‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ என்கிற புதிய படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற குணசித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். ரேஷ்மி ரத்தோர் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
மேலும், மேலும் மனோபாலா, பாண்டியராஜன், நரேன் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் முழுவதும் கதாநாயகனோடு பயணமாகும் ஒரு கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்துள்ளார்.
படத்துக்கு ஒளிப்பதிவு பி.கே.வர்மா. படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ், எழுதி, இயக்கியிருக்கிறார் இன்பசேகரன்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் இன்பசேகரன் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் படத்தின் இயக்குநர் இன்பசேகரன் பேசும்போது, “இசையமைப்பாளர் D.இமான் நான்கு பாடல்களை கொடுத்துள்ளார். மேலு கூடுதல் போனஸாகவும் ஒரு பாடலை வழங்கியுள்ளார். அப்பாடல் ஆல்பத்தில் மட்டும் இடம் பெறும்.
எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும் என யாரெல்லாம் சொல்லுவார்களோ, அவர்கள் அனைவருக்கும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். அந்த அளவுக்கு பாடல்கள் மிகச் சிறப்பாகவும், இனிமையாகவும் உள்ளன.
இந்தப் படம் காமெடி கலந்த த்ரில்லர் படம். நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி வரும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிதான் இப்படத்தின் கதாநாயகன்.
எல்லோருக்கும் சில விஷயங்கள் தானாக அமையும் என்று கூறுவார்கள். இந்தக் கதைக்கு புதுமுக கதாநாயகன்தான் தேவைபட்டார். அதே போல் நாம் தினம்தோறும் அக்கம்பக்கத்தில் பார்க்கும் முகம்போல் இருக்கவேண்டும் என்று நான் தேடி வந்தபோது சரியான தேர்வாக உமாபதி அமைந்தார்.
படத்தின் கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நாங்கள்தான் அவரை அறிமுகம் செய்கிறோம். படத்தில் அவர் கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாக இருப்பார். கதைக்கு பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
தம்பி ராமையாவின் மகன் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தில் தம்பி ராமையாவின் பங்கு என்ன என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதற்கு பதில் இதுவரை தமிழ் சினிமாவே பார்த்திருக்காத தம்பி ராமையாவை இந்தப் படத்தில் பார்க்கலாம்..” என்றார் இயக்குநர் இன்பசேகரன்.
இசையமைப்பாளர் D.இமான் பேசும்போது, “அதாகப்பட்டது மகா ஜனங்களே’ திரைப்படம் புதுமுகங்கள் நடித்து, புதுமுக இயக்குனருடன் இணைந்து மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ள திரைப்படம்.
எனக்கும் தம்பி ராமையா அவர்களுக்கும் ‘மைனா’ திரைப்படத்தில் இருந்து நல்ல உறவு இருந்து வருகிறது. அவர் தன்னுடைய மகன் நடிக்கும் இப்படத்துக்கு நான்தான் இசையமைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் அவரிடம் ‘இப்போது எனக்கு நிறைய படங்களுக்கு இசையமைக்கும் பணிகள் இருக்கின்றன. ஆதலால் என்னால் இசையமைக்க முடியாது…’ என்று கூறினேன். ‘முதலில் நீங்கள் கதையைக் கேளுங்கள். கதை பிடித்திருந்தால் இசையமையுங்கள்’ என்றார்.
நானும் கதை கேட்டேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு பணிகள் இருப்பதனால், அதில் இருந்து தப்பிக்க நல்ல கதையை நன்றாக இல்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை. அதனால் ‘கதை பிடித்திருக்கிறது நான் இசையமைக்கிறேன்’ கூறினேன்.
என்னுடைய வேலை பளுவை புரிந்துகொண்டு என்னோடு பணியாற்றிய இந்தப் படத்தின் குழுவினருக்கு நான் நிச்சயம் நன்றி கூற வேண்டும். நான் சரியான இடைவேளையில் இப்படத்துக்கு பாடல்களை தரவில்லை. நான் எப்போது தருகிறேனோ, அப்போது பாடலை பெற்றுக் கொண்டு ஒத்துழைத்த குழுவுக்கு நன்றி. என்னோடு வேலை செய்ய வேண்டும் என்று அபிமானத்தோடு இருந்த அந்தக் குழுவுக்கு நான் கூடுதல் கவனத்தோடு பாடல்களுக்கு இசையமைத்து அதை அன்பாக திருப்பி கொடுத்தேன்.
இப்படத்தின் கம்போஸிங்கிற்காக வேலை செய்யும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் இப்படத்தில் அனைத்துமே பீல் குட் பாடல்கள்தான். நானும், யுகபாரதியும் இணைந்து இப்படத்தில் நான்கு பாடல்களை உருவாக்கியுள்ளோம். அதில் மூன்று பாடல்கள் மெல்லிசை பாடல்கள். மீதம் உள்ள ஒரு பாடல் கதாநாயகனின் அறிமுக பாடல் ஆகும்.
‘ஏனடி இப்படி என்ன’ என்ற வரிகளோடு துவங்கும் ஒரு பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலின் கவர் வெர்ஷனாக ஸ்ரேயா கோஷலின் குரலில் ஐந்தாவது பாடல் இருக்கும். இப்பாடல் திரைப்படத்தில் இருக்காது. இப்பாடலை நாங்கள் படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தவுள்ளோம்.
‘ஏனடி இப்படி என்னை’ சிங்கள் பாடல் வெளியானபோது என்னை மிக பெரிய அளவில் உலக தமிழர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஒரு பெண் இலங்கையில் இருந்து இப்பாடலை கேட்டு விட்டு சென்னைக்கு நேரில் வந்து என்னை சந்தித்து வாழ்த்தினார்.
அதிலும் அவர் அவருடைய மகன் கூறியதால் கேட்ட முதல் சினிமா பாடல் இதுதானாம். உங்கள் பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என கூறி என்னை வாழ்த்தியது எனக்கு சந்தோஷத்தை அளித்தது.
இந்த அளவிற்கு இப்பாடல் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்து எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதை வைத்துதான் இப்படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் என்கிறேன்
இந்தப் படத்தில் பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்று காரணத்தால் நான் பாடவில்லை. என் குரலுக்கு இது சரியாக இருக்கும் என்று தோணும் பாடல்களை மட்டும்தான் நான் பாடுவேன்.
இசையமைப்பாளர் இமான், பாடகர் இமானை மதிக்கவே மாட்டார். இந்தப் பாடலுக்கு நான் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கேட்கும்போது நான் நிச்சயம் பாடுவேன். மற்றபடி நான் இசையமைக்கும் பாடல்களுக்கு சரியான பாடகர்கள்தான் குரல் கொடுப்பார்கள்.
இப்படத்தின் பாடல்களுக்கு வாழ்நாள் அதிகம் இருக்கும். எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் இப்படத்தின் பாடல்களை அனைவரும் நியாபகம் வைத்து கொள்வார்கள். அந்த ஒரு தரம் இப்படத்தில் உள்ளது என்பதை நான் பெரிதும் நம்புகிறன்.…” என்றார் இசையமைப்பாளர் D.இமான்.













