பரதன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக அதன் தயாரிப்பாளர்களான R.V.பரதன் B.A,B.L மற்றும் S.V.R.ரவி சங்கர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். ‘அனேகன்’ படப் புகழ் அமீரா தஸ்தர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
எழுத்து, இயக்கம் – ஆதிக் ரவிச்சந்திரன், இசை – கணேசன் சேகர், ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமனுஜம், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – ஷிவ யாதவ், சண்டை இயக்கம் – ராஜசேகர், அன்பறிவு, நடனம் – ‘பாபா’ பாஸ்கர், பாடல்கள் – பா.விஜய், உடைகள் வடிவமைப்பு – NJ.சத்யா, ஒப்பனை – குப்புசாமி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D one, புகைப்படங்கள் – சாரதி, விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஹரிஹர சுதன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – P.பாண்டியன், விளம்பர வடிவமைப்பு – D stage, தலைப்பு வடிவமைப்பு – சிவக்குமார், தயாரிப்பு – R.V.பரதன் B.A,B.L., S.V.R.ரவி சங்கர்.
தலைப்பு வைக்காமலேயே படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் முடித்திருக்கும் படக் குழுவினர், இப்போது இந்தப் படத்திற்கு ‘பஹிரா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
தலைப்பே நம்மை உள்ளிழுக்கும் அம்சமாக இருக்கும் அதே நேரம், பல கேள்விகளையும் எழுப்புகிறது. படம் எதைப் பற்றியது என ஆவலைத் தூண்டும்படி தலைப்பு அமைந்துள்ளது.
இது பற்றி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, “இத்தலைப்பு பிரபல காமிக் கதையான ‘தி ஜங்கிள் புக்’ கதையில் இடம் பெற்றிருக்கும் பெயர்தான். அந்தக் கதையில் வரும் நாயகன் கதாப்பாத்திரமான மோக்ளியை அரும்பாடுபட்டு காப்பாற்றும் கருஞ் சிறுத்தையின் பெயர்தான் ‘பஹிரா’.
இப்படத்தில் பிரபுதேவா சாரின் கதாப்பாத்திரம் கிட்டத்தட்ட இந்தக் கருஞ் சிறுத்தையின் குணநலன்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு அரணாக, காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய கதாப்பாத்திரம் அவருடையது, அதனால்தான் இந்தப் பெயரை படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம்.
இந்த ‘பஹிரா” படம் சைக்கோ திரில்லர் கலந்த மர்ம வகை படமாகும். என்றாலும், அந்த வகை படங்களிலிருந்து முழுக்க மாறுபட்ட ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்குத் தரும்.
இதுவரையில் இல்லாத பல புதுமைகளை இப்படத்தில் கையாள உள்ளோம். இப்போதே படத்தைப் பற்றி சொல்லி அதன் சுவாரஸ்யங்களை குறைக்க நாங்கள் விரும்பவில்லை. அதை நீங்களே படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒன்று மட்டும் உறுதி… இப்படத்தில் பிரபுதேவா சாரை நீங்கள் இதுவரை பார்த்திராத புதிய அவதாரத்தில், புத்தம் புது கோணத்தில் காண்பீர்கள்.
இத்தருணத்தில் எங்கள் படத்தின் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டதற்கு நடிகர் தனுஷிற்கு பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
தற்போது படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.