full screen background image

“அஸ்வின்ஸ் 2-ம் பாகமும் வரலாம்” – வசந்த் ரவி பேச்சு..!

“அஸ்வின்ஸ் 2-ம் பாகமும் வரலாம்” – வசந்த் ரவி பேச்சு..!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல் இணைத் தயாரிப்பில் சக்தி ஃபிலிம் பேக்டரி பாபிநீடு பி வழங்கிய அறிமுக இயக்குநர் தருண் தேஜாவின் இயக்கத்தில், வசந்த் ரவி நடித்திருக்கும் ‘அஸ்வின்ஸ்’ படம் இப்போதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இதற்கு பத்திரிக்கயாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேபில் நடந்தது.

இந்த நிகழ்வில் படத்தின் டிசைனர் சிவா பேசியிருப்பதாவது, “இந்த ‘அஸ்வின்ஸ்’ எனக்கு மிகவும் முக்கியமான படம். ஹாரர் வகை படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில்  ‘மாயா’ படம்தான் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. அதற்கு பிறகு ஹாரர் படமாக ‘அஸ்வின்ஸ்’ அமைந்தது. என்னுடைய தயாரிப்பாளர், இயக்குநர், படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் பேசும்போது, “நாங்கள் மிகச் சிறிய அணியாக ஆரம்பித்தோம். தொடர்ந்து நீங்கள் கொடுத்த ஆதரவினால் வளர்ந்து இப்போது படம் வெற்றி பெற்றுள்ளது. சக்திவேலன் சார் கொடுத்த ஆதரவும் மிகப் பெரியது. என்னுடன் வேலை பார்த்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கும் நன்றி” என்றார்.

கலை இயக்குநர் ஜான் பாலா பேசும்போது, “எனக்கு இந்த ‘அஸ்வின்ஸ்’ மிக முக்கியமான படம். படத்தின் கதைய கேட்டபோதே எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. கதை கேட்டுவிட்டு எனக்குத் தோன்றிய சில ஐடியாக்களையும் சொன்னேன்.

படத்தில் வரும் குதிரை சிலையை வரைந்து அதை மோல்டர் மூலம் சிலையாக்கி இயக்குநரிடம் காண்பித்த பிறகுதான் அவர் என் முகத்தையே நன்றாக பார்க்க ஆரம்பித்தார். அந்த அளவுக்கு படத்தில் அது முக்கியமானதாக இருந்தது. என்னுடன் வேலை பார்த்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் அவ்வளவு சப்போர்ட் செய்தார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் எட்வின் பேசும்போது, “இயக்குநர் என்னிடம் இந்தப் படத்தின் கதையை சொன்னபோது இது நிச்சயம் எனக்கு புது அனுபவமாக இருக்கும் என்பது தெரிந்தது. இந்த அனுபவத்தைக் கொடுத்த படக் குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் முரளி பேசும்போது, “மூன்று வருடங்களுக்கு முன்பு குறும் படமாக ஆரம்பித்தோம். எங்கள் கனவுகளுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த பிரசாத் சார், பாபி சாருக்கு நன்றி. இதுபோல, கண்டெண்ட் தொடர்பான படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் சக்தி சாருக்கு நன்றி” என்றார்.

நடிகர் உதய் பேசும்போது, “உதய்ராஜ் என்ற என்னுடைய பெயரை உதய்தீப் என மாற்றி இருக்கிறேன். படத்திற்கு ஆதரவு கொடுத்த ஊடகத்தினருக்கு நன்றி. நான் படத்திற்கு உள்ளே வர காரணமாக இருந்த எடிட்டர் வெங்கட்,  நரேன் அண்ணாவுக்கு நன்றி.

’பாணா காத்தாடி’ படத்திற்கு பிறகு வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். திரையில் ஒரு காட்சியாவது வராதா என ஏங்கி இருந்தேன். ’கைதி’க்கு பிறகு எனக்கு பெரிய வெற்றி என்றால் ‘அஸ்வின்ஸ்’தான். படத்திற்காக நிறைய வொர்க் ‌ஷாப் பயிற்சி எல்லாம் எடுத்தோம். வசந்த் ரவி அண்ணா ஒரு திறமையான நபர். சரசு, விமலா மேம் என அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை சரஸ்வதி மேனன் பேசும்போது, “பொதுவாக ஹாரர் படம் பார்ப்பதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், எனக்கு படத்தில் எப்படி பயமுறுத்துவது என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் அப்படி ஒரு திறமை இருப்பதை வெளிக்கொண்டு வந்தது இந்த ‘அஸ்வின்ஸ்’ படம்தான்.

