நடிகை குஷ்பூவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழு நீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய 5 வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் நடிகை குஷ்பூ-இயக்குநர் சுந்தர்.சி கூட்டணியின் அவ்னி மூவிஸ் நிறுவனம் புதிய திரைப்படத்தைத் துவக்கியுள்ளது.
இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை நிகழ்வுடன் துவங்கியது.
இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ், ஆர்.என்.ஆர்.மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும், நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை – பி.பாலகோபி, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், ‘வீராப்பு’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘தில்லு முல்லு’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் பத்ரி, இந்த படத்தை வசனம் எழுதி இயக்குகிறார்.
மத்திய அரசு பண மதிப்பீட்டை குறைத்தபோது பலரின் வாழ்க்கையில் மிகப் பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கை வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக் கரு.
இந்தப் படம் இன்று காலை பூஜையுடன் துவங்கியது. தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் சுந்தர் சி. குத்துவிளக்கேற்றி படத்தினைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாயகன் பிரசன்னா, நாயகி ஸ்ருதி மாரத்தே மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.