விரைவில் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப்படம்தான் ‘அருவா சண்ட.’
இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். அவர் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தபோது என்னையறியாமல் கண் கலங்கிவிட்டதாக நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார்.
இது பற்றி சரண்யா பொன்வண்ணன் பேசும்போது, “என்னை போன்ற குணச்சித்திர நடிகைகளுக்கு இது போன்ற படம் அமைவது மிகவும் அரிது, சமீப காலங்களில் நான் கதை கேட்டவுடனே நடிக்க ஒப்புக் கொண்ட படம் இது மட்டும்தான்.
விஜய் சேதுபதியுடன் ‘தென்மேற்கு பருவக் காற்று’ படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுவபவத்தை இந்த படத்தில் உணர்தேன். இதிலும் நாயகன் தம்பி V.ராஜா புதிது ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை, சிறப்பாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார்.
இது ஒரு மிகச் சிறந்த கதைக் களனைக் கொண்ட திரைப்படம். படத்திற்கு டப்பிங் பேசும்போதுகூட என்னை அறியாமலே கண் கலங்கினேன். அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி இந்தப் படத்தில் உள்ளது.
இது போன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக, கதை நாயகனாக நடித்துள்ள தம்பி V.ராஜாவிற்கு வாழ்த்துக்கள். அவர் மேலும் பல சமூக சிந்தனையுள்ள படங்களை தயாரித்து நடிக்க வேண்டும்…” என்று பாராட்டினார்.
சென்சார் அதிகாரிகளின் பாராட்டுக்களுடன் ‘யூ’ சான்றிதழ் பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் இந்த படத்தை ஆதிராஜன் இயக்கியுள்ளார். நாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார்.
கவிப்பேரரசுவின் வரிகளுக்கு தரண் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சந்தோஷ் பாண்டி கவனிக்க, படத் தொகுப்பை V.J.சாபு ஜோசப் செய்துள்ளார், கலை இயக்கத்தை சுரேஷ் கல்லேரியும், சண்டை காட்சிகளை தளபதி தினேஷூம், நடனத்தை தீனா மாஸ்டரும், ராதிகா மாஸ்டரும் அமைத்துள்ளனர்.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் V.ராஜா கதை நாயகனாக நடித்து, தயாரித்துள்ள இப்படம் திரையரங்குகளுக்காக காத்திருக்கிறது.











