“அரசியல்வாதிகள் சினிமா படங்கள் திரையிடுவதில் தலையிடுவது மடத்தனத்தின் உச்சக்கட்டம் என்று சீறியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
இன்று வெளிவந்திருக்கும் ‘குமுதம்’ வார இதழில் “இன்றைக்கு படம் வெளியிடுவதற்குள் நிறைய அரசியல் கட்டுப்பாடுகள் வருதே..?” என்ற கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதில் இது :
“சினிமாக்காரங்ககிட்ட ஒத்துமை இல்ல. அதன் விளைவுதான் இது.
இந்திய அரசு தணிக்கை செய்த படத்தை நாங்க அப்ஜெக்ட் பண்றோம்னு சொல்றீங்களே..? நீங்க யாரு? They are running the parreval government-ஆ? நீங்க ஒரு குட்டி அரசாங்கம் நடத்துறீங்களா..?
நீங்க எந்த சமூகத்தைச் சேர்ந்தவரா வேண்ணாலும் இருங்க. நீங்க எந்த அரசியல் இயக்கத்தையும் சேர்ந்தவராகவும் இருங்க. மேடை போட்டு பேசும்போது என்ன பேசப் போறீங்கன்னு யாருக்குமே தெரியாது. நீங்க பேசும் ஐந்து நிமிடத்திற்குள் மக்களை எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாம். ஒரு அரை மணி நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அப்ப முன்கூட்டியே என்ன பேசப் போறீங்கன்னு காவல்துறைகிட்ட எழுதிக் கொடுத்துவிட்டு பேசத் தயாரா..?
சினிமாக்காரன்கிட்ட ‘படத்தை போட்டுக் காட்டு’ன்னு கேக்குறீங்களே.. அதேபோல எங்களுக்கு ‘முன்கூட்டியே பேசிக் காட்டு’ன்னு நாங்க கேட்டா..? ‘உங்க பேச்சால எங்க சமூகம் பாதிக்குதா..? ஜாதி பாதிக்குதா’ன்னு நாங்க சோதிச்சுப் பார்த்திட்டு சொன்னதற்கு அப்புறமா மேடை போட்டு பேசிட்டுப் போங்க.
எங்களுக்காவது சென்சார்ன்னு ஒண்ணு இருக்கு. உனக்கென்ன சென்சார்..? ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டி வைச்சு நீங்க எந்த விளைவையும் உண்டாக்கலாமே..? அப்ப உங்க பேச்சுக்கு ஒரு சென்சார் வேண்டாமா..? என்னைப் பொறுத்தளவில் இதெல்லாம் மடத்தனத்தின் உச்சக்கட்டம்..” என்று பதிலளித்துள்ளார் பாரதிராஜா.