கே.பி.ஆர். எண்ட்டெர்டெயின்மெண்ட் சார்பில் கே.பி.ராஜேந்திரன் தயாரிக்கும் புதிய படம் ‘அம்மாயி’.
இதில் வினய், வரலட்சுமி சரத்குமார் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். மேலும் சாம்ஸ், மயில்சாமி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு – சரவணன், படத் தொகுப்பு – ஜெயசங்கர், கலை – ஜான் பிரிட்டோ, சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட், ஸ்டில்ஸ் – தேனி சீனு, மக்கள் தொடர்பு – இரா. குமரேசன், அறிமுக இயக்குநரான ஜி.சங்கர் எழுதி, இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் துவக்க விழா இசைஞானி இளையராஜா முன்னிலை வகிக்க படத்தின் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க பூஜையுடன் இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவில் இனிதே துவங்கியது.
விழாவில் தயாரிப்பாளர் கே.பி.ராஜேந்திரன் பேசுகையில், “இந்தப் படத்தின் துவக்க விழாவுக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தினை தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் இசைஞானியுடன் பணியாற்றுவது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது..” என்றார்.
படத்தின் நாயகன் வினய் பேசுகையில், “இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படம் எனக்கு நல்ல படமாக அமையுமென நம்புகிறேன். என் ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு உற்சாகமளிக்கும் என் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் கதாநாயகியான வரலஷ்மி ஏற்கனவே அவர் ஒப்பு கொண்ட பணியின் காரணமாக, தான் வர இயலாததை தெரிவித்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.” என்றார்.
நடிகர் மயில்சாமி பேசுகையில் “ஒவ்வொரு படம் துவங்கும்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு படம் என்னை போன்று பலருக்கு வேலை கொடுக்கிறது. இப்படத்தின் கதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் படம் முழுவதும் வருவது போல் எனது கதாபாத்திரம் இருக்குமென இயக்குனர் கூறியிருக்கிறார். ஒரு படத்தில் ஒரு ராஜா இருந்தாலே வெற்றிதான். எங்களுக்கு இளையராஜாவே இருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்…?” என்றார்.
நடிகர் சாம்ஸ் பேசுகையில், “நான் இசைஞானியின் இசைக்கு அடிமை. அவர் இசையமைக்கும் படத்தில் நான் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தில் சரியான ஒரு பாத்திரத்தை எனக்கு அளித்திருக்கும் இயக்குநர் இப்படம் என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் என கூறியிருக்கிறார். மயில்சாமி அண்ணனுடன் நடிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். அவருடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்..” என்றார்.
இறுதியாக பேசிய இயக்குநர் ஜி.சங்கர், “இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர் கே.பி.ராஜேந்திரன் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நான் தெய்வமாக நினைக்கும் இசைஞானி இளையராஜா, எனது படத்திற்கு இசையமைப்பதை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை…” என்றார்.