எட்வின் சார், பாலா சார், விமலா மேம் என அனைவருக்கும் நன்றி. ஊடகங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. எனக்கு இந்த முதல் வெற்றியைக் கொடுத்துள்ளீர்கள். படம் 50-வது நாள் வரையிலும் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

நடிகை விமலா ராமன் பேசும்போது, “இந்த ’அஸ்வின்ஸ்’ படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரக் கூடிய சக்தி சாருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் பிரசாத் சார், பாபி சார், பிரவீன் சாருக்கு நன்றி.

படத்தின் விமர்சனங்களில் நான் பார்த்தவரையில் படத் தொகுப்பு, சவுண்ட் மிக்ஸிங், மியூசிக் என அனைத்து டிபார்ட்மெண்ட்டையும் பாராட்டி இருந்தார்கள். என்னுடைய சக நடிகர்கள் எல்லாருமே அற்புதமாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். என்னுடைய இயக்குநர் தருணுக்கும் ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் தருண் தேஜா பேசும்போது, “நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கதையை நான் எழுதும்போதே பார்வையாளர்களுக்கு நல்லதொரு ஹாரர் சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்க வேண்டும் என்றுதான் எழுதினேன். அது சரியாக போய் சேர்ந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

இரண்டு, மூன்று முறை பார்வையாளர்கள் திரும்ப வந்து பார்க்கிறார்கள் என்று சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்கிறேன். என்னுடைய குறும் படம் பார்த்து பாராட்டி வாய்ப்பு கொடுத்த பிரவீன் சாருக்கும், பாபி சாருக்கும், பிரசாத் சாருக்கும் நன்றி.

படமாக உருவான பின்பு சக்தி சார் அவ்வளவு ஆதரவு கொடுத்தார். மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்த என்னுடைய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், எடிட்டர் என அனைவருக்கும் நன்றி. 

நடிகர்கள் யாரையும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை என நினைக்கிறேன். வொர்க்‌ஷாப்பில் அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். என்னுடைய குறும் படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளரிடம் கூட்டிச் சென்றதே விமலா ராமன் மேடம்தான். அவர் எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்திருக்கிறார்.

நடிகர் என்பதையும் தாண்டி அஸ்வின் எனக்கு நல்ல சகோதரர். கிளைமாக்ஸில் வசந்த் ரவியின் கடின உழைப்பு பாராட்டுதலுக்குரியது” என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் பேசும்போது, “எல்லாப் படங்களும் வெற்றிப் பெறும்போது திருப்தி கிடைக்கும். ஆனால், இந்த ‘அஸ்வின்ஸ்’ வெற்றிப் பெற்றிருக்கும்போது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. நான் எதிர்பார்த்த வெற்றி இந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை என்றால் மிகப் பெரிய அதிருப்தி கிடைத்திருக்கும். ஆனால், அதை எல்லாம் தகர்த்து இப்படி ஒரு வெற்றி விழாவில் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ’அஸ்வின்ஸ்’ எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் போய் பார்த்த ஒரு படம். வசந்த்ரவி, விமலாராமன், சரஸ்வதி என எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். தொழில் நுட்ப ரீதியாகவும் சிறந்த சினிமா அனுபவத்தை இது கொடுத்திருக்கிறது. அவ்வளவு மகிழ்ச்சியாக வெளியிட்டேன். வசந்த் ரவி சார், இயக்குநர் என படக் குழுவின் அனைவருக்கும் கிடைத்துள்ள இந்த வெற்றி நியாயமானது” என்றார்.

நடிகர் வசந்த் ரவி பேசும்போது, “வளர்ந்து வரக் கூடிய நடிகருக்கு வெற்றி என்பது மிக முக்கியமானது. இதற்கு காரணமாக இருந்த என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பாபி சார் தமிழில் இனி பெரிய படங்கள் தயாரிப்பார். அதற்கு ‘அஸ்வின்ஸ்’ முதல் படமாக இருக்கும் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

தருண் ஒரு எனர்ஜியான இயக்குநர். ‘ராக்கி’ அருண் எப்படி இப்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ இயக்குகிறாரோ அதுபோல தருணுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தியேட்டர் விசிட் போனபோது, பார்வையாளர்கள் கொடுத்த வரவேற்பு அவ்வளவு எமோஷனலாக இருந்தது. இதுபோல, ரிப்பீட் ஆடியன்ஸ் சமீப காலத்தில் எந்தவொரு படத்திற்கும் வரவில்லை. இது எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்தின் இரண்டாவது பாகம் குறித்தான அறிவிப்பு சீக்கிரம் வரலாம்” என்றார்.

Our Score