தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’.
இந்தப் படத்தில் செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மலையாளத்தின் முன்னணி நடிகையான அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ‘கூத்துப்பட்டறை’ ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடிக்கின்றனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த வருடம் வெளியாகி பல சர்வதேச விருதுகளை குவித்திருக்கும் ’டு லெட்’ படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
தயாரிப்பு – தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9, இயக்குநர் – ரா.சுப்பிரமணியன், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, ஒளிப்பதிவு – இரா.செழியன், இசை – விஷால் சந்திரசேகர், படத் தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – சிவராஜ், சண்டை இயக்கம் – சுப்ரீம் சுந்தர், புகைப்படம் – சாரதி, மக்கள் தொடர்பு – ஆ.ஜான், டிசைன்ஸ் – தண்டோரா, தயாரிப்பு மேற்பார்வை – மா. சிவக்குமார், நிர்வாகத் தயாரிப்பாளர் – முத் அம் சிவா – பார்த்திபன் சன்ராஜ்.
இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா ‘அமீரா’ என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் மம்மூட்டியுடன் இரண்டு படங்கள், திலீப்புடன் ஒரு படம் என வெற்றிப் படங்களில் நடித்து மலையாளத் திரையுலகத்தில் மிகவும் பரபரப்பான நாயகியாக இருக்கிறார் அனு சித்தாரா.
‘அமீரா’ என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் ‘அமீரா’ என பெயர் வைத்துள்ளனர்.
மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டிருந்த படக் குழுவினர் அதற்கும் சில நாட்கள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் கூறுகிறார். இதற்குக் காரணம் படத்தின் கதாநாயகி அனு சித்தாராதானாம்.
மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவரான அனு சித்தாரா, தமிழிலும் அதேபோல ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி கூடுமானவரை ஒரே டேக்கில் நடித்து அசத்துகிறாராம்.
மொழி தெரியாதவர் என்பதால் திட்டமிட்டதைவிட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்குமோ என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் படக் குழுவினருக்கு ஆச்சரியம் கொடுக்கும்வகையில் தனது இயல்பான நடிப்பால் கவர்ந்திருக்கிறார் அனு சித்தாரா.
“அனு சித்தாராவின் கண்கள் காட்டும் நடிப்பில், ஒரு படத்தையே முடித்துவிடலாம்” என்கிறார் இயக்குநர் இரா.சுப்ரமணியன்.
இத்திரைப்படம் தென்காசி, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்தது. இப்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
“சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடித்து தங்களது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டனர். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பும், கிளைமாக்ஸும் படமாக்கப்பட்டுவிட்டால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும்” என்கிறார் தம்பி திரைக்களத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிக்குமரன்.