக்கும் மனப் போராட்டங்கள், மாற்றங்களைத் த்ரில்லர் பாணியில் சொல்லி இருக்கிறோம். இந்தக் கிராமத்திற்காக தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை அமைத்தோம்.
‘ஜெனி’ என்ற கதாபாத்திரத்தில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். ஷபீரும் கடுமையாக உழைத்திருக்கிறார்.
படம் பார்த்து முடித்ததும் தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை ஒவ்வொரு ஆண் மகனுக்கும் இந்தக் கதை ஏற்படுத்தும். இதைத்தான் நாங்கள் உணர்த்த விரும்பினோம்” என்றார்.
இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.









